April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் -சித்திரை செவ்வானம் சிதறல்கள்
December 1, 2021

சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் -சித்திரை செவ்வானம் சிதறல்கள்

By 0 489 Views

வித்தியாசமான வெற்றிப்படங்களை வழங்கி வரும் முன்னணி OTT தளமான ஜீ5யின் அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில்,  இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்  ‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3ல் வெளியாகிறது.

இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந் நிகழ்வில்…

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் பேசியதாவது…

“மாஸ்டர் செல்வா இயக்குநராக வேண்டுமென்கிற ஆசையை, பல வருடங்களாக மனதில் வைத்து, சரியான படத்திற்கு காத்திருந்து, இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தம்பி விஜய் இப்படத்திற்கு கதை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.

சினிமாவில் மற்ற துறைகளில் இருந்து நிறைய பேர் இயக்குநர் ஆகியுள்ளார்கள் ஆனால் ஸ்டண்ட் துறையிலிருந்து யாரும் அதிகமாக ஆனதில்லை, அதில் மாஸ்டர் சில்வா மிகப்பெரிய புகழ் பெற வேண்டும்..!”

நடிகை ரீமா கலிங்கல் –

“விஜய் சார் போன் செய்து, சில்வா மாஸ்டர் இயக்குகிறார் என்றபோது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்று தான் முதலில் நினைத்தேன். திரைக்கதையை படித்தபின் ஆச்சர்யமாக இருந்தது. சில்வா சார் இப்படி ஒரு படம் செய்கிறார் என நம்ப முடியவில்லை. அவருடன் இணைந்து பணிபுரிந்த பின்தான் தெரிந்தது அவர் எத்தனை குழந்தை மனம் கொண்டவர் என்று, மிக நல்ல மனிதர்.

சமுத்திரகனி சாருடன் முன்பே படம் செய்ய வேண்டியது, இப்போது அவரை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. இரண்டு பக்க டயலாக் இருந்தாலும் நொடியில் முடித்து விடுகிறார்.

பூஜா அட்டகாசமாக நடித்திருக்கிறார், அவரை திரையில் பார்க்க ஆவலுடன் உள்ளேன்..!”

நாயகி பூஜா கண்ணன்…

“முதல் முறை  மேடையில் பேசுகிறேன். விஜய் சார்,  சில்வா மாஸ்டர் இருவருக்கும் நன்றி. அக்காவுடன் ஷூட்டிங் போயிருக்கிறேன். ஆனால் முதல் முறை, கேமரா முன் நிற்கும் போது தயக்கம் இருந்தது. அதை உடைத்து அனைத்தையும் சொல்லி தந்தார் சில்வா மாஸ்டர்.

சமுத்திரகனி சாருடன் வேலை செய்ய பயமாக இருந்தது, ஆனால் அறிமுகமான உடனே “எப்படிம்மா இருக்க’ எனக்கேட்டு என்னை இயல்பாக்கி, ஒரு மகளாகவே பார்த்து கொண்டார்..!”

இயக்குநர் விஜய் பேசியதாவது…

“இந்த நாள் எங்கள் எல்லோருக்கும் முக்கியமான நாள். பூஜாவை ‘கரு’ பட காலத்திலிருந்தே தெரியும். இந்தப்படம் செய்யும் போது,  சில்வா மாஸ்டரிடம் நான்தான் இந்தப்படத்திற்கு பூஜா சரியாக இருப்பார் என்று சொன்னேன். நடிப்புக்காக பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். அவர் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார்.

சமுத்திரகனி சார் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். இப்படத்தில் காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல் நடித்தார். அவருக்கு நன்றி. சில்வா மாஸ்டர் தலைவா படம் மூலம் தான் அறிமுகம். அதன் பிறகு என் எல்லா படத்திற்கும் அவர் தான் ஆக்சன் மாஸ்டர். 

2015 ல் நான் எழுதி வைத்த கதையை நான் எடுக்க வேண்டுமென நினைத்த போது சில்வா மாஸ்டர் தான் ஞாபகத்திற்கு வந்தார். அவருக்குள் இயக்குநர் இருக்கிறார் என தெரியும்..!”

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது… 

“என் தம்பி சில்வா, நானும் அவனும் எதிரெதிர் வீட்டில் தான் இருந்தோம். அவனை பல வருடங்களாக தெரியும். அப்பா படத்திற்கு, அப்பா பற்றி பேசுங்கள் என்று நிறைய பேரிடம் கேட்டிருந்தேன் அவன் பேசியதை கேட்டு அதிர்ந்து விட்டேன். அவன் அப்பா தவறி விட்ட ஏக்கத்தை, பேசியிருந்தான்.

இந்தக்கதை என்னை உலுக்கியது, இந்தப்படம் இந்த சமூகத்தை கேள்வி கேட்கும். இந்த படத்தில் விஜய் இருக்கிறார் என்பதே எனக்கு தெரியாது. அவன் ஒரு நல்ல ஆத்மா.

பூஜா சில காட்சிகளில் நம்மையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார். அவர் இன்னும் பெரிய தளத்திற்கு செல்வார். ரீமா இப்போது அவரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும், கண்ணிலேயே பேசுவார்.

இதில் நடித்த குட்டீஸ் எல்லாம் சூப்பராக செய்திருக்கிறார்கள். சில்வாவின் மகன் இப்படத்தில் நடித்திருக்கிறார் அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி..!”

இயக்குநர் சில்வா மாஸ்டர்  பேசியதாவது…

“நான் இயக்குநர் ஆக வேண்டும் என என்னை விட வெறியாக இருந்தவர் விஜய் தான். தெரியாத ஆட்களுக்கே உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர்.  படம் பார்த்து கண் கலங்கி, என்னால் கூட இப்படி செய்திருக்க முடியாது என பாராட்டினார் அவருக்கு நன்றி. இந்தப்படத்தை பார்த்து நல்ல கதையென்று ஆதரவு தந்த ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி.

இந்தப்படத்தில் அண்ணனாக, அப்பாவாக உடன் நின்று தன் சொந்தப்படம் போல் செய்து தந்தார் சமுத்திரகனி அண்ணன்.

பூஜாவை விஜய் சார் தான், பார்க்க சொன்னார், அவரைப் பார்த்தவுடன் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. கடகடவென்று பேசிக்கொண்டே இருப்பார். கலைவாணி மேடமிடம் பயிற்சி எடுத்து கொண்டு வந்து நடித்தார்.

ரீமா கலிங்கல் திரைக்கதை கேட்டார்.  ஒவ்வொரு காட்சிக்கும், முன்னதாகவே தயாராகி வந்தார். திரைக்கதையில் சின்ன மாற்றம் செய்தாலும் கேட்பார். அப்போது தான் அவரே சொந்த தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார் என தெரியும்,  மிக மிக நன்றாக நடித்திருக்கிறார்.

மானசி 8 வயது பெண் கிளிசரின் போடாமலே அவளுக்கு அழுகை வருகிறது. சொல்லும் நேரத்தில் சிரிக்கிறாள் அவள் மிகப்பெரிய உயரத்தை தொடுவாள். தமிழில் பேசி, பாட்டெழுதி இசையமைக்கும் திறமை சாம் CS யிடம் இருக்கிறது..!”

 ‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.