April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எப்படிப்பட்ட பெண்ணை சிம்பு திருமணம் செய்வார் தெரியுமா – அவரே வெளியிட்ட தகவல்
November 19, 2021

எப்படிப்பட்ட பெண்ணை சிம்பு திருமணம் செய்வார் தெரியுமா – அவரே வெளியிட்ட தகவல்

By 0 372 Views

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’. 

கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர் 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். 

வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப்படம் பண்ணலாம் என சிம்புவிடம் இருந்து அழைப்பு வந்தபோது இவ்வளவு பெரிய படத்தை நம்மால் பண்ண முடியுமா என ஆரம்பத்தில் பயமாக இருந்தது. ஆனால் படம் முடிந்து பார்த்தபோது சிம்பு என்னிடம் ஒப்படைத்த வேலையை நூறு சதவீதம் சரியாக செய்திருக்கிறேன் என்கிற திருப்தி கிடைத்தது. 

இசைஞானி இளையராஜாவுக்கு எப்படி காதலுக்கு மரியாதை படம் ஒரு கம்பேக் படமாக இருந்ததோ, அதேபோல யுவன் சங்கர் ராஜாவுக்கு இந்த மாநாடு படம் இருக்கும். எஸ்ஜே.சூர்யா கூட, இது இன்டர்நேஷனல் சப்ஜெக்ட்.. ஹிந்தி ரீமேக் நல்லா போகும் என்றார். தெலுங்கிலும் கூட அவரே டப்பிங் பேசியுள்ளார்..!” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, “சிம்புவை பற்றி எல்லோரும் பலவிதமாக சொல்வார்கள்.. ஆனால் அவரை பற்றி சொல்லப்பட்டது, கேள்விப்பட்டது எல்லாமே பொய். அவரிடம் சில சேஷ்டைகள் உண்டு.. ஆனால் அவை எல்லாமே எனக்கு பிடிக்கும்.. இந்த வயதில் அப்படி சேஷ்டைகளுடன் இருந்தால் தான் அவர் சிம்பு. நான் படமெடுத்த காலத்தையும் இப்போது வெங்கட் பிரபு படமெடுக்கும் விதத்தையும் பார்த்து பிரமித்து போய் நிற்கிறேன்..!”

நடிகர் ஒய்.’ஜி.மகேந்திரன் பேசும்போது, “இந்தப்படத்துல சிம்பு ஏதாவது பிரச்சனை பண்ணுறாரான்னு என்கிட்டே கேட்டாங்க.. ஆமா பிரச்சனை பண்றார்.. சொன்ன டைமுக்கு சரியா வந்து கோ-ஆபரேட் பண்றாரு.. அதான் பிரச்சனைன்னு சொன்னேன். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ரெக்கார்டு பிரேக் செய்யும் அளவுக்கு இருக்கிறது..!” என்றார்.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது, “நாங்கள் பணக்காரன் படம் எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் பக்கத்து செட்டில் ஒரு சின்னபையன் பிரமாதமாக டான்ஸ் ஆடுறான் என சொன்னார்கள்.. எல்லோரும் அங்கே போய் பார்த்துவிட்டு வந்து இப்படி பாராட்டுவதை பார்த்து உடனே ரஜினி சார் ரொம்பவே ஆர்வமாகி, வாங்க நாமளும் பார்த்துட்டு வரலாம் என கூறினார். அங்கே குழந்தை நட்சத்திரமான சிம்புவின் நடனத்தை பார்த்து வியந்து என்ன மாதிரி திறமையா இருக்கான் பாருங்க.. பின்னாடி பெரிய ஆளா வருவான் என அப்போதே கணித்து பாராட்டினார்..!”

