May 2, 2024
  • May 2, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குதிரைவால் தமிழ் சினிமாவின் தொடக்கமாகவும் இருக்கும் – பா. இரஞ்சித்
February 15, 2022

குதிரைவால் தமிழ் சினிமாவின் தொடக்கமாகவும் இருக்கும் – பா. இரஞ்சித்

By 0 577 Views

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார்.

கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் பிரதீப் குமாரின் பிரமாண்ட இசைக்குழுவினர் மூலம் படத்தின் பாடல்கள் நேரடியாக இசைக்கப்பட்டது.

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இசை நிகழ்ச்சியை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித் இசைத்தொகுப்பை வெளியிட, ‘குதிரைவால்’ படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசுகையில், “குதிரைவால் எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். ராஜேஷ் முதன் முதலில் இந்தப் படத்தை நான்கரை மணி நேரம் கதை சொன்ன போதே கதை என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொள்வேன் என்று நம்பினேன். இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது.

இந்த திரைப்படத்தை நீங்கள் திரையரங்கில் பார்க்கும் போது உங்களுக்கு புதிய உணர்வு ஏற்படுவதோடு, முற்றிலும் வித்தியாசமான உணர்வையும் ஏற்படுத்தும்…” என்றார்.

படத்தின் கதாநாயகி அஞ்சலி பாட்டீல் பேசுகையில், “இந்த படம் சமத்துவ சமுதாயத்தை முன்னிறுத்துகிறது. எந்த படிநிலையும் இல்லாமல் ஜனநாயக வழியில் திரைப்படம் எடுப்பது சாத்தியம். கலைக்காக கலையை உருவாக்க முடியும் என்பதை குதிரைவால் படம் உணர்த்தியது.” என்றார்.

இசையமைப்பாளர் பிரதீப் குமார் பேசுகையில், ”இந்த பாணியில் நான் இதுவரை பணியாற்றவில்லை. எல்லாமே ஒரு கண்டுபிடிப்பு போல தான் இருந்தது…” என்றார்.

இயக்குநர்களில் ஒருவரான மனோஜ் லினோனல் ஜாசன் பேசுகையில், “இந்தப் படம் ராஜேஷின் படைப்பு. இந்த படம் மூன்று வருடங்களுக்கும் மேலாக எங்களுக்கு சவாலாக இருந்தது. வெவ்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மூலம் இந்த படத்தின் மீது எங்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

நான் இயக்குநர் பா.இரஞ்சித்தின் பெரிய ரசிகன், அதனால் தான் இப்படி ஒரு படத்தை இயக்க முடிந்தது என்று நினைக்கிறேன். இந்த படத்திற்காக நான் தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது மக்கள் நிதி மூலம் இதை தயாரிக்கலாமா என்று நண்பர் விக்னேஷிடம் ஆலோசித்தேன். அப்போது அவரே தயாரிக்க முன்வந்தார். அவர் இல்லை என்றால் இந்த படம் இந்த நிலைக்கு வந்திருக்கிறாது. இந்த படத்தில் ராஜேஷின் எழுத்து பேசப்படும். தற்போதைய சூழலில் இருக்கும் அரசியல் படத்தில் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஷ்யாம் சுந்தர் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார்.

திரையரங்குகளில் எப்படிப்பட்ட படங்கள் வருகின்றன, எப்படிப்பட்ட படங்கள் வரவில்லை, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? என்ற கேள்விக்கு பதிலாக இந்த படம் இருப்பதோடு, திரையரங்கில் ரசிகர்களுக்கு புதிய உணர்வை கொடுக்கும் படமாக இருக்கும்… “என்றார்.

