கேங்ஸ்டர்ஸ் என்பதை கேங்கர்ஸ் என்று சொல்வதிலிருந்தே நகைச்சுவை கலாட்டா ஆரம்பமாகிவிடுகிறது. அதிலும் சுந்தர் சி – வடிவேலு பிராண்ட் நகைச்சுவைப் படம் என்பதால் கேட்கவா வேண்டும்..?
நகைச்சுவைதான் பிரதானம் என்றாலும் அதற்குள் ஒரு சென்டிமென்ட் கதையையும் வைத்து ஹாட் அண்ட் ஸ்வீட்டாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.
ஊரைக் கெடுக்கும் மைம் கோபி, அருள்தாஸ் சகோதரர்களால் அந்த ஊர்ப் பள்ளியும் கெடுகிறது. இதைப் பற்றிய புகார்களை போலீஸ் கமிஷனருக்கு அந்தப் பள்ளி ஆசிரியை கேத்தரின் தெரேசா அனுப்ப, போலீஸ் துறையில் இருந்து ஒருவரை ரகசியமாக அனுப்புகிறார்கள்.
அதனை அடுத்து பள்ளிக்குள் வரும் சுந்தர் சி உடற்பயிற்சி ஆசிரியராக சேர்ந்து ஒவ்வொரு அநியாயத்தையும் தட்டிக் கேட்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் பள்ளிக்குள் வந்திருக்கும் சுந்தர் சி போலீஸ்தான் என்று வில்லன் கோஷ்டிக்குத் தெரிய வர அங்கே நமக்கு இன்னொரு சஸ்பென்ஸ் காத்திருக்கிறது.
கதையைப் பற்றியும் சரி, தன் நடிப்பைப் பற்றியும் சரி பெரிதாக சுந்தர் சி அலட்டிக் கொள்வதில்லை. தனக்குத தோதான கதையையும் நடிக்க வாகான பாத்திரத்தையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவர் பாட்டுக்கு தன் ராஜபாட்டையில் போய்க் கொண்டிருக்கிறார்.
அதன்படியே இந்தப் படத்திலும் இயல்பாக நடித்திருக்கிறார். ஆனால் இதில் இன்னும் இளமை கூடித தெரிவது ஆச்சரியம். அத்துடன் ஆக்ஷனிலும் வழக்கத்தை விட சற்றே அதிகமான வேகம் காட்டியிருக்கிறார்.
அவருடன் வடிவேலு வரும் காட்சிகள் எல்லாம் அதிரி புதிரிதான். ஹீரோவானது குணச்சித்திர நடிகரானது எல்லாவற்றையும் தூக்கி தூர வைத்து விட்டு அடிப்படையில் மக்கள் தன்னை எப்படி ரசிப்பார்களோ அதைப் புரிந்து கொண்டு நடித்திருப்பது வடிவேலுவை ரசிக்க வைத்திருக்கிறது.
அதிலும் படத்தின் இரண்டாம் பாதி வடிவேலு ரகளையில் வெடிவேலுவாகியிருக்கிறார். அவருக்கு ஒரு புதுப் பெயரை வைத்துவிட்டு வில்லன் கோஷ்டிக்குள் சுந்தர் சி அனுப்ப அந்தப் பெயரையே அவர் பெரும்பாடு பட்டு நினைவு வைத்துக் கொள்ள… அந்த வில்லன் கூட்டத்திற்கு வரும் பக்ஸ் பெருமாள் அவரது உண்மையான பெயரில் அழைக்க… தியேட்டர் இரண்டு படுகிறது.
நாயகி கேத்தரின் தெரசாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி காதல் காட்சிகள் இல்லை என்றாலும் கிளாமருக்கு நன்றாகவே பயன்பாட்டு இருக்கிறார்.
அவரைக் காட்டிலும் பிளாஷ் பேக்கில் சிறிய பாத்திரத்தில் வரும் வாணி போஜன் முத்திரை பதிக்கிறார். நெகிழ்ச்சி ஊட்டும் பாத்திரம் அவரது.
கண்களை மூடியே வில்லத்தனம் காட்டும் ஹரிஷ் பெராடி, பாதிக்கு மேல் வந்தாலும் சுந்தர்சி அண்ட் கோவை ரொம்பவே பாதிக்கிறார்.
கிளைமாக்ஸ்-ல் வரும் 100 கோடி ரூபாய் பணத்தையும் மொத்தமாக ஆட்டையைப் போட்டு ஓரிடத்தில் இருந்து கடத்துவது என்பதெல்லாம் நிஜத்தில் சாத்தியமே இல்லை. ஆனால் நாம் பார்த்துக் கொண்டிருப்பது கரம் மசாலாப் படம் என்பதால் அந்த லாஜிக்கை எல்லாம் கண்டுகொள்ள வேண்டியது இல்லை.
பலூன் டைப்பில் நடிகர்களுக்கு கட்டவுட் வைக்கும் கலாச்சாரம் இன்னும் வராத நிலையில் இவர்கள் வசதிக்காக விஷாலுக்கு அப்படி ஒரு கட்அவுட் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஐடியா புதுமையாக இருப்பதால் இனி உச்ச ஹீரோக்களுக்கு இந்த பலூன் டைப்பில் கட்டவுட்களை எதிர்பார்க்கலாம்.
இவர்களுடன் முனிஷ்காந்த், சந்தானபாரதி, மதுசூதனன் என படம் கொள்ளாத அளவு ஏகப்பட்ட கும்பல்.
கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவில் படம் ஜொலிக்கிறது.
கிளாஸ் ஆன இசை இசையமைப்பாளர் சத்யா இந்த மாஸ் படத்திறகு நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார். ஆனாலும் அவரது ‘கிளாஸ் டச் ‘தான் எடுபடுகிறது.
லாஜிக் பார்க்கும் குணத்தை எல்லாம் வீட்டிலேயே வைத்துப் பூட்டிவிட்டு குடும்பத்தோடு போய் குதூகலமாக சிரித்து விட்டு வரலாம்.
கேங்கர்ஸ் – கிச்சு கிச்சு மேக்கர்ஸ்..!
– வேணுஜி