March 29, 2024
  • March 29, 2024
Breaking News
February 23, 2022

காஷ்மீர் பெண்ணின் உடலில் துடிக்கிறது தமிழரின் இதயம் – எம்ஜிஎம் சாதனை

By 0 585 Views

மிகச் சிறந்த சிகிச்சை அனுபவத்தை நோயாளிகள் பெறவும், மருத்துவ நிபுணர்களின் நிபுணத்துவம் வெளிப்படவும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் ஆர்வம் கொண்ட அதிநவீன மருத்துவமனையாக எம்ஜிஎம் ஹெல்த் கேர், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. ‘மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி…’ என்பதே இவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது.

கடந்த ஆண்டுகளில் எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மருத்துவ சிறப்பை நிறுவுவதற்கான முயற்சியில் பல புதுமையான சிக்கலான அறுவை சிகிச்சைகளை மருத்துவ நிபுணர்களின் குழு செய்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் அதி நவீன கருவிகள் மற்றும் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது ‘எம்ஜிஎம் ஹெல்த்கேர்…’

அந்தவகையில் சிகிச்சைக்காக 3000 கிலோ மீட்டர் பயணித்து சென்னை வந்த காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்த 33 வயதான இளம்பெண் ‘ஷாஸாதி பாத்திமா’ இதயம் இறுக்கம் அடையும் ‘ரெஸ்ட்ரிக்டிவ் கார்டியோமயோபதி’ என்ற பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்தார். 

அவரது உயிரை காப்பாற்ற மிக விரைவாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கவே கடந்த 2001 டிசம்பர் 31-ஆம் தேதி அவர் எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2002 ஜனவரி 26-ஆம் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மூளைச்சாவு அடையவே அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்க முன்வந்தார்கள். இதைத்தொடர்ந்து ‘கிரீன் காரிடார் ‘ உருவாக்கப்பட்டு தானமாக பெறப்பட்ட இதயம் சென்னையில் உள்ள எம்ஜிஎம்முக்கு மிக விரைவாகக் கொண்டு வரப்பட்டு, அதி ஆபத்து நிறைந்த இதய மாற்று அறுவை சிகிச்சை ஷாஸாதி பாத்திமாவுக்கு நிகழ்த்தப்பட்டது.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட அந்த அறுவை சிகிச்சையில் அவர் உடல்நலம் தேறி காஷ்மீரில் தன்னுடைய புதிய வாழ்வை தொடங்குவதற்கு தயாராகி வருகிறார். காஷ்மீரில் கூலி வேலை செய்துவரும் ஷாஸாதி பாத்திமா தன்னுடைய சகோதரருடன் எம்ஜிஎம் ஹெல்த்கேர் இங்கு வந்து இந்த சாதனையை நிகழ்த்த காரணம் ஆகி இருக்கிறார்.

இந்த அறுவை சகிச்சைக்கு பெரிய தொகை தேவைப்பட அதனை ஐஸ்வர்யா அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. இந்த உதவி குறித்து ஐஸ்வர்யா அறக்கட்டளையின் நிறுவனர் ‘சித்ரா விசுவநாதன்’ கூறும்போது “ஜனவரி 26, 2022ல் காஷ்மீர் பெண்ணுக்கு நிதி உதவி செய்ததன் மூலம் குடியரசு தினத்தை ஒரு அர்த்தம் மிக்க வழியில் ஐஸ்வர்யா கொண்டாடியது…” என்றார். தன்னுடைய பங்கிற்கு உதவியாக மிக குறைந்த கட்டணத்தில் இந்த அறுவை சிகிச்சையை செய்ததாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் அறிவிக்கிறது.

தன் வாழ்வை மீட்டுக் கொடுத்ததில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் ஐஸ்வர்யா அறக்கட்டளைக்கும் கண்ணீர் மல்க தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார் ஷாஸாதி பாத்திமா. உடன் இருந்த அவரது சகோதரரும் நன்றி கூறினார்.

இது குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹார்ட் அண்ட் லங் டிரான்ஸ்பிளேண்ட் அண்ட் மெக்கானிக்கல் சரக்குலேட்டரி சப்போர்ட் இயக்குனர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் கூறும்போது, “தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட சூழலிலும் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த இதய தானமளித்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் உடல் உறுப்பு மாற்று ஆணையம் தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செயல்பாடுகளை மிக சிறப்பான முறையில் கண்காணித்து வழி நடத்துகிறது என்றார் அவர்.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் ஆப் ஹார்ட் அண்ட் லங் டிரான்ஸ்பிளேன்ட் அண்ட் மெக்கானிக்கல் சர்க்குலேட்டரி சப்போர்ட் இணை இயக்குனரான டாக்டர் சுரேஷ் கூறும்போது, “உயிரைக் காப்பாற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒருங்கிணைப்பு மற்றும் பல நபர்களின் ஒத்துழைப்பு தேவை. உண்மையில் இது மிகச்சிறந்த குழு முயற்சி…” என்றார்.

எம்ஜிஎம் ஹெல்த்கேரின் இதயவியல் மற்றும் இதய செயலிழப்பு திட்ட தலைவரும் மூத்த மருத்துவருமான டாக்டர் ரவி குமார் கூறும்போது, “இதய செயலிழப்பு என்பது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்படாத பிரச்சனையாக இருக்கிறது. வழக்கமான சிகிச்சைகள் பயன்படாத நிலையில் இதயம் செயலிழப்பால் அவதியுறும் நோயாளிகளின் தரமான வாழ்க்கை முறை மற்றும் ஆயுளை அதிநவீன சிகிச்சைகளான இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இடது வென்ட்ரிகுலார் அசிஸ்ட் கருவி (LVAD) மூலம் மேம்படுத்தலாம்..!” என்றார்.

இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேரின் முயற்சி என்றென்றும் நினைவு கூறத்தக்கதாக இருக்கும்.