மற்றொரு இயக்குநர் ஷயாம் சுந்தர் பேசுகையில், ”குதிரைவால் படத்தை பற்றி சொல்லும் போது எழுத்தாளர் ராஜேஷை பற்றி பேசாமல் இருக்க முடியாது. இந்த படம் உருவாக அவர் தான் காரணம். அதுமட்டும் அல்ல, அவருடைய கதையின் மூலம் தனிப்பட்ட முறையில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படம் மிகப்பெரிய கூட்டு முயற்சி. அதனால், தான் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரே தொகையை மாத சம்பளமாக வழங்கினோம். இயக்குநராக இருந்தாலும் சரி, உதவி இயக்குநர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஒரே சம்பளம் தான்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், படத்திற்கு பணியாற்றியது மட்டும் அல்ல, படமும் அப்படிப்பட்ட வகை தான். இந்த படம், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று திரும்ப திரும்ப சொல்கிறோம், ஆனால் அது தான் உண்மை. இந்த படத்தை யார் பார்த்தாலும் அவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்…” என்றார்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் குமார் பேசுகையில், “விக்னேஷ், ஷ்யாம் மற்றும் ராஜேஷ் சாருக்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் இந்த படம் இல்லை. இறுதியாக குதிரைவால் படம் வெளியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது…” என்றார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ஜி.ராஜேஷ் பேசுகையில், “போதி மரத்தடியில் உர்கார்ந்திருக்கும் புத்தராகத்தான் நான் சினிமாவை பார்க்கிறேன். அதன் மூலம் பல அரசியல்களை பேசலாம். குதிரைவால் படத்திலும் அப்படிப்பட்ட அரசியலை பேசியிருக்கிறேன். ஆனால், அதை நேரடியாக பேசவில்லை. அதே சமயம், படம் பார்ப்பவர்கள் மனதில் பல கேள்விகள் எழும், அப்படி ஒரு வகையில் அரசியலை படம் பேசியிருக்கிறது…” என்றார். 

தயாரிப்பாளர் விக்னேஷ் பேசுகையில், ‘இந்த கலைக்காக அவர்கள் உழைக்கும் விதம் மற்றும் அவர்களுடைய உழைப்புக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது. அதனால் தான் இந்த படம் திரையரங்கில் வெளியாக வேண்டும், என்று விரும்பினேன். மக்கள் பார்க்கனும் அவர்கள் கைதட்ட வேண்டும், அது தான் இந்த கலைஞர்களின் உழைப்புக்கு இணையாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் தான் திரையங்கில் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்..!” என்றார்.

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “நான் பார்த்த சினிமாவால் பாதிக்கப்பட்டு சினிமா எடுத்தாலும், இந்த சமூகம் அதுபோன்ற ஒரு சினிமாவை எடுக்க விடவில்லை. பல கேள்விகள் கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசுகிற திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆள் நான். ஆனால், அதை ரசித்து மிக சந்தோஷமாக தான் செய்துக்கொண்டிருக்கிறேன்.

அது சமூகத்தில் நிறைய கேள்விகளை உருவாக்குகிறது என்றும் நம்புகிறேன். மற்றபடி என்னுடைய சினிமா விருப்பம் என்பது, ஒரு கலைஞனாக பல விருப்பங்கள் இருக்கு. கார்டியனை ரொம்ப பிடிக்கும், கிளிம்ட்டு ரொம்ப பிடிக்கும். ஆனால், இந்த நோக்கம் என் சினிமாவில் தெரிகிறதா என்றால் தெரிகிறது தான், ஆனால் அவை ரொம்ப மறைமுகமாகத்தான் தெரிகிறது. அப்படித்தான் என் சினிமாவை நான் பார்க்கிறேன்.

தத்தோஷ்கி எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருடைய படங்களை பார்த்து மெய் மறந்து நின்றிருக்கிறேன். அதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை, ஆனால் அவருடைய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோன்ற ஒரு ரசிகராக தான் நான் மனோஜை பார்க்கிறேன். ஜெனி மூலமாக மனோஜ் மற்றும் அவருடைய குழுவை சந்தித்தேன். அப்போது ராஜேஷ் கதை சொன்ன போது நான்கு மணி நேரம் கதை சொன்னார். நான் புத்தகத்தை படித்துவிடுகிறேன், என்று கேட்டேன். அதை கொடுத்தார்கள். ஆனால், அது ஐந்நூறு பக்கங்கள் இருந்தது. பிறகு மனோஜ் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது.

