சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் நடந்து வரும் நிலையில் இப்போராட்டம் இன்றுடன் 1,000-வது நாளை எட்டியுள்ளது.
இதனையொட்டி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிப்படையக் கூடிய ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏகனாபுரத்தை மையப்படுத்தி நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் 1,000-வது நாளை எட்டியுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்தபோதும் விமான நிலையம் அமைக்கும் முடிவில் அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசு சார்பில் பந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி விரைவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1,000-வது நாள் போராட்டம் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் சுந்தர்ராஜன் பங்கேற்று பேசினார்.
இந்த அமைப்பின் பல்வேறு நிர்வாகிகள் பரந்தூர் விமான நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீர் நிலைகள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர்.
.