தலைப்பைப் பார்த்து பெரிதாக குழம்ப வேண்டியதில்லை. நீள இரவு என்பதுதான் இதன் பொருள். அதை அப்படியே சொல்லி இருக்கலாமே என்று நீங்கள் கேட்க கூடும். ஆனால் இயக்குனர் அப்படி நினைக்கவில்லையே..?
கார்த்திக் சுப்புராஜுக்கு அப்படி என்ன இலங்கைத் தமிழ் கதைகளின் மேல் ஆர்வமோ தெரியவில்லை. குறும்பட காலத்தில் இருந்து அவருக்கு இலங்கையில் போர் பதட்டம் மிகுந்த நேரங்களில் நடந்த கதைகளை படமாக்குவதில் அலாதி விருப்பம்.
இந்த முறை அவர் தயாரிப்பாளராக மட்டும் நின்று இது போன்ற கதைகளை கையில் வைத்திருக்கும் சோமிதரனை இயக்குனர் ஆக்கி இருக்கிறார்.
இதுபோன்ற போராளிக் கதைகளில் வழக்கமாக இருக்கும் பிரச்சனைகள், இந்த கதையிலும் உண்டு. போராளிகளின் மன நிலைக்கு சென்று ஒரு கதையை யோசிக்காமல் ஒரு படைப்பாளியாக நின்று போராளிகளுக்குள் புகுந்து கதை எழுதுவார்கள் நம் கதாசிரியர்கள்.
அப்படிப்பட்ட கதைதான் இதுவும். ‘உண்மை சம்பவங்களிலிருந்து தொகுக்கப்பட்டது’ என்று ஒரு வரி போட்டு விட்டால் நாம் அனைத்தையும் நம்பி விடுவோம் என்று அவர்கள் நம்புவதும் இதற்குக் காரணம்.
1980 களின் இறுதியில் நடக்கும் கதை. இந்திய அமைதிப்படை அங்கே சென்று போராளிகளை ஒடுக்க நினைக்க… கதை சொல்வது அதைப் பற்றி அல்ல.
அங்கு வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தில் மறுநாள் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவிருக்க… ஒரு பக்கம் சிங்கள ராணுவம், இன்னொரு பக்கம் தமிழ்ப் போராளிக் குழுக்கள் இவற்றுடன் மூன்றாவது பிரச்சினையாக இந்திய அமைதிப்படை… இந்த பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் அவர்கள் நினைத்தபடி திருமணம் நிறைவேறியதா என்பதுதான் கதை.
இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்று நிகழ்த்திய செயல்களைப் பற்றி நாம் நிறைய அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் இந்திய அமைதிப்படை மிகவும் அமைதியாகவே நடந்து கொண்டதாகவே படத்தில் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு முக்கியமான காரணம் அந்த படை குழுவின் தலைவர் நாயகன் நவீன் சந்திராவாக இருக்க, அவர் கண்டிப்பாக நல்லவராகவே இருந்தாக வேண்டும் என்கிற தமிழ்ப் பட விதி இதற்கும் பொருந்தும்.
அதனாலேயே நிறைய பெண்கள் இருக்கும் அந்த குடும்பத்துக்குள் அமைதிப்படை புகுந்ததும் எந்தத் தவறும் நேர்ந்து விடாது என்பது நமக்கு இயல்பாகவே புரிந்து விடுகிறது.
இன்னொரு பக்கம் தமிழ் போராளிகள் பொதுவாகவே இன விடுதலைக்காக போராடும் ஒழுக்கம் உடையவர்கள் என்பதால் அந்த குழுவை தலைமை தாங்கும் சனந்த் மிகவும் நல்லவராக இருப்பதிலும் வியப்பில்லை.
இந்த இரு நல்லவர்களும் சேர்ந்து ஒரு நீள இரவில் இலங்கை மண்ணில் என்ன சாதித்தார்கள் என்பதுதான் கதையின் மையப் புள்ளி.
நவீன் சந்திரா வழக்கம் போன்ற முகபாவனைகளுடன் நல்லவராகவே நடித்திருக்கிறார்.
