April 26, 2024
  • April 26, 2024
Breaking News
February 8, 2019

திருட்டு விசிடி வர இலங்கைத் தமிழர்கள் காரணமா?

By 0 863 Views
இலங்கையைச் சேர்ந்த முக்கிய எழுத்தாளர் மாத்தளை  சோமு. ஈழத்து மக்கள் வாழ்வியலை, போராட்டங்களை, வலிகளைத் தன் எழுத்தில் வெளிப்படுத்தி வருபவர்.
 
இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 25 நூல்களுக்கும் மேல் படைத்துள்ள அவர், அண்மையில் சென்னை வந்திருந்தார். தமிழ்த் திரையுலகம் குறித்த அவருடனான உரையாடலில் இருந்து… 
 
தற்காலத்துத் தமிழ்ப் படங்கள் பற்றி என்ன கருதுகிறீர்கள்..?
 
வர்த்தக ரீதியிலான படங்கள்தான் அதிகமாக  வருகின்றன. கதாநாயகனை உயர்த்திப் பிடிக்கும் கதைகள்தான் பெரும்பாலும்  படங்களாக வருகின்றன. கதாநாயகிகளாக வடநாட்டிலிருந்து வெள்ளைத்தோல் நடிகைகளை இறக்குமதி செய்கிறார்கள். தமிழ்க் கதாநாயகிககளின் நிறம் அதுதானா? தமிழ்ப்படத்தில் காட்டப்படுவது தமிழரின் வாழ்வோ பண்பாடோ அல்ல. வருகிற பாத்திரங்களில் தமிழ் ஆத்மா இல்லை.
 
எனது ஆதங்கம் வருத்தம் என்னவென்றால் வர்த்தக ரீதியிலான படங்களின் நாயகர்கள் யாரும் நல்லவர்களாக இருப்பதில்லை. ரவுடிகளாக, அடியாட்களாக இருக்கிறார்கள். கூலிப்படை வைத்துள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களில் எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி நடிகர்கள் நடிக்கிறர்கள்.
 
யாழ்ப்பாணத்தில் கூட விஜய்யின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறான். இது மிகவும் ஆரோக்கியமற்ற ஆபத்தான போக்கு. இப்படிப்பட்ட தனிநபர் வழிபாட்டை வளர்த்துவிட்டுப் படங்களை ஓடவிட்டு அரசியலுக்கு வரவும் நினைக்கிறார்கள். எந்தப் பொறுப்பும் கவலையும் இல்லாமல் அடுத்த முதல்வர் தாங்கள்தான் என்கிற கனவில் மிதக்கிறார்கள். 
 
வெளிநாட்டு வியாபாரம் என்று கூறி முழு வர்த்தகமாகிவிட்ட சினிமாவில் தரம் மிகவும் குறைந்து விட்டது. ‘தங்க மயில்’ விருதுகள் வாங்கி ஒருகாலத்தில் தரமாக இருந்த மலையாளத் திரையுலகமும் கூட இன்று கெட்டுப்போய்விட்டது.துபாய், அரேபிய நாடுகளின் வியாபாரத்தை முன்வைத்து  முற்றிலும் வணிக மயமாகி விட்டது.
 
ரஜினி படம் பார்க்க காசு கொடுக்காத பெற்றோரை மகன் தாக்கினான் என்றெல்லாம் செய்திகளைப் படித்து வேதனைப்பட்டேன். நீ சினிமா பார்க்க பெற்றோரைத் துன்புறுத்தலாமா? வெளிநாடுகளில் இதற்கெல்லாம் அப்பா அம்மா காசு கொடுக்க மாட்டார்கள். தானே பகுதிநேரமாக வேலைபார்த்துக் கொண்டு சம்பாதித்துதான் அங்கு படிக்க வேண்டும் – படம் பார்க்க வேண்டும்.
 
