June 8, 2025
  • June 8, 2025
Breaking News
June 4, 2025

பேரன்பும் பெருங்கோபமும் திரைப்பட விமர்சனம்

By 0 59 Views

தலைப்புக்குக் கதை பொருந்துகிறதோ இல்லையோ படம் சொல்ல வந்த விஷயம் இதுதான்… 

சாதிய உணர்வு என்பது பிறப்பால் வருவது அல்ல வளர்ப்பால் வருவது என்பதைத்தான் இந்த படத்தின் மூலம் இயக்குநர் சிவபிரகாஷ் சொல்ல  வந்திருக்கிறார்.

அதை நீட்டி முழக்கி பிரித்துக் கட்டி 10, 15 வருடங்களுக்கு முந்தைய பாணியில் கொடுத்திருக்கிறார் அவர்.

நாயகன் விஜித் பச்சான் ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். அந்த மருத்துவமனையின் அவலங்கள் பற்றி அவ்வப்போது அவர் அந்த ஏரியா நிருபவரிடம் செய்திகள் சொல்ல அது பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கிறது. 

அது சாதிய உணர்வுள்ள மக்கள் நல வாழ்வுத் துறை அமைச்சர் மைம் கோபிக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. மைம் கோபி தான் பெற்ற மகனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினராக்க முயற்சி செய்து வரும் வேளையில் அவர் பெயரை கெடுக்கும் விதமாக இந்த விஷயங்கள் நடந்து வர அந்த மருத்துவமனையில் குழந்தைக் கடத்தலும் நடைபெறுவது மாநிலம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்துகிறது. 

இதற்குக் காரணமானவர்  களைக் கண்டுபிடித்து தண்டிக்க அமைச்சர் உத்தரவிட, டிஎஸ்பி சாய் வினோத்திடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அவர் புலனாய்வு செய்த வகையில் விஜித் பச்சானைக் கைது செய்து ரகசியமாக விசாரணை நடத்துகிறார்.

அதில் அமைச்சரின் கடந்தகால வாழ்க்கை பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர அதன் முடிவு என்ன ஆனது என்பது கதை. 

இந்தக் கதையை பவா செல்லத்துரை சொல்ல அது காட்சிகளாகத் திரையில் விரிகிறது.

இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் இயக்குனர் தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான், இந்தக் கதைக்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். இயல்பான நடிப்பு அவருக்கு கை வரப் பெற்று இருக்கிறது. 

அவரது வயதுக்குத் தோதான நவீனதத்துவப் பின்னணி கொண்ட கதைகளில் நடிப்பதன் மூலம் மேலும் புகழ்பெற முடியும். 

கேரள வரவான நாயகி ஷாலி நிவேகாஸ் கதைப் படியே ஒரு மலையாளியாக இருப்பதால் பாத்திரத்துக்கு சரியாகப் பொருந்தி விடுகிறார். காதல் மணம் புரிந்து வந்த நிலையில் சாதிக் கொடுமைக்கு இலக்காகி அவருக்கு நேரும் துன்பங்கள் நம்மைப் பதை பதைக்க வைக்கின்றன.

அமைச்சராக வரும் மைம் கோபி, எல்லா படங்களிலும் என்ன செய்வார்களோ அதையே இந்தப் படத்திலும் செய்திருக்கிறார்.

அவரது கையாளாக வரும் அருள்தாசுக்கு கொடூரமான வேடம். கொலைகளை அனாயாசமாக செய்கிறார்.

மற்ற எல்லா பாத்திரங்களிலும் வருபவர்கள் ஒருவித நாடகத் தன்மையோடு நடித்திருப்பதற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல என்பது புரிகிறது. இயக்குனர் அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்க வேண்டும். 

இதையெல்லாம் தாண்டி இந்த படம் வெற்றி பெற்ற பிற படங்களை பார்த்து சூடு போட்டுக் கொண்டு எடுத்த படமாக தோன்றுகிறது. சமீபத்தில் சாதி கொடுமைகளை முன்னிறுத்திய பல படங்களின் சாயல் இந்த படத்திலும் தெரிகிறது. 

இதையெல்லாம் தாண்டி சாதியை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும், சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவும் விஜித் மச்சான் செய்த ஒரு செயல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் அதையெல்லாம் துணை கதையாக ஒத்துக் கொள்ளலாமே தவிர இயல்பில் சாத்தியமே இல்லாத புனைவாக இருக்கிறது.

விஜித் பச்சானை டிஎஸ்பி சந்திக்கும் அறிமுகக் காட்சியில் விஜித் ஏதோ பெரிதாக புரட்சி செய்துவிட்டு வந்திருப்பவர் போல அடையாளம் காட்டப்படுகிறார். ஆனால் பிளாஷ்பேக்கில் அப்படியெல்லாம் எதையும் செய்யாமல் சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டு ஊரை விட்டு ஓடி வந்தவராக இருக்கிறார். 

சாதி வெறி பிடித்த ஊரில் ஊருக்கு நடுவே பல கொலைகளைப் பார்த்தும், தன் அம்மாவே சாதி வெறி பிடித்தவராக இருந்தும், காதலியை கேரளாவில் இருந்து கூட்டிக்கொண்டு நேரே தன் ஊருக்கு விஜித்  வருவதில் எந்த லாஜிக்கும் இல்லை.

காவல் அதிகாரிகளுடனும் நீதிபதிகளுடனும் விஜித் பச்சான் நடந்து கொள்ளும் முறையும்  இயல்புக்கு மாறானது.

இளையராஜாதான் இசை என்று டைட்டில் சொல்வதால் மட்டுமே அதை நம்ப வேண்டியிருக்கிறது.

ஜே பி தினேஷ்குமாரின் ஒளிப்பதிவியிலும் நவீனம் எதுவும் இல்லை.

கதை ஒரு பக்கம் காட்சிகளாக விரிந்து கொண்டிருக்க இடைஇடையே பவா செல்லதுரை தொடர்ந்து கதை சொல்லிக்கொண்டே இருப்பது ஒரு கட்டத்தில் அயர்வைத் தருகிறது.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் வந்த ஒரு படத்தை பார்த்தது போன்ற உணர்வே மேலிடும்…

பேரன்பும் பெருங்கோபமும் – திரை நாடகம்..!

– வேணுஜி