உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட அளவுக்கு அதனை உலகினுக்குத் தந்த திருவள்ளுவர் பற்றி அதிகம் அறிந்ததில்லை. அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார் இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன்.
திருவள்ளுவர், வள்ளுவ நாட்டில் வாழ்ந்து வருவதோடு மக்களுக்குத் தமிழும் கற்றுக் கொடுக்கிறார். மனைவி வாசுகி உதவியுடன் அவர் எழுதிய செய்யுள்களை மதுரைத் தமிழ்ச சங்கம் நிராகரித்தது என்று அறியும் போது அவரை விட நமக்குதான் அதிகமாக வலிக்கிறது.
ஆனால் இதற்கெல்லாம் கலங்கி விடாமல். ஒன்றே முக்கால் அடி கொண்ட அந்த செய்யுள்களை தொடர்ந்து ஆயிரக்கணக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்.
இவரது தமிழ்ப் பணி ஒரு பக்கம் இருக்க நாட்டிலோ சூழ்ச்சி செய்யும் கயவர்களால் நல்லாட்சி வீழ்த்தப்பட்டு, மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
இந்தக் கொடுங்கோன்மையை எதிர்க்க விரும்பும் மக்கள் இது பற்றி திருவள்ளுவரிடமும் பேச, மீண்டும் நல்லாட்சி மலரச் செய்வதற்கான பணிகளிலும் அவர் ஈடுபடுகிறார்.
ஒரு பக்கம் நூல், இன்னொரு பக்கம் நல்லாட்சிக்கான போர் என்ற நிலையில் அவர் நினைத்ததெல்லாம் நடந்ததா என்று சொல்ல வருகிறது ‘திருக்குறள்’.
வரலாற்று நாயகர்களின் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்களை அந்தப் பாத்திரங்களாகவே நாம் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் இனி திருவள்ளுவர் என்றால் இதில் அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் கலைச்சோழன்தான் நினைவுக்கு வருவார். அதேபோல் அவர் மனைவி வாசுகி என்றால் இதில் நடித்திருக்கும் தனலட்சுமிதான் நினைவில் நிழலாடுவார்.
திருவள்ளுவராக நடித்திருக்கும் கலைச்சோழனின் பல்வேறு சூழல்களுக்கு ஏற்ற நடிப்பு அலாதியானது. அவர் தன் குறள்களில் எந்தெந்த விஷயங்களை எல்லாம் தொட்டுக் காட்டினாரோ அந்தந்த நிலைகளில் எல்லாம் அவர் வாழ்க்கையிலும் நடந்து கொண்டதை விவரிக்கிறது திரைக்கதை.
அதேபோல் வாசுகியாக நடித்திருக்கும் தனலட்சுமியின் தேர்வு, அவரது தோற்றம், நடிப்பு என்று எல்லாமே பொருத்தமாக அமைந்திருக்கின்றன.
தமிழரின் வீரத்துக்கும் மானத்துக்கும் கட்டியம் கூறும் காதல் ஜோடியில் பரிதியாக நடித்திருக்கும் குணாபாபுவும், பவளக்கொடியாக நடித்திருக்கும் பாடினி குமாரும் கவனம் பதிக்கிறார்கள்.
அதேபோல கலப்புத் திருமணங்கள் அப்போதே நடந்தன என்று சாட்சியம் கூறும் மாட்டத்தி பாத்திரத்தில் நடித்திருக்கும் சுகன்யாவும் சங்கு மாறன் பாத்திரத்தில் நடித்திருக்கும் சந்துருவும் உணர்த்தி இருப்பதும் ஆகப்பெரும் ஆச்சரியம்.
இவர்கள் தவிர பாண்டிய மன்னனாக வரும் ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, புலவர் பெருந்தலைச் சாத்தனாராக கொட்டாச்சி, குமணனாக அரவிந்த் ஆண்டவர், நன்னனாக கார்த்தி உள்ளிட்டவரும் தத்தம் பாத்திரங்களில் நிறைவாக செய்திருக்கிறார்கள்
இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களும் பின்னணி இசையும் அந்த காலத்திற்கே நம்மை இட்டுச் செல்கின்றன.
தனக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தன்னுடைய பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய்.
கலை இயக்குநர் சுரேஷ் கலேரி, ஆடை வடிமைப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரும் கதை நடக்கும் காலத்தை நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கும் செம்பூர்.கே.ஜெயராஜ், வள்ளுவரின் குறள்களுக்கு ஏற்ப அவர் வாழ்க்கையை இந்தக் கற்பனை கலந்த கதையில் கொண்டு வந்திருக்கிறார்.
இன்றைய வணிக மயமான உலகில் திருவள்ளுவரை கதை நாயகனாக்கி திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்று முயன்றிருக்கும் இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணனின் நோக்கமும், பணியும் சிறப்பானவை.
எனவே வழக்கமான படங்களில் வரும் எதையும் நாம் இதனுடன் ஒப்பிட்டு குறை காணக் கூடாது.
திருக்குறள் – வான் புகழ் வள்ளுவம்..!
– வேணுஜி