August 4, 2026
  • August 4, 2026
Breaking News
March 12, 2026

வெஞ்சென்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 326 Views

2042 ல் நடக்கும் கதை. அதை ஆதரவில்லாத மூதாட்டியான சச்சு சொல்ல, அவரை கவனித்துக்கொள்ளும் இளைஞன் கேட்பதாகக் கதை அமைகிறது.

ஒதுக்கப்பட்ட கல் கட்டத்தின் மூலைக் கல்லானது என்ற பழமொழியின் படி பள்ளிப்பருவத்திலிருந்து யாராலும் கவனிக்கப்படாமலிருந்த நாயகி அபர்ணதி இந்த சமுதாயத்தின் மீதிருந்த ஆற்றாமையில் கடுமையாக உழைத்துப் படித்து ஐ ஏ எஸ் ஆகி கலெக்டரும் ஆகிறார்.

அரசியல்வாதிகளை சட்டை செய்யாமல் தன் அதிகாரத்தின்படி நடந்து கொள்ளும் அவர் அனைத்து அரசியல்வாதிகளின் பகைமையை சம்பாதிக்கிறார். அதன் விளைவாக சஸ்பென்ட் ஆகிறார்.

இந்நிலையில் தாய் நாட்டில் (தமிழ்நாடு என்று சொன்னால் சென்சார் பிரச்சனை வருமென்று தாய் நாடு என்கிறார்கள்) தேர்தல் வர, அங்கே ஆட்சியைப் பிடிக்க விரும்பும் பிரதமர், அபர்ணதியின் திறனைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்த அசைன்மென்ட்டை அவரிடம் கொடுக்கிறார்.

தாய் நாட்டில் அவரை எதிர்த்தவர்கள் இப்போது அவர் பேச்சைக் கேட்க நேர்கிறது.
அதே சமயம் மத்தியில் இருந்து ஆட்சியை ஆட்டுவிக்கும் பலே அரசியல்வாதி ஜான் விஜய் பிரதமர் பதவிக்கே குறி வைத்து நிகழ்த்தும் காய் நகர்த்தலில் இப்போதைய தாய் நாடு தேர்தல் முக்கியத்துவம் பெற அவரது எதிர்ப்பின் முன்னால் அபர்ணதியின் ஆற்றல் வெல்ல முடிந்ததா என்பதுதான் கதை.

பாத்திரமாகவே மாறத்தெறிந்த
அபர்ணதியின் நடிப்பு அபாரமாக இருக்கிறது. அந்த ஆளுமையில் அந்தப் பாத்திரமே எழுந்து நிற்கிறது.

சரவண சுப்பையா அவரைத் துகில் உரியும் காட்சியைப் புரிந்து கொண்டு நடித்திருக்கும் அவரது தைரியம் வேற லெவல்..!

அதற்கு ஈடாக ஜான் விஜய்யின் வில்லன் நடிப்பும் மிரட்டல். ஆனால், ஆங்காங்கே தன் வழக்கப்படியே மிதமிஞ்சி நடித்து சலிப்பேற்றுகிறார்.

அபர்ணதியின் தந்தையாக வரும் காளி வெங்கட் தன்.வழக்கப்படியே இயல்பான நடிப்பில் எடுப்பாகத் தெரிகிறார்.

தாய்நாட்டின் முதல்வராக வரும் இளவரசு, எதிர்க்கட்சித் தலைவராக வரும் லிவிங்ஸ்டன், பிரதமராக வரும் பெண்மணி எல்லோருமே அபர்ணதி, ஜான் விஜய்யை அறிவாளிகளாகக் காட்ட வேண்டி முட்டாள்களாகவே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள்.

சில படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் சைதன்யாவை இதில் கலெக்டர் பி.ஏ என்ற அளவில் சுருக்கி இருப்பது என்ன காரணமோ..?

எம். எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் நயம்.

கதையை எழுதி.இயக்கி இருக்கும் ராகுல் அசோக் இந்திய அளவிலும், தமிழ் நாட்டளவிலும் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை அங்கங்கே செருகி இருப்பதால் அவற்றை ரசிக்க முடிகிறது.

கடைசியில் கதை சொல்லும் சச்சுவை வைத்து இயக்குனர் கொடுத்திருக்கும் ட்விஸ்ட்டை எத்தனைபேர் புரிந்து கொள்வார்கள்? புரிந்து கொள்பவர்களும் சந்தேகத்துடனேயேதான் வெளியே வர முடிகிறது.

முன் பாதியை விட பின்பாதி பரபரப்பாகச் செல்லும் படம் எதற்காக எதிர்காலத்தில் நடக்க வேண்டும்..?

இரண்டாவது பகுதியில் கதை தொடருமாம்.
இப்படிக் கதை சொன்னால் எப்படி இயக்குனர்?

வெஞ்சென்ஸ் – ஆல் இன் தி கேம்..!

– வேணுஜி