அந்த குறும்படத்தின் மேக்கிங் போன்ற அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்ததோடு, மனோஜ் மீது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனக்கு பொதுவாக தன்னிச்சை படைப்பாளிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்களால் தான் புதிதாக சொல்ல முடியும், ரசிகர்களுடைய கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு கதை சொல்வார்கள்.

அதுபோல தான் குதிரைவால் படத்தை நான் பார்த்தேன். குதிரைவால் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. ராஜேஷோட பேச்சு, நம்பிக்கை சம்மந்தமான பேச்சு போன்றவை கவர்ந்தது. நம்பிக்கையை இன்னொரு நம்பிக்கையை உருவாக்கி தான் அழிக்க முடியும், என்று என்னிடம் ஒரு நாள் சொன்னார். அது ரொம்ப பிடித்திருந்தது.

இந்த கதை என்னிடம் சொல்லும் போது, பொருளாதாரா ரீதியாக என்னால் இப்போதைக்கு உதவ முடியாது, மற்றபடி என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொன்னேன். அதனை தொடர்ந்து அவர்கள் பல தயாரிப்பாளர்களை சந்தித்தார்கள். நானும், பல இடங்களுக்கு அவர்களை அனுப்பினேன்.

பிறகு அவர்களுடைய நண்பர் விக்னேஷ் தயாரிப்பதாக முன் வந்தார். அப்போது கூட அவரிடம் முழு கதையை சொல்லுங்கள் என்று கூறினேன். ஏன் என்றால் சினிமா நிரந்தர வருமானம் அல்லது லாபம் இல்லாத தொழிலாக இருக்கிறது. சினிமா எல்லோருக்கும் லாபம் கொடுக்காது. இதை நான் எல்லோரிடமும் சொல்வதுண்டு. படம் தயாரிக்க வேண்டும் என்று வருபவர்களிடம் நான் இதை சொல்லாமல் இருக்க மாட்டேன். ஏன் என்றால் ஆர்வத்தில் வருபவர்களிடம், சினிமாவில் இருக்கும் பாதகங்களை நான் முதலில் சொல்வேன்.

அப்படித்தான் விக்னேஷிடம் சினிமாவில் பாதகங்களை கூறினேன். ஆனால், அதை கேட்ட பிறகும் அவர் படம் தயாரிக்க தயாராகவே இருந்தார். இந்த படம் எந்த மாதிரியான படம், இந்த படம் கமர்ஷியல் ரசிகரகள் பார்க்கும் படமா? அப்படி இல்லை என்றால் இந்த படத்தை இந்த பட்ஜெட்டில் எடுக்க வேண்டும், என்று கூறினேன். அதே சமயம், இந்த படத்தை நாம எடுக்கவில்லை என்றால், வேறு யாராலும் எடுக்க முடியாது, என்றும் கூறினேன்.

அதேபோல், ராஜேஷ் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் விக்னேஷிடம் அனைத்து தகவல்களையும் சொல்லுங்கள் என்று கூறினேன். அப்போது மனோஜ் விக்னேஷிடம் பேசுக்கொண்டு தான் இருக்கிறேன், என்று சொல்வார். இவ்வளவு பிரச்சனைகளையும் கடந்து விக்னேஷ் இந்த படத்தை ரிலீஸ் வரை எடுத்து வந்திருக்கிறார்.

இந்த படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கலையரசனுக்கு மிக முக்கியமான படமாக இருக்கும். அதேபோல் ராஜேஷின் எழுத்து பேசப்படும். அந்த எழுத்து தான் என்னை கவர்ந்தது. நான் படம் பார்க்கும்போது அது தான் என்னை கவர்ந்தது. ஒருவரால் எப்படி இப்படி எழுத முடியும் என்று எனக்கு தோன்றியது.

