May 15, 2024
  • May 15, 2024
Breaking News
August 17, 2023

வசந்தபாலன் ஹாரர் படம் இயக்கினால் இப்படித்தான் இருக்கும் – டீமன் இயக்குனர்

By 0 168 Views

செப்டம்பர் 1 ஆம் தேதி ஆறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதில் ஒன்றாக வருகிறது ‘டீமன்’. பேய்க்கு வழங்கப்படும் ஆங்கிலச் சொல்தான் டீமன் என்ற அளவில் இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சொல்லத் தேவையில்லை.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

படத்தின் டிரைலரில் இது உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்று போடப்பட்டுள்ளது குறித்து இயக்குநர் ரமேஷ் பழனிவேலிடம் கேட்டபோது அவர் படம் குறித்துப் பேசினார்.

“டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தங்களது வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களது மரணம் தற்கொலை என்று வழக்கு முடிக்கப்பட்டாலும், அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது இன்று வரை தெளிவாகத் தெரியவில்லை. அந்த தற்கொலைக் காரணங்களில் ஒன்று ஆவியின் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. அது உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் இந்தக் கதையை எழுதினேன்.

அதில் நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து எழுதியிருக்கிறேன். ஆக, இது வெறும் ஹாரராக இல்லாமல் ஒரு சைக்கலாஜிகல் ஹாரர் என்ற ஜானரில் இருக்கும்.

வழக்கமாக இது போன்ற படங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீடு இருக்கும். அதில் அமானுஷ்ய சக்தி குடிகொண்டு இருக்க அங்கே செல்பவர்களை அது ஆட்டுவிக்கும். ஆனால், இந்தப் படத்தில் நகரின் மையப்பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்களையும் அதனால் பாதிக்கபப்டும் நாயகனின் உளவியல் தொடர்பான பிரச்சனைகளையும் சொல்லியிருக்கிறோம்.

நிச்சயம், ரசிகர்களுக்கு வித்தியாசமான படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கும் படமாகவும் ‘டீமன்’ இருக்கும். படத்துக்கு பல தலைப்புகளை விவாதித்தோம், அப்போதுதான் இந்த தலைப்பு தோன்றியது. கேட்கவும் நன்றாக இருந்ததால் இதை தலைப்பாக வைத்துவிட்டோம்..!”

சமுதாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சொன்ன இயக்குநர் வசந்த பாலனிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு முதல் படமாக ஹாரர் ஜானரை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டதற்கு, “முதலில் நான் சந்தித்த மக்கள் மற்றும் நான் வளர்ந்த மண் சார்ந்த கதையைத்தான் முதல் படமாக எடுக்க நினைத்தேன், அதற்கான கதையைத்தான் எழுதி வைத்திருந்தேன். ஆனால், அப்படத்திற்கான பட்ஜெட் எனக்கு அமையவில்லை, அப்போதுதான் இப்படி ஒரு ஜானர் படம் எடுப்பதற்கான வாய்ப்பும், அதற்கான பட்ஜெட்டும் கிடைத்தது,

அதுமட்டும் அல்ல – பேய் படம் என்றால் ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது, அதுவும் ஒரு காரணம். அமானுஷ்ய படமாக இருந்தாலும், வசந்த பாலன் ஹாரர் படம் இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படிதான் இந்த படத்தை நான் இயக்கியிருக்கிறேன். உணர்ச்சிகரமான பாணியிலான ஒரு பேய் படமாகத்தான் ‘டீமன்’ இருக்கும்.

பிளாக்பஸ்டர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படத்தை வெளியிடும் பி.யுவராஜ், “’டீமன்’ படம் இதுவரை வெளியான திகில் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும். அதற்குக் காரணம், பேயால் ஒரு மனிதன் உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கப்படுகிறான், பேய் மனிதனை உளவியல் ரீதியாக எப்படி ஆட்கொள்கிறது, என்பதை இந்த படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதேபோல், இன்றைய காலக்கடத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை, சில நாட்கள் கழித்து ஒடிடி-யில் பார்த்துக் கொள்ளலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், திகில் படம் என்றால் அதை திரையரங்கில்தான் பார்க்க வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் இருக்கிறது. காரணம், பெரிய திரையில், ஒலி உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்களுக்காக திகில் படங்களை திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்.

அதனால் திகில் படங்கள் மக்களை திரையரங்கிற்கு அழைத்து வருவதாலும், இதுபோன்ற படங்கள் அதிகமாக வெளியாகிறது…” என்றார்.

விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரித்திருக்கும் இதில் சச்சின் அபர்ணதியுடன் ’கும்கி’ அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தஹா, ஆர்.சோமசுந்தரம், மிப்புசாமி, ’கேபிஒய்’ பிரபாகரன், நவ்யா சுஜி, தரணி, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்திற்கு இசையமைத்த ரோனி ரபெல் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.எஸ்.அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவிகுமார்.எம் படத்தொகுப்பு செய்ய, விஜய் ராஜன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். 

“படத்தை நல்லா எடுத்திருந்தா ‘ பயப்படாம ‘ ரிலீஸ் பண்ணுங்க..!”