இலங்கைப் பிரச்சினையைப் படமாக எடுப்பதை எப்படிப்பார்க்கிறீர்கள்?
 
இலங்கைப் பிரச்சினையைப் படமாக எடுப்பது பற்றி நான் எதிர்க்க மாட்டேன் – வரவேற்கவே செய்வேன். எம் மக்களும் அப்படி வரவேற்கவே செய்வார்கள். இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக இன்னும்  ஆங்கிலப் படங்கள் வருகின்றன. உலகளவில் கவனிக்கப் படுகின்றன. யூத  இனத்துப் படைப்பாளிகளுக்கு அந்த இன உணர்வு இருக்கிறது. தமிழ்ப் படைப்பாளிகளுக்கு அந்த உணர்வும் இல்லை; துணிவும் இல்லை. 
 
தங்கள் இனத்தின் கதை, தங்கள் வாழ்க்கைக்கதை என்றாவது திரையில் வருமா என்று உலகத்தமிழ்ச் சமூகம் காத்துக் கொண்டு கிடக்கிறது. அதன்மூலம்  ஈழம் மீது சர்வதேசப் பார்வை படுமா என  ஏங்கிக்கொண்டு இருக்கிறது. இலங்கையில் சொல்லப்படாத, வாசிக்கப்படாத கதைகள் ஏராளமுண்டு. நான் கூட எம்மக்கள் குறித்துக் `கண்டிச்சீமை’ என்று நாவல் எழுதியிருக்கிறேன். 400 பக்கங்கள் கொண்டது.   
 
இதில் அரசியலுக்கு இடம் தராமல் எடுக்கலாம். இலங்கை யுத்தத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்ட துயரம் பெரும் துயரம். இதைப்பற்றி எத்தனையோ படங்கள் எடுக்கலாம். எவ்வளவு கதைகள் நம்மிடம் இருக்கின்றன. அதை எடுக்காமல் வெளிநாட்டுப் படங்களைச் சுட்டு எடுப்பது ஏன்?
 
இலங்கை  மண்ணில் லட்சக்கணக்கான கதைகள் உள்ளன.  அதைத்தான் பயந்து கொண்டு எடுக்கவில்லை, 
தமிழகத்தில் அண்மையில் அவர்கள் அருகில் சந்தித்த கஜாபுயல் பற்றி, அது கொடுத்த துயரம் பற்றிச் சினிமா எடுக்கலாமே… ஏன் எடுக்கவில்லை… எடுப்பார்களா..?
 
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இடப்பெயர்வு பற்றி பாலா ‘பரதேசி’ எடுத்தார் அதில் அரசியலா இருந்தது?
 
சிரியப் போர்பற்றி, ஆப்கன் போர் பற்றி அமெரிக்காக்காரன் படம் எடுக்கிறான். அதில் அரசியல் இல்லை. எந்தக் கட்சியும் இல்லை.  யாருடைய கொடியும் இல்லை. மக்களின் வலியும் வாழ்க்கையும் மட்டுமே இருக்கும்.
 
அதேபோல இலங்கைப் பிரச்சினையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு சித்தாந்தம் கொடிகளுக்கு இடமின்றி மக்களின் போராட்டங்களையும், துயரங்களையும், வேதனைகளையும், கண்ணீரையும், வலிகளையும் எடுக்கலாம். அரசியல் கலவாது மக்களுக்காகப் படமெடுக்கலாம். அப்படி எடுத்தால் உலகின் கவனத்துக்கு நம் மக்கள் நிலையைக் கொண்டு செல்ல முடியும். அப்படி எடுக்க முடியாமல் ஏதோ இரண்டு வரி வசனத்தை படத்தில் வைத்து விட்டு  பெரியதாகப் பேசிக்கொள்கிறார்கள் – இலங்கை மக்களுக்கு ஏதோ செய்துவிட்டதைப் போல ஏமாற்றுகிறார்கள். 
 
