யானை வளர்க்கும் நாயகர்களை பற்றிய கதைகள் சமீபத்தில் தமிழ் படங்களில் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் இதிலும் பழங்குடியின தலைவராக வரும் நாயகன் விமல் ஒரு யானையை வளர்க்கிறார்.
அதன் பெயர் சேனா. அந்த யானைக்கு திடீரென்று மதம் பிடித்து காட்டுக்குள் சென்று விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னொருநக்குழுவின் பகைமையும் விமலை, அவரது இனத்தையும் சூழ்ந்து நிற்கிறது.
இது ஒரு புறம் இருக்க விமல் வசிக்கும் மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஸ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி ஜான் விஜய் கபட முறையில் களவாட நினைக்கிறார்.
இதற்கு மேல் மூன்றாவது இழையாக அந்த காட்டுக்குள் ட்ரெக்கிங் குழு ஒன்றும் வருகிறது.
காட்டுக்குள் போன யானையை விமல் கண்டுபிடித்தாரா மற்றும் களவு போகவிருக்கும் சிலையை அவர் காப்பாற்ற முடிந்ததா என்பதெல்லாம் படம் சொல்லும் விஷயங்கள்.
நாயகன் விமல் ஒரு கதாபாத்திரமாக வந்துœ0 போவது ஆச்சரியம்தான். பழங்குடியினத்தவர் என்பதற்காக முடியை சற்றே நீளமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார். மற்றபடி அவரது நடிப்பு அகலம் நீளமெல்லாம் கூடியதாக இல்லாமல் வழக்கப்படியே இருக்கிறது.
நாயகி சிருஷ்டி டாங்கேயின் வீரம் விழலுக்கு இறைத்த நீராகிப் போவது வேதனையாக இருக்கிறது.
வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், தன் வழக்கப்படியே காமெடி கலந்த வில்லத்தனம் செய்திருக்கிறார்.
யோகி பாபு இருந்தால் போதும் என்று இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட படமானதால் அவரை நடிக்க வைத்திருக்கும் இயக்குனர் அவர் படத்தில் வந்தால் மட்டுமே போதும் என்று நினைத்ததால் பெரிதாக மெனக்கெடவில்லை.
வில்ல முகம் காட்டி வில்லங்கம் செய்திருக்கிறார் கபிர் துஹான் சிங்.
இவர்களுடன் கங்காவாக வரும் மஹிமா குப்தா, இடும்பனாக வரும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் பாத்திரத்தில் வரும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளியாக வரும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாகி இருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக வரும் இலக்கியா ஒரு லிட்டர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
படத்தில் கண்ணுக்கு தெரியாத நாயகனாகி இருப்பது ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர்தான். படத்தின் தரம் இவரால் உயர்ந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் அமைந்த பாடல்களை விட உதய் பிரகாஷின் பின்னணி இசை கவனிக்க வைத்திருக்கிறது.
மூன்று இழைகளைக் கொண்ட திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், நிறைய யோசித்து ஆனால் அதில் பாதியை மட்டுமே நிறைவு செய்த உணர்வு ஏற்படுகிறது.
ஸ்கிரிப்ட் விஷயத்தில் இன்னும் தெளிவு பெற்று இருந்தால் படம் இன்னும் ரசிக்கக் கூடியதாக வந்திருக்கும்.
மகா சேனா – மனசிருந்தா போலாம்..!
– வேணுஜி