இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் 3வது நாளாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
பாகிஸ்தானின் அத்துமீறல் இந்திய நகரங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்ததுடன், ராணுவ தளங்களையும் குறி வைத்தது. இதற்கு இந்தியப்படைகள் கடுமையான பதிலடி கொடுத்தன. இந்த தாக்குதலை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அவர்களின் இரட்டை வேடம் போடுவதை காட்டுகிறது.
தனது நடவடிக்கைக்கு பொறுப்பு ஏற்பதற்கு பதிலாக அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்களில் இந்திய ஆயுதப்படைகளே தாக்குதல் நடத்திவிட்டு, தங்கள் மீது பழிசுமத்த முயற்சி நடப்பதாக பாகிஸ்தான் பொய்யான குற்றம்சாட்டுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர்கள் கை தேர்ந்தவர்கள். இதனை உலகம் நன்கு அறியும். தவறான தகவல்களை பரப்பி உலகத்தை பாகிஸ்தான் ஏமாற்றுகிறது. பாகிஸ்தான் தாக்குதல் திட்டம் ஒரு போதும் பலிக்காது.
பூஞ்ச்சில் உள்ள குருத்வாராவை பாகிஸ்தான் தாக்கியது. அதில் சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த சிலர் உயிரிழந்தனர். ஆனால் ட்ரோன் மூலம் பாகிஸ்தானில் உள்ள குருத்வாராவை குறிவைத்து தாக்கியதாக அந்நாடு தவறான தகவலை பரப்புகிறது. இதுவும் அப்பட்டமான பொய். இன்று பூஞ்ச்சில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கடுமையான தாக்குதலில் கிறிஸ்தவ பள்ளியில் இருந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். பெற்றோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக இந்த பள்ளியில் குழந்தைகள், ஆசிரியர்கள் அடைக்கலம் புகுந்தனர். நல்லவேலை இந்த பள்ளி மூடப்பட்டது. இல்லையென்றால் இழப்பு அதிகமாக இருந்து இருக்கும். மத மோதலை தூண்டுவதற்காக பாகிஸ்தான் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மதரீதியில் தகவலை அந்நாடு சேர்க்கிறது. தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு கர்த்தார்பூர் வழித்தடம் அடுத்து அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.