April 24, 2024
  • April 24, 2024
Breaking News
June 15, 2019

சிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…

By 0 2338 Views

‘ஃபர்ஸ்ட் காபி புரொடக்ஷன்’ சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படமான ‘சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ளனர் என்பது தெரிந்த தகவலாக இருக்கலாம்.

Akshitha

Akshitha

பெண்கள் முக்கியத்துவம் பெற்ற தயாரிப்பில் அதற்கு உழைத்த அத்தனைப் பெண்களும் ‘சிறகு’ பெயர் பொரிக்கப்பட்ட பார்டருடன் ஒரே நிற புடவை அணிந்து வந்திருந்தது சிறப்பான காட்சி.

விழாவில் படத்தின் தூண்களான தயாரிப்பாளர் மாலா மணியன், இயக்குநர் குட்டி ரேவதி பேசியதிலிருந்து…

தயாரிப்பாளர் மாலா மணியன் –

“இந்த விழாவுக்கு பெரிய வி.ஐ.பி-க்களை கூப்பிடாததற்குக் காரணம் இந்த டீம் புதியது. இவர்களை இந்த விழா நாயகர்களாக காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வேறு யாரையும் அழைக்கவில்லை. படத்தை முடித்ததும் மணி ரத்னம் சாரிடம் ஒரு வார்த்தை தான் கேட்டேன். உடனே சரி என்று பாடலை வெளியீட்டார். ஏ.ஆர் ரகுமான் சாரிடம் ரேவதி கேட்டார். அவரும் உடனே ஒப்புக்கொண்டார்.

இந்தப்படத்தைத் தேர்ந்தெடுக்க காரணம். சின்ன பட்ஜெட்டில் வித்தியாசமான படமா இருக்க வேண்டும். அதே சமயம் நல்ல கதையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். சென்னையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரையான படப்பிடிப்பை குறிப்பிட்ட காலத்தில் எடுத்து முடித்தோம்.

ஹரி, அக்ஷிதா , நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா எல்லாரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்தப்படம் எடுக்கும் போது ஒரே விஷயம்தான் மனதில் இருந்தது – இந்தப்படத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் மகிழ்வான நினைவாக இருக்க வேண்டும் என்று. அது அப்படியே நடந்துள்ளது..!”

Sragu Team

Sragu Team

இயக்குநர் குட்டி ரேவதி –

“இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்ததன் பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள் – வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள்.

இந்த நாளில் இசையை வெளியிட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை செய்வது போல செய்திருக்கிறார்.

Hari Krishnan

Hari Krishnan

நடிகர் ஹரி கிருஷ்ணன். நாங்கள் நினைத்த ஒரே ஹீரோ அவர்தான். ஹீரோயின் அக்ஷிதா நின்று விளையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இந்தப்படத்திற்குப் பிறகு அவர் நெடுந்தூரம் பயணிப்பார் என்று நம்புகிறேன். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் கேரக்டர்களை நீங்கள் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

எனக்கு வாழ்வில் மிக முக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படி வரிசைப்படுத்தினால் அதை மாலா மணியன் அவர்கள் மூலமாகத்தான் துவங்க வேண்டும். சினிமாவில் இப்படியொரு ஆளைப் பார்ப்பது அரிது. இந்தப்படம் இருவரின் பயணம்தான். சரியாகத் திட்டமிட வேண்டுமென்பதையும் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும் என்பதையும் மாலா மணியன் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்..!”