மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழகமெங்கும் இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.. வரும் அக்-7ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது..

படக்குழுவினருடன் புதிய நீதிக்கட்சி தலைவரும் இந்தப்படத்தின் தயாரிப்பாளருமான ஏ,சி.சண்முகம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி, இயக்குனர் பேரரசு, கவிஞர் சினேகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது, “நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன். உள்ளத்தை அள்ளித்தா படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது இந்த முறை காபி வித் காதலில் படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலா தளம் என்றால் எனக்கு மட்டும் அது வேலை பார்க்கும் இடம் என்பது போல மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவடரை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம். இந்த மூன்று கதாநாயக\ர்களில் தீயா வேலை செய்யணும் குமாரு என்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தா தான். இந்த படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மை விட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார்

அதேபோல ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிபடுவது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் ரொமாண்டிக் படத்தின் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும் அது வேறு யாருமல்ல மாளவிகா சர்மா தான் டேமேஜ் ஹீரோயின் என்று கூட சொல்லலாம் அவர் ஒரு நாள் இருந்தாலும் கூட அதுபற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களில் முக்கியமாக இடம் பெற்றுள்ள அந்த குழந்தை நட்சத்திரம் தான் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம் நானும் யோகிபாபு பேசிக்கொள்ளும்போது கூட அந்த குழந்தையின் அப்பா அம்மா நமக்காகவே பெற்றுவிட்டு இருக்காங்களோ என்று பேசிக்கொள்வோம்

படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை காலில் அடிபட்டு இருந்த நிலையிலும் கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார்.

விஜய் டிவி புகழ் டிடி பேசும்போது, “ஜீவாவும் நானும் இந்த படத்தில் ட்வின்ஸ் போல நடித்துள்ளோம். ஜெய் வந்து எனக்கு தம்பி மாதிரி. படப்பிடிப்பில் அவரை மிட்டாய் மாமா என்று தான் கூப்பிடுவோம். நிஜத்தில் சுந்தர் சி சார் எப்படி எல்லாருடைய குறை நிறைகளை கேட்டு அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்வாரோ அதேபோல தான் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும். இந்த கதாபாத்திரத்தில் நான் சரியாக இருப்பேன் என அவர் நம்பியது என்னுடைய அதிர்ஷ்டம்” என்று கூறினார்.

இயக்குனர் சுந்தர்.சியுடன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அவருடன் நண்பராக பயணித்து வரும் நடிகர் விச்சு என்கிற விஸ்வநாதன் பேசும்போது, ‘இதுவரை 170 படங்களில் நான் நடித்துள்ளேன். அதில் சுந்தர் சியுடன் இணைந்து பணியாற்றும் 35 படம் இது என்றார்.

நடிகை ரைசா வில்சன் பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பில் யாராவது ஒருவர் காமெடி செய்து கொண்டே இருப்பார்கள். படப்பிடிப்பில் நடிக்கும்போது கூட சிரிக்காமல் நடிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது” என்றார்.

நடிகர் ஜீவா பேசும்போது, “சுந்தர் சி சார் படத்தில் நடிக்கும்போது முதல் நாளே நமது டென்சனை குறைத்து விடுவார். எப்படியிருந்தாலும் 45 நாட்களுக்குள் படத்தை முடித்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுவார். அவரது படப்பிடிப்பிற்கு சென்று திரும்பும்போது 100% சந்தோஷத்துடன் திரும்புவோம். எல்லோரும் அழகாக ஒன்றிணைந்து நடித்தாலும் எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டி இருந்து கொண்டுதான் இருந்தது. எனக்கு நிஜத்தில் சகோதரி இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல நினைத்துக்கொண்டு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். ஆனாலும் அதை சரியாக செய்துள்ளேன்” என்றார்.

பிக்பாஸ் சம்யுக்தா பேசும்போது, ” ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தேன் என்று சொல்லும் போது என்ன உணர்வு ஏற்படுமோ சுந்தர் சி சார் படத்தில் நடித்து விட்டேன் என்று கூறும் போது அதுபோன்ற ஒரு உணர்வையே தருகிறது” என்றார். இந்த படத்தில் உனக்கு மேக்கப்பும் இல்லை.. கிளாமரும் இல்லை என்று சொல்லி குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்து விட்டார் சுந்தர்.சி” என்றார்.