தமிழ்த் திரைப்படங்களின் திருட்டு விசிடி வருவதற்கும் இணையத்தில் வருவதற்கும் இலங்கைத் தமிழர்கள்தான் காரணம் என்று சொல்லப் படுவது பற்றி?
 
இதை நான் வன்மையாக மறுக்கிறேன்; கண்டிக்கிறேன். உண்மையைச் சொன்னால் தமிழ்நாட்டிலிருந்து  கூட கரங்கள் இதன் பின்னணியில் இருக்கலாம் பன்னாட்டுக் கரங்கள் இதன் பின்புலத்தில் இருக்கும் . எங்கோ யாரோ இலங்கைக்காரன் ஒருவன் அதில் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இலங்கைக்காரன் செய்கிறான் என்பதை ஏற்க முடியாது.
 
தமிழ்த்திரையுலகின் வெளிநாட்டு வியாபாரம் பெரும்பாலும் இலங்கைத் தமிழர்களைச் சார்ந்து உள்ளது. அவர்கள்  தாங்கள் உழைப்பதில்  வரும் வருமானத்தில் கேளிக்கைக்காக  என்றால்  பெரும்பாலும் திரைப்படத்துக்கே அதிகம் செலவிடுகிறார்கள்.
 
ஆஸ்திரேலியாவில் ஒரு டாக்டர் இருக்கிறார் அவர் பாகிஸ்தான்காரர். அவர் பலமொழிகள், குறிப்பாக தமிழ் திருட்டு விசிடியை விநியோகித்து வருகிறார். அவரை ஒன்றுமே செய்ய முடியாது .சுதந்திரமாக இது நடக்கிறது. தமிழில்தான் இப்படித் திருட்டு விசிடி கூச்சல் கேட்கிறது. ஆனால் வெள்ளைக்காரர்களிடம் இந்தப் பிரச்சினை  இல்லை. அதற்கான வழியைக் கண்டுபிடித்துச் செயல்படுத்தி வருகிறார்கள். அதனால் எங்காவது ஆங்கிலப்படம்  இப்படி வருவது கண்டுபிடிக்கப் பட்டால்  தண்டிக்கப் படுவார்கள். பெரும் தொகையை நஷ்ட ஈடாக வசூலிப்பார்கள்.
 
இதன் கரம் மலேசியாவில் கூட இருக்கிறது அங்கிருந்துதான் படம் வந்த இரண்டாவது வாரமே சிடி வருவதாகச் சொல்கிறார்கள். திருட்டுவிசிடியை 2 டாலர்களுக்குத் தருகிறார்கள். ‘பேட்ட’ படம் வந்து 3 டாலருக்கு விற்றார்கள். இது தமிழ் நாட்டிலும் நடக்கிறது.
 
தமிழ் சினிமாவில் ஒரு படத்தின்  வணிகம் 200 கோடி 500 கோடி என்கிறார்கள் ஆனால் திருட்டு விசிடி ஒழிக்க எதுவுமே செலவு செய்வது கிடையாது. இது வரை இதற்காக,  இதைத் தடுக்க எவ்வளவு செலவு செய்து இருக்கிறார்கள்?
 
வெள்ளைக்காரர்கள் செய்வதைப் போல இதைக் கண்காணிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். படம் வெளியாகும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அங்கெல்லாம் படத்தின் உரிமையைப் பதிவு செய்து சட்டபூர்வமான பாதுகாப்பு செய்யவேண்டும் .அப்படிச்செய்து விட்டோம் என்றால் இதை மீறும் போது தண்டிக்க முடியும். இங்கு  உள்ளதைப் போல பல நாடுகளிலும் கையூட்டு கொடுத்து சரிக்கட்டட இயலாது.
 
எனவே தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கென ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்து முறைப்படுத்தி தடுக்கலாம். அதைவிட்டுவிட்டு வெறுமனே கத்திக் கொண்டிருந்தால் எந்தப் பயனும் ஏற்படாது.