April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • சிறப்புக் கட்டுரை
  • உயர்விலும் தாழ்விலும் உச்சம் பார்த்த தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் மறைந்த நாள் இன்று
November 1, 2020

உயர்விலும் தாழ்விலும் உச்சம் பார்த்த தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் மறைந்த நாள் இன்று

By 0 1521 Views

தமிழ் திரையுலகின் அந்தக் கால சூப்பர் ஸ்டார் நடிகரும் பாடகருமான தியாகராஜ பாகவதர் 1959-ம் ஆண்டு இதே நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார்.

1909- ஆம் வருடம் ஜனவரி 3 ஆம் தேதி மாயவரததில் பிறந்த மாயவரம் கிருஷ்ணசுவாமி தியாகராஜன் நடிகரான பின் எம்கேடி என்று சுருக்கமாகவும் அழைக்கப்பட்டார்.

1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அவர் நடித்த 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.

1944-ல் வெளியான இவரின் சாதனைப் படமான ‘ஹரிதாஸ் ‘, 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை பெற்றது.

அந்த‘ஹரிதாஸு’க்குப் பிறகு பல தயாரிப்பு நிறுவனங்கள் அவரின் வீடு தேடி வந்து பணத்தைக் கொட்டின. ஆனால், ‘ஹரிதாஸு’க்குப் பிறகு அவர் சிறையில் இருக்கவேண்டிய நிலை. அட்வான்ஸ் கொடுத்த நிறுவனங்கள் சிறையில் போய் அவரின் சட்டையைப் பிடிக்க ஆரம்பித்தன. ‘

‘வதன்’, ‘நம்பியாண்டார் நம்பி’, ‘ராஜயோகி’, ‘மோகினித்தீவு’, ‘பக்தமேதா’ போன்ற பல படங்கள் பூஜையோடு நின்றுவிட்டன. தயாரிப்பாளர்கள் அவரின் கழுத்தை நெரிக்க, தன் தம்பியைக் கூப்பிட்டு சொத்துகளை விற்று கடன்களைத் திருப்பிச் செலுத்தினார்.

இதனால்தான் வெளியே வந்தபிறகு அவருக்கு சினிமா உலகம் கசந்தது. பாகவதர் கடைசி காலத்தில் பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்தார் என்று எல்லாம் பலர் எழுதுகிறார்கள். பாகவதரின் சிறைக்குப் பின்னான வாழ்க்கை தாழ்ந்து போனதே தவிர இவர்கள் சொல்லும்படி இல்லை என்பதே உண்மை…

Tomb of MK Thiyagaraja baghavathar

Tomb of MK Thiyagaraja baghavathar

தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் விஸ்வகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி கிருஷ்ணமூர்த்தி – மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார் தியாகராஜர். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார்.

சிறு வயதில் பள்ளிப் படிப்பில் அவருக்கு நாட்டம் இல்லை. பாட்டு மற்றும் இசைக்கச்சேரிக்கு அதிகமாக செல்வார். அங்கு பாடப்படும் பாடல்களை, கேட்போர் வியக்கும் வகையில் ராகம் மாறாமல் பாடிக்காட்டுவாராம்.

அதன்பின்னர் பாட்டு மற்றும் நடிப்பில் கற்றுத் தேர்ந்த தியாகராஜர் திரைத்துறையில் முத்திரை பதித்தார். தங்க நிறம், கோதுமை நிறம், நிலவொளி வீசும் முகம், மயக்கும்பார்வை, என்று ஒரு பெண்ணை வர்ணிப்பதுபோலவே எல்லோராலும் வர்ணிக்கப்பட்டார் எம்.கே.டி. அந்த அளவிற்கு வசீகரம் கொண்டிருந்தார்.

எல்லோரையும் வசீகரிப்பதற்கு என்றே அழகுக்கே அழகூட்டும் விதமாக பல மணிநேரம் மெனக்கெட்டிருக்கிறார். தினமும் காலையில் வெந்நீரில் பன்னீர் ஊற்றிக்கலந்து, குளித்திருக்கிறார். அரைத்த சந்தனம், சவ்வாது, புனுகு, அத்தர் போன்ற இயற்கை மணம் நிறைந்த வாசனை திரவியங்களை உடலில் பூசிக்கொண்டு, பட்டுவேட்டி- சட்டை, அங்கவஸ்திரம் அணிவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

தினமும் புத்தாடைதான் அணிவது என்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார் என்ற பேச்சும் இருக்கிறது.

’யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது மாதிரி, காற்றில் கலந்துவரும் நறுமணத்தை வைத்தே எம்.கே.டி. வருகிறார் என்று உணர்ந்துகொள்வார்கள். எம்.கே.டி. வந்துவிட்டு போனபின்னரும் கூட நீண்ட நேரத்திற்கு அந்த இடத்தில் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் என பூரித்துச்சொல்கிறார்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அழகில் ஆண்களும் பெண்களும் மயங்கிக்கிடந்தார்கள். அந்த எம்.ஜி.ஆரே ஒரு காலத்தில் எம்.கே.டியின் அழகில் சொக்கிக்கிடந்தார் என்போருமுண்டு.

அந்தக்காலத்தில் இவரைக்காண கூடும் கூட்டத்தை, ‘ஜவகர்லால் நேருவுக்கு கூடும் கூட்டத்தை விடவும் அதிகம்’என்றே விமர்சனம் செய்தனர். ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிப்பார்களாம்.

அந்த அளவிற்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம். ஒரு சமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க நேரிட்டது. பாகவதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது.

ரயில் வந்தவுடன் கார்டு, ரயிலை நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர் என்றொரு தகவலுமுண்டு.

இப்பேர்பட்டவர் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமி காந்தன் கொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர், விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நடிப்பில் இருந்து விலகி இருந்த அவருக்கு, ஈரல் நோய் பாதிப்பு ஏற்பட்டது.

அவர் கடைசியாக சிவகாமி படத்தில் நடித்தார். அந்த படத்தின இறுதி காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்.

கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இறுதியில் 1959-ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னை அரசு பொதுமருத்துமனையில் காலமானார்.

எம் கே டி போல் வாழ்ந்தவரும் இல்லை தாழ்ச்சி அடைந்தவரும் இல்லை எனலாம்.