March 28, 2024
  • March 28, 2024
Breaking News
July 18, 2019

சரவண பவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

By 0 569 Views

சரவண பவன் ஓட்டல்களின் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.

முன்னதாக, சரவண பவன் ராஜகோபாலுக்கு பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட, உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் ராஜகோபால் ஆஜராகினார். அப்போது நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் சிறைக்கு செல்லும் போதே ராஜகோபாலின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

அதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கும் உடல்நிலை மிகவும் மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என ராஜகோபாலின் மகன் வழக்குத் தொடர்ந்ததையடுத்து ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் தேதி  வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபால் மாற்றப்பட்டார்.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை (18-07-2019 வியாழன்) சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.