April 19, 2024
  • April 19, 2024
Breaking News
July 9, 2019

தமிழ்நாட்டு தயாரிப்பு என்றால் மட்டமாக நினைக்கிறார்கள் – ஆர்கே

By 0 752 Views

எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே..

‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் விதமாக கின்னஸ் சாதனை நிகழ்த்துதற்கும் தயாராகி விட்டார் ஆர்கே.. அது குறித்த விபரங்களை விபரமாக பகிர்ந்துகொண்டார் ஆர்கே.

“தரமான தயாரிப்பாக இருந்தாலும் ‘மேட் இன் இந்தியா’ என்று சொன்னால் அதுவும் தமிழ்நாட்டுக்காரன் தயாரிப்பு என்று சொன்னால் அதை சற்றே மட்டமாக பார்க்கும் மனோபாவமே பல வெளிநாடுகளில் இருக்கிறது.. பலரும் உங்களுடைய தொழிற்சாலையை, சிங்கப்பூர், துபாய் போன்ற ஏதோ ஒரு நாட்டில் துவங்கினால் பிசினஸ் பெரிய அளவில் நடக்குமே என கூறினார்கள்.. ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே அனைத்திற்கும் போராடியே பழக்கப்பட்டவன் என்பதால் அவர்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மாற்றவேண்டும் என முடிவெடுத்தேன்.

உலகத்தில் தங்கள் தலைமுடிக்கு டை அடிக்கும் யாராவது வெறும் கையால் ஹேர் டையை தொட முடியுமா என்று கேட்டு, அதை வைத்தே கின்னஸ் சாதனை செய்து எங்களுடைய விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை உலக அளவில் நிரூபிக்க முடிவு செய்தேன்.

சரியாக 1005 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களை பயன்படுத்த செய்வது, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம்.

இதற்கான நடைமுறைகள் அனைத்தையும் முடித்துவிட்டோம்.. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1005 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.. அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துசெல்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கலந்துகொண்ட 1௦௦5 பேருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.. இந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு பயன்பாட்டாளராக பங்கேற்க இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்ய இருக்கும் ஆறு நடுவர்களில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வருகின்றனர்.. மீதி நான்கு நடுவர்களும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள்..

தற்போது தமிழ்நாட்டில் நிலவு தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக இந்த கின்னஸ் சாதனையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆணுக்கும் வெறும் நான்கு லிட்டர் தண்ணீர் என்கிற குறைந்த அளவே பயன்படுத்த இருக்கிறோம்.

இந்த சாதனைக்காக விண்ணப்பிக்கும்போது இத்தனை நபர்களை வைத்து உங்களால் சமாளிக்க முடியுமா..? இங்கே லண்டனில் இருந்து நடுவர்கள் வேறு வருவார்கள்.. சரியாக செய்யமுடியுமா என கேள்வி மேல் கேள்விகளாக கேட்டார்கள்.. ஒரு தயாரிப்பாளராக இத்தனை படங்கள் தயாரித்திருக்கிறேன் என்கிற ஒரே ஒரு விபரத்தை மட்டும் நான் சொன்னேன்.. அதன்பின் வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்கள்..

அவர்களை ஒப்புக் கொள்ளச்செய்தது ஆர்கே என்கிற பிசினஸ் மேன் அல்ல.. ஆர்கே என்கிற சினிமாக்காரன்.. எல்லாம் அவன் செயல் என்கிற படம் மூலம் எனக்கு கிடைத்த சினிமாக்காரன் என்கிற அந்தஸ்து தான் இந்த சாதனைக்கு என்னை தயார்படுத்தியது.. போட்டி நடத்துபவர்களையும் ஒப்புக்கொள்ள வைத்தது. சினிமா மூலம் நான் சம்பாதித்தது இதைத்தான்.

1991ல் காசு தங்க காசு என்கிற படம் மூலம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் நுழைந்தேன். ஆனால் என் வீட்டையே அடமானம் வைத்து தான் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது. அப்போதுதான் சினிமா எடுப்பதற்கு ஒரு வலுவான பொருளாதார பின்னணி இருக்க வேண்டும், வந்தால் நூறு கோடியுடன் படம் எடுக்க வரவேண்டும், அதற்கு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கவேண்டும் என்று நினைத்து தொழிலில் இறங்கி சாதித்து அதன் பின்பு எனது வீட்டை மீட்டு, மீண்டும் சினிமாவிற்குள் மிகவும் அழுத்தமாக அடி எடுத்து வைத்தேன்.

திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டு இருக்கிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. சினிமா ஒரு சூதாட்டம் போன்று ஆகிவிட்டது.. இதனை தெளிவாக தெரிந்துகொண்டு நான் மீண்டு(ம்) வந்ததால்தான் இதுவரை வெளியான எனது படங்கள் எதுவுமே எந்த ஒரு கடன் பிரச்சனையையும் கடைசிநேர ரிலீஸ் பிரச்சினைகளையும் சந்தித்ததில்லை. அதற்கு எனக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது என்னுடைய பிசினஸ்.

லைக்கா நிறுவனம் பல கோடி முதலீட்டில் படம் எடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.. எங்கிருந்து வருகிறது இந்த பணம்..? இதுபோன்ற பிசினஸ் மூலமாகத்தான்.. அங்கே சம்பாதித்து இங்கே கொண்டுவந்து செலவு செய்கிறோம்.. சினிமாவில் சம்பாதித்து பிசினஸ் செய்ய முடியாது.. பிசினஸில் சம்பாதித்துதான் சினிமாவில் முதலீடு செய்கிறோம் என்பது இதிலிருந்தே நன்றாக தெரியும்.. இந்த வருடத்தில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன்

இதேபோல இதுவரை உலகம் முழுவதும் தீர்க்கப்படாமலேயே உள்ள முக்கிய பிரச்சனை அல்லது நோய் என்று சொன்னால் அது குறட்டை விடுவதுதான்.. குறட்டை விடுபவர்களும் அதனால் பாதிப்புக்கு ஆளானவர்களும் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான சங்கடங்களை சந்திக்கின்றனர். உலகத்திலேயே இதற்கும் முதன்முதலாக விஐபி ஸ்மோக் ஹேர் ஆயில் என்கிற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளேன்.. சுமார் 2000 பேரிடம் இதை பயன்படுத்த சொல்லி இதன் வெற்றிகரமான செயல்பாட்டை உறுதி செய்துள்ளேன். கூடிய விரைவில் உங்கள் ஆதரவுடன் இந்த தயாரிப்பையும் பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறேன்” என்றார் ஆர்.கே.