இந்தப் பட இயக்குனர் ராம் பிரபா ஒரு ஹாலிவுட் இயக்குனராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார் போலிருக்கிறது. ஆனால் தமிழ்ப் படம் மட்டுமே இயக்க வாய்ப்புக் கிடைத்திருக்க… மூன்று ஹீரோக்களை வைத்து ஆளுக்கு ஒரு துப்பாக்கியையும் கையில் கொடுத்து எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுங்கள் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறார் போலிருக்கிறது.
ஒரு ஆங்கிலப் படத்தில் கூட இவ்வளவு துப்பாக்கிச்சூடு நடந்திருக்காது.
நாயகர்களாக வரும் ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா மூவருமே ஆளுக்கு ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களை எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளிக் கொண்டே போகிறார்கள்.
முதல் பாதியில் குற்றுயிரும், கொலையுயிருமாக ஒரு வட இந்தியரை மீட்கிறார் ஜீவா. அவருக்கு நினைவு திரும்பியதும் அவரிடமிருந்து ஒரு உண்மையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் ஒரு சூட்கேஸ் நிறைய தங்க பாளங்களையும் வைரங்களையும் எங்கிருந்தோ அடித்து வைத்திருக்கும் பிரஜின் அதை விற்றுக் காசாக்கத் துடிக்கிறார்.
மற்றொரு பக்கம் பிரஜினை கொலை செய்யச் சொல்லி கில்லர் விஜய் விஷ்வாவுக்கு கோடி ரூபாய்க்கு ஆஃபர் வர, அதைவிட பிரஜனிடம் இருக்கும் சூட்கேஸைத் தூக்கினால் ஆயிரம் கோடி கிடைக்குமே என்று அதை அபகரிக்க நினைக்கிறார் அவர்.
கடைசியில்தான் புரிகிறது மூவருமே சுற்றிச் சுற்றி அந்த சூட்கேசில் இருக்கும் தங்கம், வைரத்துக்குதான் குறி வைக்கிறார்கள் என்பது. கடைசியில் யாரிடம் அது போய்ச் சேர்ந்தது என்பதுதான் மீதிக் கதை.
இவர்கள் மூவருக்கும் சொல்லி வைத்தாற் போல ஆளுக்கு ஒரு காதலி இருக்க, இந்தக் காதலிகளுக்காகவே ஒரு கட்டத்தில் கையில் கிடைத்த புதையலையும் விட்டுக் கொடுக்கிறார்கள் என்பது தனிக் கதை.
ரஜினி ஸ்டைலையே உல்டா செய்து நடித்திருக்கும் ஜீவா, ஏன் தன் தனித்தன்மையைக் காட்ட மறுக்கிறார் என்பது புரியவில்லை. (ரஜினி நடிப்பதைப் பார்ப்பதற்குதான் ரஜினியே ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருக்கிறாரே..?)
காதலிக்கு நீச்சல் குளத்துடன் ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற கனவிலையே உழலும் விஜய் விஷ்வா அதற்காக எவனையும் போட்டுத் தள்ள தயாராக இருக்கும் லவ்வர் பாய் அல்லது கில்லர் பாயாகத் தெரிகிறார்.
ஆனால் அவரது காதல், பாடல், ஊடாடல் எல்லாமே ஒரு மேக்சி கேபுக்குள் முடிவடைந்து விடுவது சோகம்.
இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி ஒரு தனி ஹீரோவாகத் தெரிய முயற்சித்து இருக்கிறார் பிரஜின். அவருக்குதான் அதிகபட்ச சண்டைக் காட்சிகள் இருக்கிறது. ஆனால் கையில் கிடைத்த தங்கத்தைக் கோட்டை விட்டதில் பிரஜினும் அதிர்ஷ்டக் கட்டையாகத்தான் இருக்கிறார்.
இவர்களின் காதலிகளாக வரும் சாய் தன்யா, ஆர்த்தி ஷாலினி, மோகனா மூவரும் படத்தைக் கலர் ஃபுல்லாக்க உதவியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவும் இசையும் மற்ற தொழில்நுட்ப உததிகளும் படத்தின் பட்ஜெட்டை நினைவுபடுத்திக் கொண்டே கடக்கின்றன.
ஆனால் கதைப்படி அந்த தங்கப்புதையல் யாரிடம் கிடைக்க வேண்டுமோ அவரிடம்தான் கிடைக்கிறது என்பதாக ஜீவாவிடம் கிடைப்பதுடன் முடிகிறது. ஆனால், இந்த முடிவில் நியாயப்படி அது மக்களின் சொத்து என்பதால் அது மக்களையே சேர வேண்டும் என்பதற்காக உயிரை விட்ட அவரது அப்பாவின் தியாகம் அடிபட்டு போகிறது அல்லவா..?
தன்னிடம் கிடைத்த அந்த ஆயிரம் கோடியை மக்களிடமே கொண்டு சேர்த்தார் ஜீவா என்பதாக முடித்து இருந்தால் (நாமும்) பட்ட பாட்டுக்கு ஒரு நியாயம் கிடைத்திருக்கும்.
அதை ஏன் செய்ய மறுத்தார் இயக்குனர்..?
படம் முழுதும் கொலைகளாக நிகழ்ந்திருக்க ஒப்புக்குக் கூட போலீஸ் எந்த காட்சியிலும் எட்டிப் பார்க்கவில்லை என்பது மட்டும்தான் லாஜிக் மிஸ்டேக் என்பது போல குறிப்பிடவும் முடியவில்லை.
தரைப்படை – தங்க வேட்டை..!
– வேணுஜி