April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜோதிகா பேசியது இதனால்தான் – முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் இரா சரவணன்
April 23, 2020

ஜோதிகா பேசியது இதனால்தான் – முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குனர் இரா சரவணன்

By 0 566 Views

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக விஜய் டிவியில் ஒரு தனியார் நிறுவனம் வழங்கிய விருது விழாவினை ஒளிபரப்பியது. அந்த விழாவில் விருதினைப் பெற்றுக் கொண்டு மேடையில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலை தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லி பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

உண்மையில் அந்த மேடையில் நடிகை ஜோதிகா பேசியது இதுதான் :

‘’படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் போயிருந்தபோது பிரகதீஸ்வரர் கோயிலை பார்க்காமல் போயிராதீங்க. அவ்வளவு அழகா இருக்கும். போய்_பாருங்க என்று சொன்னார்கள். ஏற்கனவே பார்த்திருக்கேன். ரொம்ப சிம்ப்பிளா, கியூட்டா… உதய்ப்பூர் பேலஸ் போல இருக்கும்.

மறுநாள் எனக்கு அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு இருந்தது.. அங்கே நான் பார்த்ததையெல்லாம் வாயால் சொல்ல முடியாது.. அவ்வளவு மோசமான பராமரிப்பு. அன்று நான் மருத்துவமனையை பார்த்துவிட்டு நான் கோவிலுக்கு செல்லவில்லை.

கோவில்களை பராமரிக்க, பெயிண்ட் அடிக்க லட்சக்கணக்கில் செலவு பண்றீங்க. கோவில் உண்டியலில் அவ்வளவு காசு போடுறீங்க.

என்னுடைய வேண்டுகோள். அதே அளவு பணத்தை அரசு பள்ளிக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்பது மட்டுமே. பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் அவ்வளவு முக்கியம்…’’

இதுதான் ஜோதிகா பேசியது..

இதில் என்ன அவமரியாதை இருக்கிறது? இது குறித்து சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனர்  இரா. சரவணன் சொல்லியிருப்பது…

“சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா.

தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால், எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம். ஜோதிகா வந்தார்.

மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய்ப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார்.

பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார். வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கக் காரணம் இந்தக் காட்சிதான். ஆயிரம் அன்ன சத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்று ஜோதிகா பேசியதாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.

இதில் கோயில்களைக் குறைத்துப் பேசியது போன்ற பார்வை எங்கே வருகிறது? சில வருடங்களுக்கு முன்பு ‘கோயில் கட்டுவதை விட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசி இருப்பவர் வேறு யாருமல்ல, நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் எனச் சொல்ல முடியுமா?

ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும் அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பவர் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்குப் பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர்.

இந்தப் பரபரப்புப் பின்னணியில் என் பங்கும் இருப்பதால் தான் இந்த விளக்கம். அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம்.

“எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்…” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன். விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களைகொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா.

கால்கள் சுட்டுப் பொசுக்க காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார். ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ்க் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார்.

தஞ்சை மக்களின் வாழ்வியலை அறியவும், அப்படியே வாழவும் அவர் கற்றுக் கொண்டார். இந்தச் சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும். 

“சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்…” எனச் சிலிர்த்த அவருடைய நல்ல மனதுதான் மருத்துவ மனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது. இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை!

அதிலும் குறிப்பாக இந்தக் கொரோனா நேரத்தில், வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தத்தளிக்கும் இக்கட்டில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது!”