March 13, 2026
  • March 13, 2026
Breaking News
February 27, 2026

ஃபோர்த் ஃப்ளோர் திரைப்பட விமர்சனம்

By 0 61 Views

சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை கையகப்படுத்தி ஒரு ரவுடிக் கும்பல் வாடகைக்கு விட்டு வருகிறது.

அங்கு நான்காவது மாடியில் மட்டும் குடியிருக்க யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில் ஐடி துறையில் வேலை பார்க்கும் நாயகன் ஆரி அர்ஜுனனுக்கு அவரது காதலியிடம் இருந்து அனாமதேய அழைப்பு வர, அந்த நான்காவது.மாடியில் வந்து தங்ககுகிறார்.

அங்கிருந்து அவரை விரட்ட அந்த ரவுடிக் கும்பல் முயற்சி செய்யும்போது அங்கிருக்கும் பலரும் கொல்லப்படுகிறார்கள். ஆரியின் கண் முன்னே அத்தனை கொலைகளும் நடந்தும் அவை நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

அத்துடன் அவரது காதலி பவித்ரா பற்றியும் எந்தத் தகவலும் இல்லை.

இதற்கான விடை காணப் புறப்படும் அவருக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் கதை.

ஐடி துறையில் வேலை பார்க்கும் இளைஞன் வேடத்துக்கு ஆரி கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். காதல், கோபம், பாசம், குழப்பம் என்று எல்லா உணர்ச்சிகளையும் காட்ட அவருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்திருப்பதை உணர்ந்து அவரும் நூல் பிடித்தமாதிரி நடித்திருக்கிறார்.

ஆனால், ஹீரோவாக அவர் எதையும் கண்டுபிடிக்க விடாமல் இயற்கையிலேயே அவருக்கு எல்லா எவிடென்சும் கிடைப்பது, அவருக்கு அனாமதேய சக்தி கொடுப்பது என்று அவரது ஹீரோயிசத்தைக் குறைக்கிறது.

அவரது காதலியாக வரும் அல்லது வந்த பவித்ராவுக்கு சிறிய வேடம்தான். 

அதைவிட சற்றே பெரிய வேடம் ஆரியின் தோழியாக வரும் தீப்ஷிகாவுக்கு. 

பவித்ராவா, தீப்ஷிகாவா யார் ஹீரோயின் என்பதில் ஒரு குழப்பம் நிலவுகிறது.

வில்லனாக வரும் சுப்ரமணிய சிவாவுக்கு இப்படி ஒரு டெரர் முகமிருப்பது இந்தப்படத்தின் மூலம்தான் தெரிகிறது. அந்த ஆக்ரோஷப் பார்வை அபாரம். அவர் பாட்டுக்கு ஆகாதவர்களைப் போட்டுத் தள்ளிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார். போலீஸ் எதையும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

ஒளிப்பதிவாளர் ஜே.லக்ஷ்மன் திருப்தியாக வேலை பார்த்திருக்கிறார்.

தரண்குமாரின் இசையும் அப்படியே.

எழுதி இயக்கியிருக்கும் எல்.ஆர்.சுந்தரபாண்டி அமானுஷ்யத்குடன் அறிவியலையும் கலந்து கதை சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் அறிவியல் தாண்டி அமானுஷ்யமே ஜெயிக்கிறது.

ஃபோர்த் ஃப்ளோர் – ரியல் எஸ்டேட் டெரர்..!

– வேணுஜி