இயக்கப் பெயர் வேறாக இருக்க தன்னுடைய உண்மை முகத்தை காட்ட வேண்டி வரும் பொழுதில் சனந்த் அடையாளம் தெரிகிறார். ஆனால் தன் காதலை நினைத்து போர்க்களத்தில் அவர் அவ்வளவு உருகி அழுதிருக்கத் தேவையில்லை.
பொதுவாக நம் போராளிப் படங்களில் இது போன்ற இடங்களில்தான் படைப்பாளி ஒரு போராளிக்குள் நுழைந்து அவர்களின் எண்ணத்தைக் குழப்பி விடுகிறார்.
தமிழ்க் குடும்பத்தை தலைமை ஏற்று நடத்தி வரும் கபிலா வேணுவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஆனால் இரவில் காலில் குண்டடிப்பட்டு மறுநாள் சர்வ சாதாரணமாக அவர் இயங்கிக் கொண்டிருப்பது எப்படி என்று தெரியவில்லை.
மணப்பெண்ணாக வரும் ரூபா கொடுவாயூர் அந்த பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். அவர் படத்துக்குள் பங்காற்றியதை விட படம் முடியும்போது அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்கிற பதட்டம்தான் அதிகமாக நம்மைத் தொற்றிக்கொள்கிறது.
இவர்களுடன் விது, சித்து குமரேசன், நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் கோகடே உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களில் மிக்கப் பொருந்தி இருக்கிறார்கள்.
செல்வரத்தினம் பிரதீபனின் ஒளிப்பதிவைக் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். இரவுக்கு ஒளி அமைப்பதில், அதுவும் இயல்பான ஒளியில் அதை படமாக்குவதில் இருக்கும் நெருக்கடிகளைச் சமாளித்து குழப்பம் இல்லாமல் நம்மைப் படம் பார்க்க வைத்திருக்கிறார்.
கே வின் இசைக்கும் படத்தில் பெரும் பங்கு உண்டு. இந்த உணர்வு பூர்வமான இசை இல்லாவிட்டால் இந்த அளவுக்காவது இந்தப் படத்தில் நம்மால் ஒன்று இருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
எழுதி இயக்கியிருக்கும் சோமிதரன் படத்தில் அங்கங்கே நம்மை கைதட்ட வைத்திருக்கிறார். ஆனால் முழு படத்திலும் அவ்வாறு நம்மால் ஒன்ற முடியவில்லை என்பதுதான் உண்மை.
குறிப்பாக அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு போர் குழு மற்றும் பொதுமக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை நமக்கு புரிய வைக்க, அந்த எண்ணங்களை கதாபாத்திரங்களின் வழியாக அவர் கடத்தும் போது அந்த கதாபாத்திரங்களின் தன்மை சிதைந்து நாடகத்தனமாகி விடுகிறது.
நவீன் சந்திராவுக்கும் சனந்த்துக்கும் நடக்கும் உரையாடல் அப்படிப்பட்டதுதான்.
அதே போல முந்தின இரவில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்ற அளவில் இந்திய அமைதிப் படைக் குழுவில் ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர்கள் தலைமை சொல்லியபடி அடுத்த நாள் காலை தங்களை மீட்கும் குழு வரும் வரை காத்திருக்காமல் அவர்கள் பாட்டுக்கு விடிந்ததும் துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு வயல் வேலைக்கு செல்வது போல் கிளம்புவதெல்லாம் அபத்தமாக இருக்கிறது.
போர்க்களத்தில் எந்தக் குழுவும் தங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டதாகத் தெரியாமல் அவர்கள் போகிறபோக்கில் ஒவ்வொரு முடிவெடுத்து கொள்கிறார்கள்.
அதிலும் அந்த வீட்டுப் பெரியவர் சாமி கும்பிடும் போது நவீன் சந்திரா சென்று தீப ஆராதனையை கண்களில் ஒற்றிக் கொள்வதெல்லாம் ரொம்பவும் ‘க்ரிஞ்ச்’சான கற்பனை..!
இடைவேளை தரும் பதட்டத்தை படத்தின் இறுதி தரவில்லை.
நீளிரா – நீர்த்த உண்மை..!
– வேணுஜி