படத்தின் தலைப்பே இது எந்த வகைப் படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதைத் தாண்டி யோசித்தால் கிட்டத்தட்ட கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் எல்லாப் படங்களுமே பெரும்பாலும் அந்த வகையைச் சேர்ந்தவைதான் என்பது புரிகிறது.
தன் அடையாளம் தெரியாத ஒருவன் சந்தர்ப்ப வசத்தால் அதைக் கண்டுபிடித்து அடிமைப்பட்டிருக்கும் தன் இனத்தை மீட்டெடுக்கும் கதை. அத்துடன் சிரிக்கவே தெரியாமல் இருந்தவர் காதல் பூத்து தன் புன்னகையையும் மீட்டெடுக்கிறார்.
அந்த வேடத்தைத் தாங்கி நிற்பவர் சூர்யா என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டுமா..?
சூர்யாவுக்கு சிரிக்கத் தெரியாத காரணம், சிறுவயதிலேயே தாய் என்று நம்பிக் கொண்டிருந்த சுவாசிகா இறந்து போகும் தருவாயில், “நீ எனக்குப் பிறந்தவன் இல்லை..!” என்பதை சொல்லிவிட்டுச் சாக, போதாக்குறைக்கு அவரது வளர்ப்பு தந்தையான ஜோஜு ஜார்ஜும் “நீ என் பிள்ளை இல்லை..!” என்றே சொல்லி வளர்க்கிறார்.
அத்துடன் தாதாவாக இருக்கும் அவர் மகனையும் தன் அடாவடி வேலைகளுக்கே அடியாளாகப் பயன்படுத்துகிறார்.
இந்தக் காரணங்கள் மட்டுமல்லாமல் சூர்யாவின் ஃப்ளாஷ் பேக் தெரியும் போதும் அவருக்கு சிரிப்பு வராத ஜெனடிக் காரணம் ஒன்றும் தெரிகிறது.
அப்படி இருக்கும் அவரை வளர்த்த அம்மாவுக்குப் பிறகு சிரிக்கச் சொல்லி அறிவுறுத்திய தோழி பூஜா ஹெக்டேவைக் கண்மூடித்தனமாகக் காதலித்து, ” மணந்தால் மகாதேவி..!” என்கிற வைராக்கியத்துடன் வாழ்க்கையை அதற்காக அர்ப்பணிக்கிறார். தன் ஆயுத பாணியையும் கைவிடுகிறார்.
ஆனால் சிரங்கு பிடித்தவன் கையும் இரும்பு பிடித்தவன் கையும் சும்மா இருக்க விடுமா..? அப்படி கல்யாணத்தன்று ஜோஜூ ஜார்ஜின் கையை வெட்டிப் பிரித்து ஜெயிலுக்குப் போகிறார். அந்தக் கடுப்பில் பூஜா ஹெக்டேவும் ஊரை விட்டு எங்கோ போய்விடுகிறார்.
இப்படி இருக்க பூஜாவையும், தான் யார் என்பதையும், தன் சிரிப்பையும் மீட்டெடுக்க சூர்யாவால் முடிந்ததா..? என்பதே மீதிக்கதை.
பல களம், பல காலக் கட்டம், பல கெட்டப்புகள் என்கிற விஷயமே சூர்யாவை அதிகம் கவர்ந்திருக்க வேண்டும். அவரும் காட்சிக்குக் காட்சி ஆர்வத்தைக் கொட்டி நடித்திருப்பதும் புரிகிறது. ஆனால் அவர் நடித்திருப்பதைக் காட்டிலும் ‘அடித்து இருப்பது’தான் அதிகமாக இருக்கிறது.
ஒரு சண்டை முடிந்து குனிந்து நிமிர்வதற்குள் அடுத்த சண்டை ஆரம்பித்து விடுகிறது. போதாக்குறைக்கு அந்தமானில் வைத்து கிளாடியேட்டர் வகை சண்டைகளும் இருப்பது சூர்யா ரசிகர்களுக்கு ஆக்சன் ட்ரீட்.
பூஜா ஹெக்டே சூர்யாவை ஹெக்டேர் கணக்கில் காதலித்தாலும், சென்டி மீட்டர் சைஸ் பிரச்சினைகளுக்கு எல்லாம் அவரை ஒதுக்கி வைத்துக் கொண்டிருப்பது கொஞ்சம் காண்டாகத்தான் இருக்கிறது.
தன் உயிருக்கும் மானத்துக்கும் பங்கம் வரும் போதெல்லாம் கணவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா என்று தெரியவில்லை. அந்த விஷயங்களுக்காகத்தான் சூர்யா கோபப்படுகிறார். அதற்காக இவர் முறுக்கிக் கொண்டு போகிறார்.
இந்த முக்கியமான விஷயத்தை சூர்யா கடைசி வரை பூஜாவிடம் விவாதிக்கவும் இல்லை.
