January 22, 2025
  • January 22, 2025
Breaking News
March 29, 2019

நாயுடன் 2 படங்களில் நடித்த நடிகையின் மகிழ்ச்சி

By 0 870 Views
கன்னட படமான ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழில் அவரது ‘பப்பி’ படம் மிக வேகமாக உருவாகி வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் ‘வாட்ச்மேன்’ படம் தமிழில் அவரின் முதல் படமாகியிருக்கிறது.
 
இது குறித்து நடிகை சம்யுக்தா கூறும்போது, “நான் இந்தப் படத்தை பற்றி பேசுவதற்கு முன்னர், தமிழ் சினிமாவின் படைப்புகளை கண்டு வியந்திருக்கிறேன். கதை சொல்லல் ஆகட்டும் தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகட்டும், தமிழ் சினிமா மிகச்சிறப்பாக இருக்கிறது. நான் தமிழ் சினிமாவில் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த இரண்டுமே புதுமையான கருத்துக்களை கொண்டு உருவானவை தான். அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை.
 
இந்த இரண்டு படங்களுக்கும் இடையிலான ஒரு பொதுவான தன்மை ‘நாய்’. ஆம், மிகவும் தற்செயலாக நடந்தாலும், எனக்கு பிடித்த செல்லப்பிராணிகளுடன் திரையில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் இந்த இரு திரைப்படங்களுமே வேறு வேறு வகையைச் சார்ந்தவை” என்றார்.
 
‘வாட்ச்மேன்’ படத்தில் பணிபுரியும்  அனுபவத்தை பற்றி அவர் கூறும்போது, “இது முற்றிலும் எனக்கு ஒரு புதிய அனுபவம். இயக்குநர் விஜய் சார், பெண் நடிகர்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டுபவர். ‘வாட்ச்மேன்’ படத்துக்காக என்னை அணுகியபோது, அது என்ன வகை படம் என்பதையோ அல்லது கதையை பற்றியோ நான் கவலைப்படவில்லை.
 
படத்தின் முடிவில், என் அனுமானங்களும் நம்பிக்கையும் சரி தான் என்பதை படம் நிரூபித்திருக்கிறது. ஏப்ரல் 12, 2019 அன்று படம் வெளியாவதால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்தனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மந்திரவாதிகள். அவர்கள் கைவண்னத்தில் படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இது என் பார்வையில் இருந்து மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் பார்வையாளர்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தை வழங்கும் என நம்புகிறேன்” என்றார்.
 
டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் (இசை), நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி (ஒளிப்பதிவு), ஆண்டனி (படத்தொகுப்பு), ஏ ராஜேஷ் (கலை) மற்றும் மனோகர் வர்மா (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.