September 16, 2024
  • September 16, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இந்தியை விட பல முன்னணி நட்சத்திரங்களை அந்தகனில் பயன்படுத்தி இருக்கிறோம் – இயக்குனர் தியாகராஜன்
August 7, 2024

இந்தியை விட பல முன்னணி நட்சத்திரங்களை அந்தகனில் பயன்படுத்தி இருக்கிறோம் – இயக்குனர் தியாகராஜன்

By 0 93 Views

இந்தியில் ‘அந்தாதுன்’ என்ற பெயரில் ரிலிஸாகி ஹிட் ஆன படத்தை ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீ மேக் செய்திருக்கிறார், பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜன்.

அவர் மகன் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அவரிடம் ‘அந்தாதுனு’க்கு இணையா எப்படி ஒரு தமிழ்வார்த்தையை பிடித்தீர்கள்?’என்று கேட்ட போது ”அந்தாதுன் என்றால் ஹிந்தியில, பார்வையற்றவன்னு அர்த்தம். அதுக்கு இணையான, சரியான வார்த்தையை சில நாட்கள் செலவு செய்து தேடினோம். நிறைய ஆய்வு பண்ணினோம். அதில் சிக்கிய வார்த்தைதான் ‘அந்தகன்..!” என்றார்.

மேலும் “ஹிந்தியில, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் அந்தப் படத்துக்கு அருமையா திரைக்கதை அமைத்திருப்பார். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் நெக்ஸ்ட் என்ன என்ற பரபரப்பு, சென்டிமென்ட், சஸ்பென்ஸ் எல்லாம் ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் உருவாக்கி படத்த்தை ஸ்பீடாக கொண்டு போயிருப்பார். அந்த வகையில் உருவாகி ஏற்கெனவே ஹிட் ஆன படம் ஆகி விட்டதால் தமிழுக்காக பெரிய மாற்றங்கள் பண்ணவில்லை, அது தேவையுமில்லை என்று நம்புகிறேன்.

அதே சமயம் சின்ன மாற்றங்களை மட்டும் பண்ணி உள்ளேன். இது கண்டிப்பாக எல்லா ரசிகர்களுக்கும் புது விதமான பீலிங்கை கொடுக்கும்..!” என்கிறார் தியாகராஜன்.

“ஹீரோ பார்வையற்ற பியோனா இசைக் கலைஞராக வருகிறாரே? இதற்காக பிரசாந்த்  ஏதும் பயிற்சி எடுத்தாரா?” என்று கேட்டால் “அவருக்கு சின்ன வயதிலேயே பியானோ பிரமாதமாக வாசிக்கத் தெரியும். படத்தில் பியானோ இசையை கம்போஸ் பண்ணியது, லிடியன் நாதஸ்வரம். ஆனால், அதை நிஜமாகவே வாசிச்சது பிரசாந்த். அதனால அந்த காட்சிகள் நடிப்பா இல்லாமல், இயல்பா இருப்பது போல் தெரியும். அதே போல சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையும் எல்லாருக்கும் பிடிக்கும்.

ஆனால் ஹிந்தியில இந்தப் படத்தைப் பார்க்கும் போதே, ஆயுஷ்மான் குராணா, தபு தவிர மற்றவர்கள் அதிகம் தெரியாதவர்கள். அதை , கவனத்தில் எடுத்துக் கொண்டு இதில் ஒவ்வொரு கேரக்டர்களிலும் முக்கியமான நடிகர்களை நடிக்க வைக்க முடிவு செய்தேன்.

அந்த வகையில் பிரசாந்த், பிரியா ஆனந்த் தவிர, நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், ஊர்வசி, யோகிபாபு, பூவையார்னு ஏகப்பட்ட பிரபலங்கள் இந்தக் கதைக்குள்ள வந்ததும் படம் பிரம்மாண்டமா மாறிவிட்டது. அதிலும் இக் கதைக்கு வலு சேர்க்கவும் இவர்களின் ஒவ்வொருவர் நடிப்பும் இருக்கும் என்பதுதான் ஹைலைட் .

ஹிந்தியில தபு நடித்த கேரக்டர் முக்கியமானது. அவரையே தமிழ்லயும் நடிக்க வைத்திருகலாமே? என்று கேட்கிறார்கள்.. உண்மைதான் .தபு ஹிந்தியில் ஸ்கோர் செய்திருப்பார். ஆனால், ஒரு மொழி புரியாமல் நடிக்கும் போது, உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடியுமா என்று தயக்கம் வந்தது .

அதனால், அந்த கேரக்டரில் சிம்ரனை நடிக்க வைத்து இருக்கிறேன். சிம்ரன் நடிப்பு பற்றி யாரும் சொல்லித் தெரியவேண்டாம். ஒரிஜினலில் தபுவை விட இந்த அந்தகனில் சிம்ரன் நடிப்பு மிக அட்ராக்டிவ்வாக இருக்கும். அதே போல்தான் சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் உட்பட ஏனைய ஒவ்வொரு நடிகர், நடிகைகளோட நடிப்பும் எல்லாரையும் கவரும்..!”

“ரவி யாதவ் தமிழில் படம் செய்து ஏகப்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரை எப்படி, ஏன் தேடிப் பிடித்து அழைத்து வந்துள்ளீர்கள்..?” என்று கேட்டால்,

“ரவி யாதவ் பிரமாதமான… முக்கியமான ஒளிப்பதிவாளர். பிரசாந்த் நடித்த செம்பருத்தி, காதல் கவிதை உட்பட ஏகப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். பிறகு ஹிந்திக்குப் போய் படுபிசியாகி அங்கே நிறைய படங்கள் பண்ணியபடி இப்போதும் முன்னணி ஒளிப்பதிவாளரா இருக்கார்.

அதனால் இந்தப் படத்துக்கு அவர் கேமரா மேனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அழைத்தேன்.கொஞ்சம் கூட யோசிக்காமல் கமிட் ஆனார். நான் மிகைப்படுத்தியோ பெருமைக்காகவோ சொல்ல வில்லை, அவரோட விஷுவல் உங்களை நிச்சயம் மிரட்டும்..!” என்கிறார்.

“அப்புறம் இளையராஜா பாடல்களை பயன்படுத்தி இருக்கீங்களாம்.. அப்படியா?” என்று கேட்டால், “ஆமாம். நவரச நாயகன் கார்த்திக், இதில் ஒரு ஆக்டராகவே வருகிறார். அதனால், இசைஞாநி இளையராஜா இசையில் அவர் நடித்த படங்களில் இருந்து 3 பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம் . அதுக்கு முறையாக யாரிடம் எப்படி அனுமதி தேவையோ அப்படி வாங்கி இருக்கிறோம் . அது மட்டுமில்லாமல் ‘அமரன்’ படத்தில் இடம் பிடித்து இன்றைக்கு இளசுகளை கவரும் ‘சந்திரனே சூரியனே’ பாடலையும் பயன்படுத்தி இருக்கோம்.

அதற்கு இசை அமைப்பாளர் ஆதித்யனிடம் அனுமதி வாங்கி விட்டோம். அந்தக் காட்சிகள் எல்லாமே படத்துல படு ரசனையாக இருக்கும். ஒவ்வொரு ரசிகர்களுக்கும் பழைய ஞாபகங்களை கிளரும் என்றும் உறுதியாகச் சொல்வேன்..!” என்றார்.

சிறப்பு சார்..!