April 19, 2024
  • April 19, 2024
Breaking News
March 14, 2021

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை எய்தினார்

By 0 475 Views

முன்னணி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். அவருக்கு வயது 61.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் எடிட்டிங் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார்.

மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை செய்தார்கள். அவரது மூளையில் ரத்தக் கசிவு அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது. எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் 1959-ம் ஆண்டு மே 7-ம் தேதி பிறந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இயக்குநராக வேண்டும் என்று ஆசை கொண்டு பி.லெனின், பரதன், வின்சென்ட் செல்வா மற்றும் கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் ‘இயற்கை’.

இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன்.

இவை அனைத்துமே புரட்சிகர கருத்துகளை உள்ளடக்கியவை. இந்தப் படங்கள் போக தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கல்யாண் இயக்கத்தில் வெளியான ‘பூலோகம்’ படத்துக்கு வசனங்கள் எழுதியவர் எஸ்.பி.ஜனநாதன் என்பது நினைவு கூரத்தக்கது. இவர் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. படங்கள் இயக்கியது மட்டுமன்றி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இயக்குநர் சங்கத்துக்கு பல்வேறு விஷயங்களை முன்னெடுத்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

எஸ்.பி.ஜனநாதனின் மறைவு தமிழ்த் திரையுலகினருக்கே பேரிழப்பு. அவருடைய உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.