இதற்கும் ஜோஜு ஜார்ஜ் எப்பேர்பட்ட தாதா என்பதையும் அவரது மகன் சூர்யா எப்பேர்ப்பட்ட அடிதடி பார்ட்டி என்பதையும் தெரிந்துதானே திருமணத்திற்கு சம்மதித்தார் பூஜா?
சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் மகனைக் காதலித்து மணந்து கொண்டு நாளை முதல் கடை பக்கமே போகாதே என்பது என்ன லாஜிக்?
இந்தக் கோளாறே இவர்களது காதல் பிரிவில் நமக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
சூர்யாவின் வளர்ப்பு அப்பா ஜோஜூ ஜார்ஜே ஒரு வில்லன்தான் இன்று இருக்க, இரண்டாவது பாதியில் அந்தமானில் இருக்கும் ‘விது’வும் ஒரு முக்கியமான வில்லன் ஆகிறார். அவரது பாடி லாங்குவேஜும், வில்லத்தனமும் ரசிக்க வைக்கின்றன. கூடிய சீக்கிரம் அவரை ஒரு படத்தில் ஹீரோவாகக் கூட பார்க்க வாய்ப்பு இருக்கிறது.
ஜோஜு ஜார்ஜ் தாண்டி பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம் என்று நடிப்பில் பழம் தின்று கொட்டை போட்ட நிறைய பேர் இதில் வருகிறார்கள். இவர்கள் போதாது என்று கார்த்திக் சுப்பராஜின் செட் பிராப்பர்ட்டிகளான கஜராஜ், கருணாகரன், முத்துக்குமார் அன் கோவும் படத்தில் இருக்க, இன்னொரு பக்கம் தமிழ் உள்ளிட்டு முகம் தெரிந்த தெரியாத நடிகர்களும் சேர்ந்து கொண்டு பிரேமில் இடம் கொள்ளாத அளவுக்கு நட்சத்திரப் பட்டாளம்.
இவர்களை எல்லாம் வைத்து வேலை வாங்கியது இயக்குனருக்குப் பெரிய காரியம். இதற்கு மேல் மூன்று காலகட்டத்திற்கு வண்ணங்கள் சேர்த்து, இசையமைப்பில் மாறுதல் காண்பித்து, சூர்யாவின் சரித்திர பிளாஷ்பேக் சொல்லி அதற்கும் ஒரு தீர்வு கண்டு… என்று மூச்சு வாங்க வேலை பார்த்திருக்கிறார் இயக்குனர்.
அவருக்கு தோதாகத் தோள் கொடுக்க, ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் எவ்வளவு குறைத்தும் ரெண்டே முக்கால் மணி நேரம் நீளும் படத்துக்காக படம் நெடுக ‘ தம் ‘ கட்டி உழைத்திருக்கிறார்கள்.
இந்த உழைப்புக்கு ஒரு ஆள் உயர பொக்கே கொடுக்கலாம். அவ்வளவு தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளே வைத்துப் படம் எடுப்பது ஆகப்பெரிய வேலைதான்.
ஆனால் ‘எமோஷனல் கனெக்ஷன்’ என்கிற உணர்வு ரீதியான ஒட்டுதல் என்று வரும்போது இத்தனை விஷயங்களையும் மனதில் வைத்து எதை ‘ கனெக்ட் ‘ செய்து கொள்வது என்பதில் நமக்குப் பெரிய குழப்பமே ஏற்படுகிறது.
காதல்தான் முக்கியம் என்று நினைத்திருந்தால் ஜோஜு ஜார்ஜிடம் மறைத்த அந்தக் கருமம் பிடித்த கோல்டு ஃபிஷ் விஷயத்தை ஒப்படைத்து விட்டு வெளியே வந்து சூர்யா ஜாலியாக இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
இது இயக்குனருக்கும், சூர்யாவுக்கும் ஏன் தோன்றவில்லை என்று நமக்குத் தெரியவில்லை.
அத்துடன், படத்தில் இடம்பெறும் மிக முக்கிய விஷயமான ‘லாஃப்டர் தெரபி’ என்கிற சிரிப்பு சிகிச்சைக்கு என்ன ஜோக்குகள் சொல்லி சிரிக்க வைக்கிறார்கள் என்பதைக் கடைசி வரை நமக்குச் சொல்லவில்லை… என்றாலும் கடைசியாகச் சொல்லப்படும் ஒரு ஜோக்… அல்டிமேட்..!
வசனங்களையும் எழுதிய கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு கேள்வி – “வடக்குல இருக்கிறவன் வாக்குத் தவற மாட்டான்..!” என்று சூர்யா பேசுவதாக ஒரு வசனம் வருகிறது… அப்படின்னா..?
இவற்றையெல்லாம் தாண்டி விவரிக்க முடியாத ஒரு மாபெரும் கதம்ப அனுபவத்துக்காக இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்கலாம்.
ரெட்ரோ – (அந்தமான்) அட்ராசிட்டி..!
-.வேணுஜி