January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எம்ஜிஆர் பெயரை தலைப்பில் வைத்து எத்தனை வில்லங்கம்
February 11, 2020

எம்ஜிஆர் பெயரை தலைப்பில் வைத்து எத்தனை வில்லங்கம்

By 0 790 Views

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் வெற்றிகரமான இயக்குநரான பொன்ராம் தொடர்ந்து ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கி சிறந்த பொழுதுபோக்குப் பட இயக்குநராக அறியப்பட்டார்.

இப்போது அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் ‘எம்ஜிஆர் மகன்’. இந்தப் படத்தில் சசிகுமார், மிருணாளினி ரவி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.

படம் தொடங்கிய நாள் முதலே படத்தின் கதை ஒரிஜினல் இல்லை என்று பல தரப்பிலும் புகார் எழுந்தது. ஆனால், இந்தப் புகார் பற்றி இன்றுவரை பொன்ராமோ படம் சம்பந்தப்பட்டவர்களோ வாய் திறக்கவே இல்லை. பட வெளியீடு அறிவிக்கப்பட்டால் இருக்கவே இருக்கிறது பஞ்சாயத்து.

எம்ஜிஆர் பெயரைத் தலைப்பில் தாங்கியும் இப்படியொரு தப்பு செய்கிறார்களே என்று முதலிலேயே எழுதியிருந்தோம். கடந்த வருடம் செப்டம்பரில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு இருக்கிறதாம்.

இந்நிலையில் இந்தப்படம் பற்றி இன்னொரு புகார் எழுந்துள்ளது. படத்தை முதல் பிரதி அடிப்படையில் இயக்கி வரும் பொன்ராம் படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு இதுவரையில் ஊதியமே கொடுக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்தான் அது. புரடக்‌ஷன் தரப்பிலிருந்து பணம் வரவில்லையென்றே அவர் ஊதியம் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தாராம்.

பொறுத்துப் பார்த்தவர்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரிக்க, அவர்களோ பேசிய தொகைக்கு அதிகமாகவே தந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இதில் அதிர்ச்சியடைந்த சிலர் பொன்ராமை அடிக்கவே போயிருக்கிறார்கள் என்று தகவல் பரவி வருகிறது. ஏன் இந்தப் பித்தலாட்டம் என்று தெரியவில்லை.

“தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்… தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்…” என்று எம்ஜிஆர் பாடினார். இதில் பொன்ராம் திருந்துகிற டைப்பா… இல்லை வருந்துகிற டைப்பா தெரியவில்லை. பார்க்கலாம்..!