January 23, 2026
  • January 23, 2026
Breaking News
May 18, 2021

கரிசல் இலக்கிய முன்னோடி கிரா மறைந்தார்

By 0 677 Views

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் மண் சார்ந்தும் அதன் மக்களின் வாழ்க்கை சார்ந்தும் தனது படைப்பில் கொண்டு வந்ததவர் எழுத்தாளர் கிரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன்.

கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாக பெருமை பெற்றிருப்பினும் அனைத்து வட்டார இலக்கியங்களுக்கும் இவரை முன்னோடி என்றே கொள்ளமுடியும்.

1922ஆம் ஆண்டு கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் பிறந்த கி.ரா. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது வியப்புக்குரிய அம்சம். விவசாயத்தில் இருந்து தன் நாற்பது வயதில் இலக்கிய உலகுக்கு வந்தார்.

பள்ளிப்படிப்பை முடிக்காதவர் எனினும புதுச்சேரி பல்கலைக்கழகம் அவரை பேராசிரியராக பணியாற்ற அழைத்தது.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் மட்டுமன்றி புழக்கத்தில் இருக்கும் கரிசல் வட்டார சொற்களை தொகுத்தும், வாய்வழிக் கதைகளைத் தொகுத்தும் ஆவணப் படுத்தினார்.

சாகித்ய அகாடமி விருது, தமிழ்நாடு அரசு விருது, கனடா தமிழ் இலக்கிய தோட்ட விருது உள்ளிட்டு ஏராளமான விருதுகள் பெற்றுள்ள கிரா, புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 99.

2019 செப்டம்பர் 25ஆம் தேதி கிராவின் மனைவி கணவதி அம்மாள் காலமானார். அவர்களுக்கு திவாகர், பிரபாகர் என இரு மகன்கள் உள்ளனர்.

நூறு ஆண்டுகளுக்கு ஒன்றைக் குறை வைத்து மறைந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்த்து முடித்த அவர் பல நூற்றாண்டுகள் இலக்கிய உலகில் வாழ்த்து கொண்டிருப்பார்.

புதுச்சேரி அரசு அவரது உடலை அரசு மரியாதையுடன் அனுப்பி வைக்க, தமிழக அரசும் அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அனுமதி அளித்தது.