“இந்த உலகத்தில் யாரும் புத்தனாக வாழ்ந்துவிட முடியாது. உலகில் உள்ள அத்தனை பேரும் யாருக்காவது துரோகம் செய்துவிட்டுத்தான் வாழ்ந்தாக வேண்டும் என்றுதான் உலக அமைப்பியல் இருக்கிறது. இதைத்தான் இந்தப் படத்தில் நான் சொல்லியிருக்கிறேன்.!” என்கிறார் ‘வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ்’ தயாரித்திருக்கும் ‘எவனும் புத்தனில்லை’ பட இயக்குநர் எஸ்.விஜயசேகரன்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில்தான் அவர் இவ்வாறு பேசினார். இயக்குநர் எஸ்.விஜயசேகரனின் திரையுலக ஆசான்களான ஆர்.வி.உதயகுமார் போஸ்டரை வெளியிட இயக்குநர் தளபதி அதனைப் பெற்றுக் கொண்டார்.
மேலும் இயக்குநர் எஸ்.விஜயசேகரன் பேசும்போது, “இது ஒரு ஜனரஞ்சகமான படம். அண்ணன், தங்கை பாசத்தை உள்ளடக்கிய ஆக்ஷன் திரில்லர் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
Snehan
மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் முக்கியமாக சொல்லி இருக்கிறோம். மலையில் வசிக்கும் மிருகங்களுக்கு அங்கேயிருக்கும் மக்களால் தீங்கு என்று வெளியேறச் சொல்கிறார்கள். ஆனால், மலைவாழ் விலங்குகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு மனிதர்களுக்கும் உண்டு என்பதால் அவர்கள் அங்கேதான் இருந்தாக வேண்டும்.
அந்த மலை வாழ் மக்களின் வாழ்க்கையில் விளையாடும் அரசியல் சக்திகளின் சதியை இந்தப் படத்தில் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறேன்.
படம் ‘மூணாறு’ அருகில் ஒரு மலை உச்சியில் படமாக்கப்பட்டது. படம் பிடிக்கப்பட்ட ஒன்றரை மாதமும் அனைத்து நடிகர், நடிகைகளும் அங்கே கிடைத்த குறைந்தபட்ச வசதியைப் பொறுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..” என்றார்.
அந்த நன்றிக்குரியவர்களாக நபி நந்தி, சரத் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுரும் நடித்துள்ளார். மற்றும் ஒரு கெளரவ வேடத்தில் பாடலாசிரியர் சினேகன் குத்தாட்டம் போட்டுள்ளார்.