May 4, 2024
  • May 4, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எனக்கே தெரியாமல் தயாரிப்பாளர் ஆனேன்..! – பாடகர் பிரதீப் குமார்
February 29, 2024

எனக்கே தெரியாமல் தயாரிப்பாளர் ஆனேன்..! – பாடகர் பிரதீப் குமார்

By 0 87 Views

புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர் சி.வி.குமார்‘எனக்குள் ஒருவன்’  மூலம் இயக்குநராக அறிமுகம் செய்த பிரசாத் ராமர் இப்போது இயக்கியிருக்கும் படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’.

பூர்வா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இந்தப்படத்தை பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், தயாரித்து இசையமைத்து பாடல்கள் எழுதியுள்ளது ஹை லைட்.

புதுமுகங்கள் நடித்திருக்கும் படத்தில் நாயகனாகியிருக்கும் செந்தூர் பாண்டியன் சினிமாவிற்கே புதிது. ஆனால், நாயகி ப்ரீத்தி கரன் பிரபல மாடல் மற்றும் முறையாக நடிப்பு பயின்றவர்.

இவர் ஏற்கனவே ‘கட்டுமரம்’ என்ற படத்தில் நடித்திருப்பதோடு, ‘தங்கலான்’ மற்றும் ‘ட்ரைன்’ படங்களிலும் நடித்து வருகிறார்.

‘ஏ’ சான்றிதழ் பெற்றிருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகி புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் படத்தின் கன்டென்ட் ‘அடல்ட் ‘ சம்பந்தப்பட்டது.

படத்தில் இடம்பெறும் ஒரு லிப் லாக் காட்சிக்கு தமிழில் புகழ்பெற்ற முருகன் பாடலை பின்னணியில் ஒலிக்க விட தணிக்கையில் ஆட்சேபம் தெரிவித்து அந்தப் பாடலைத் தூக்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை படக் குழுவினர் சந்தித்தனர்.

“இந்த சமூகத்தில் இளைஞர்கள் மீதான பார்வை எப்படி இருக்கிறது, சமூகத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள், என்பதை சொல்லும் வகையில்தான் இந்த படத்தின் கதையை எழுதி இருக்கிறேன். இதன் திரைக்கதை ஒரு ரோட் டிராவல் பாணியிலும் இருக்கும்..!” என்று ஆரம்பித்த பிரசாத் ராமரிடம், “புதுமுகங்களை வைத்து முத்த காட்சி எடுத்திருக்கிறீர்கள் அவர்கள் தயங்காமல் நடித்தார்களா..?” என்றபோது,

“கதைக்காக படத்தில் முத்தக்காட்சிகள் வைத்திருக்கிறோம். அக்காட்சிகளை எடுக்கும் போது சம்மந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு மற்றும் அவர்களது பெற்றோருக்கும் விரிவாக புரிய வைத்துதான் எடுத்திருக்கிறோம். அந்த காட்சிகள் எந்தவிதத்திலும் நெருடலாக இருக்காது. படத்தை பார்க்கும் போது அதை நீங்களும் உணர்வீர்கள்..!” என்றவர் தொடர்ந்தார்.

“மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடையும் இரண்டு இளைஞர்கள், பூம்புகார் செல்வதற்கு முன்பு அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். அந்த இளைஞர்களின் நோக்கம் ஒன்றாக இருக்க, அந்த பெண்னின் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது. இறுதியில் இருவரது எண்ணங்கள் மற்றும் புரிதல் எப்படி இருக்கிறது, அவர்கள் மீதான சமூகத்தின் புரிதல் எப்படி இருக்கிறது, என்பதை பற்றி தான் படம் பேசுகிறது.

இந்தப் படத்தில், இது சரி, அது தவறு என்று அறிவுரையும் சொல்லவில்லை, எந்த ஒரு தீர்வையும் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விசயங்களை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள், என்பதை பற்றி மட்டுமே பேசியிருக்கிறோம், அதை திரையில் பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு பல கேள்விகள் எழும்..!”

தயாரிப்பாளர் பிரதீப் குமார் பேசும்போது , “எனக்குள் ஒருவன்’ படத்தின் போதே இயக்குநர் பிரசாத் ராமரும், நானும்  நண்பர்களாக பழகி வருகிறோம்.

ஒரு முறை அவர் இந்தக் கதையை என்னிடம் சொன்ன போது, புதிதாகவும், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ஜாலியான கதையாக இருந்தது, அதனால் உடனே ஆரம்பித்து விடலாம் என்று சொன்னேன், பிறகுதான் தெரிந்தது நான்தான் தயாரிப்பாளர் என்று. நான் மட்டும் தயாரிக்கவில்லை, எனக்காக என் குடும்பமே ஒன்று சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது.

பார்த்த அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

நாயகனாக நடித்திருக்கும் செந்தூர் பாண்டியன், “நான் ஆடிசன் மூலம் தேர்வானாலும், இந்த படத்திற்காக பயிற்சிகள் மேற்கொண்டு நடித்திருக்கிறேன்…” என்றார்.

அவரது நண்பராக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ் மதியழகன் என்பவரும் ஆடிசன் மூலம் தேர்வாகி நடித்திருக்கிறாராம். 

நாயகி ப்ரீத்தி கரண் பேசும் போது, “நான் மாடலிங்கில் இருப்பதால் நாகரிகமான நடத்தையுடன் இருப்பேன். நான் நடப்பதே வேறு மாதிரி இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் பாத்திரம் சராசரி பெண்ணுடையது. அதைப் புரிந்து கொண்டு பொருத்திக் கொள்ள ஆரம்பத்தில் எனக்கு கடினம் ஆக இருந்தது.

சுடிதாரின் துப்பட்டா பறந்தால் கூட எனக்கு அது தவறாக தெரியாது. ஆனால் இந்தப் படத்தில் நான் ஏற்ற கேரக்டர் அதற்கு நேர் மாறானது. அதைப் புரிந்து கொண்டு பிறகு சரியாக நடித்து விட்டேன்..!” என்றார்.

இந்த படத்தை வழக்கமான சினிமா பாணியில் எடுக்காமல் நிஜ வாழ்க்கை பயணமாக எடுத்திருக்கிறார்களாம். அதனால் வழக்கமான லொக்கேஷன்களைத் தவிர்த்து, இதுவரை திரைப்படங்களில் பார்க்காத மதுரை பகுதிகளில் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார்கள்.

தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் என்று அனைத்து பகுதிகளையும் கூட லைவ் லொகேஷன்களிலேயே படமாக்கி இருக்கிறார்கள் இதனால் அந்தப் பகுதி ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கும் போது தங்களை படத்துடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.

மார்ச் எட்டாம் தேதி வெளியாகிறது ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..!’

“எப்படியோ… நல்ல பேரை வாங்கினால் சரி..!”

– வேணுஜி