அதிகமாக படிக்கும் பழக்கம் தான் அவரை இப்படி எழுத வைத்தது என்று நம்புகிறேன். அவரை பேசவிட்டு நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். சில சமயங்களில் சான் வியந்த எழுத்தாளர்களை கூட, அவர்கள் எதுவும் இல்லை என்று கலாய்த்துவிடுவார். நமக்கே அது அதிர்ச்சியாக இருக்கும். அந்த வகையில் அவர் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்..!”

மாயாலாஜத்திற்கும் நிஜத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பு தான் இந்த படம். என்னுடைய ஓவியங்களில் கூட இதை நான் பயன்படுத்தியிருக்கிறேன். அதாவது, என்னுடைய அக உணர்வுக்கும், புற உணர்வுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்னுடைய அக உணர்வுபடி என்னால் வாழ முடியுமா? என்றால் அது முடியவே முடியாது.

காரணம், அது எல்லையற்றது. யாருக்கும் யாரும் அடிமை இல்லை, சக மனிதனை மனிதாக நேசிக்க வேண்டும், என்று சொல்வது என் அக உணர்வு. ஆனால், புற உணர்வில் பார்க்கும் போது இங்கு யாரும் அப்படி வாழ்வதில்லை. நாம் பார்த்து வியந்த ஜாம்பவான்கள், புகழ் பெற்ற கலைஞர்கள் கூட அந்த வேறுபாட்டை கடைபிடிப்பதை பார்த்து அவர்களிடம் இருந்து விலகியிருக்கிறேன்.

அந்த சிஷ்டத்தை அவர்கள் அனுபவித்த ரசிப்பதை பார்த்து அங்கிருந்து ஓடியிருக்கிறேன். அப்போது என் புற உணர்வில் இருந்து விலகி அக உணர்வில் அதை நான் தேடும் போது அதை தான் நான் கலையாக பார்க்கிறேன். அந்த விஷயத்தை தான் குதிரைவால் படத்தில் பேசியிருக்கிறார்கள். குதிரைவால் படத்தில் ”நினைவில் தொலைத்ததை கனவில் தேடுகிறேன்” என்ற வசனம் வந்துக்கொண்டே இருக்கும். இது தான் குதிரைவால் படம் என்று சொல்லலாம்.

நினைவில் தொலைத்ததை எப்படி கனவில் தேட முடியும். பிராய்ட்டை படிக்கவில்லை என்றால், இதை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். என் மனைவி அனிதா மூலமாகத்தான் பிராய்ட்டை படித்தேன். அதன் பிறகு தான் தெரிந்தது மனிதன் எப்படி கொடூரமானவன் என்று தெரிந்தது. பிறகு கனவை பற்றி அவர் எழுதியது என்னை மிகவும் பாதித்தது. அதன் மூலம் எனக்கு தோன்றிய ஒரு கதை ‘தண்ணி கோழி’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.

நாம நிஜத்தில் தொலைத்த நிறைய விஷயங்களில் கனவில் தேடுவோம், அந்த சுகத்தை கனவில் அனுபவிப்போம், அதை தான் இந்த படம் பேசுகிறது என்று நினைக்கிறேன். பிராய்ட் இல்லை என்றால் இதை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். அவ்வளவு ஒரு தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை. அப்படி ஒரு படமாகத்தான் குதிரைவால் படம் இருக்கும். குதிரைவால் தமிழ் சினிமாவின் தொடக்கமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய ‘ரைட்டர்’ படம் கூட திரையரங்கில் வெளியாகி பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. அதனால், ஒடிடி-யில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்குமாறு கூறினேன். ஆனால், விக்னேஷ் இந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும், என்று உறுதியாக இருந்தார். எனவே, ரசிகர்கள் இந்த படத்தை தவறவிட கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன், அப்படி ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் படமாக குதிரைவால் இருக்கும் என்பதை நான் உறுதியாக சொல்வேன்.

அதேபோல், யாழி இந்த படத்தோட இல்லாமல் பல விஷயங்களை செய்ய போகிறது. என்னுடைய நட்சத்திரம் நகர்கிறது படமும் அவர்களுடன் சேர்ந்து செய்திருக்கிறேன்…” என்றார்.