நியாயப்படி இந்தப் படத்தின் தலைப்பு ‘சேது s/o காலிங்கராயன்’ என்று இருந்திருக்க வேண்டும். ஆனால் சேது என்கிற கேரக்டரையே இடைவேளை வரை சஸ்பென்சாக வைத்திருக்கும் இயக்குனர் பாரதி மோகன் அதைத் தலைப்பில் கொடுத்து சஸ்பென்சைக் கெடுத்து விட வேண்டாம் என்று நினைத்திருக்கிறார் போலும்.
உதய கிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார் ஆனால் அவரை யாரும் பெயர் சொல்லி அழைப்பதோ, அவர் பெயர் என்ன என்பதோ யாருக்கும் தெரியாது. காரணம், இரண்டாவது காட்சியிலேயே அவர் சுடப்பட்டு மலைக்காட்டில் விழுகிறார். அவரை மீட்கும் மலையின பழங்குடிப் பெண் அவரது உயிரைப் போராடி மீட்கிறார்.
ஆனால் உதய கிருஷ்ணாவுக்கு பழைய நினைவு எல்லாம் மறந்து போகிறது. எனவே அவர் யார் என்பது இடைவேளை வரை சஸ்பென்ஸ் ஆகவே இருக்க, அவரைத் தேடி போலீசும் அடிக்கடி காட்டுக்குள் வந்து போகிறது.
இதற்கிடையே நேர்மையான காவல் அதிகாரியாக இந்தப் படத்தின் இயக்குனர் பாரதி மோகனே வருகிறார். அவர் தலைமையில் காட்டுக்குள் வரும் போலீஸ் படை உதயகிருஷ்ணாவைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்கிறது.
அப்போதுதான் ஊர் உலகுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட அவருடைய பெயர் சேது என்பதும் விவசாயத்துக்காக நீரின்றி தவித்த அந்தப் பழங்குடிகளின் கிராமத்துக்கு கால்வாய் வெட்டி நீரைக் கொண்டு வந்த காலிங்கராயன் என்பவரின் புதல்வர் என்பதும் புரிகிறது.
அதனை அடுத்து என்னென்ன நிகழ்வுகள் நடந்தன அதற்கு முன்னால் நடந்தது என்ன என்பதெல்லாம் பின் பாதியில் சொல்லப்படுகிறது.
2010 லிருந்து 2021 வரை மேற்குத் தொடர்ச்சி மலையின் பழங்குடி மக்களின் விளை நிலங்களை சீரழிந்த காடுகள் என்று குறிப்பிட்டு காடு வளர்ப்பு என்ற பெயரில் மத்திய மாநில அரசின் கட்சிகளைச் சார்ந்த தொழிலதிபருக்கும் சாமியார்களுக்கும், அன்றைய ஆளும்கட்சி பிரமுகர்களின் நிறுவனங்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
பாரம்பரியமாக வாழும் மேற்குத் தொடர்ச்சி பழங்குடி மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காட்டு நிலம் ஆன்மீக வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து இன்றும் கூட சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை கருப்பொருளாகக் கொண்டு நீரின் மேன்மையையும் விவசாயத்தின் பெருமையையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாரதி மோகன்.
கதாநாயகனாக நடித்திருக்கும் உதய கிருஷ்ணா ஹீரோவுக்குரிய அங்க லட்சணங்களுடன் இருப்பதுடன் இயல்பாக நடிக்கவும் தெரிந்திருக்கிறார்.
கதை நாயகிகளாக தென்றல், குஷி, சைலஜா அந்தந்த பாத்திரங்களுடன் பொருந்திப் போகிறார்கள்.
இன்னொரு கதாநாயகனாக மருது செழியன் வீரம் கொப்புளிக்க நடித்திருக்கிறார்.
குணச்சித்திர வேடத்தில் சித்த வைத்தியராகவும் சமூக சேவகராகவும் ஆனந்தபாபு நடித்திருக்க, இவர்களுடன்…
மீசை ராஜேந்திரன், ஆந்திர வில்லன் அனந்தகோடி சுப்ரமணியம், ஆடிட்டர் பாஸ்கர்,கண்டாங்கி பட்டி ரவி ராஜன், காஞ்சி சேகர் ஆகியோர் கதையின் முக்கிய பாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள்.
நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் படத்தின் இயக்குனர் பாரதிமோகன், படத்தில் பழங்குடியின பெண்கள் சொல்வது போலவே ‘நல்ல போலீசுக்கு இலக்கணமாகத் தெரிகிறார்.
சந்திரன் சாமியின் ஒளிப்பதிவு வனத்தையும் பழங்குடிகளையும் இயல்புடன் காட்டி இருக்கிறது.
கிருஷ் சிவாவின் பின்னணி இசையும் படத்தின் தன்மையைச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்
இசை, இயக்கம், நடிப்பு என்று அனைத்து பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் பாரதி மோகன் பட்ஜெட்டுக்குப் பழுதில்லாமல் நல்ல செய்தி சொல்லும் ஒரு படத்தைத் தந்திருக்கிறார்.
இயக்கத்தில் நேர்த்தி கூட்டி, நம்பகமான திரைமொழியில் சொல்லி இருந்தால் அவர் சொல்ல வந்த விஷயம் பெருமளவு எடு பட்டிருக்கும்.
S/o காலிங்கராயன் – மண்ணின் மைந்தன்..!
– வேணுஜி