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்தப்படத்தின் தயாரிப்பு பணிகளை கவனிக்கும் மேற்பார்வை பொறுப்பை சுரேஷ் காமாட்சி சில நாட்கள் என்னிடம் கொடுத்திருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஒய்வு எடுக்கும்போது நான் சாதாரண நாற்காலியில் அமர்ந்து தூங்குவதை பார்த்து, சிம்பு தனது நாற்காலியை கொடுத்து என்னை வசதியாக தூங்க வழி செய்து கொடுத்தார். பெரியவர்களை மதிக்கும் குணம் அவரிடம் நிறையவே இருக்கிறது..!” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “எல்லோருக்கும் பிடித்த நடிகர் சிம்பு.. பிடிக்காது என்று சொல்வதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு ரசிகனாக நான் சொல்வதெல்லாம், நீங்க எப்ப வேணா வாங்க, எப்படி வேணா வாங்க,.. ஆனா அடிக்கடி வாங்க.. அதேமாதிரி இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யாவை நவீன நம்பியார் என இனிமேல் சொல்லலாம்..!” என்றார்.

எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “நான் அன்பே ஆருயிரே படத்தில் நடிச்சப்ப சில நேரம் சிம்புவை டைரக்ட் பண்ண சொல்லி நடிச்சிட்டு இருப்பேன்.. அந்த அளவு நாங்க திக் பிரண்ட்ஸ்.

சில சில காரணங்களால இடையில கொஞ்சம் கேப் விட்டுட்டார். ராமனே பதினாலு வருஷம் காட்டுக்கு போய் வந்தாரு.. சிம்புவுக்கும் அந்த மாதிரி தான் இது.

டப்பிங் முடிச்சுட்டு படத்தை பார்த்தப்ப தான் தோணுச்சு.. தீபாவளிக்கு படம் வரலைன்னா என்ன, படம் வர்ற அன்னைக்குதான்டா தீபாவளி அப்படின்னு ட்வீட் போட்டேன்..!” என்றார்.

யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “வெங்கட் பிரபு இந்தப்படத்தின் கதையை சொல்லும்போதே எதற்கு எப்படி இசையமைக்க போகிறோம் என்கிற ஆர்வத்துடன் கொஞ்சம் புதிராகவும் இருந்தது.. காரணம் டைம் லூப்பில் திரும்ப திரும்ப பல காட்சிகள் ரிப்பீட் ஆகும். ஆனால் முழுப்படத்தையும் பார்த்தபோது ஒரு பாசிடிவ் எனர்ஜி கிடைத்தது..!” என்றார்.

இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது, “நான் சென்னை-28 படம் பண்ணின சமயத்துல மதுரை ரிலீஸ்ல சிக்கல் ஏற்பட்டபோது சிம்புதான் அதை ரிலீஸ் பண்ணி கொடுத்தார். நானும் அவரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு பல முறை பேசியும் மாநாடு படத்துல தான் அது நடந்துருக்கு..!”

சிம்பு பேசும்போது, “என் படம்னாலே பிரச்சனைகள் வர்றது வழக்கமா போயிடுச்சு. இந்த மாதிரி சூழல்ல தைரியமா எல்லாத்தையும் எதிர்கொள்கிள்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணுனப்ப சுரேஷ் காமாட்சி தான் எனக்கு தெரிஞ்சார். 

வெங்கட் பிரபுவும் நானும் சின்ன வயசுல இருந்தே பழகிட்டு வர்றோம்.. என்கிட்ட அவனது அவரோட கதைகளை எல்லாம் சொல்வாரு.. ஆனால் வேறொரு ஹீரோவை வச்சு படத்தை பண்ணிட்டு போயிடுவாரு,.. இப்ப மாநாடு படத்துல ஒன்னு சேர்ந்துட்டோம். 

இது டைம் லூப் கதைன்னாலும் பார்க்குற உங்களுக்கு புரியும்.. ஆனா அதை படமா எடுக்குறத்துக்குள்ளே நாங்க பட்ட கஷ்டங்கள் அதிகம். யுவன் எனக்கு நண்பனா, சகோதரனா, அப்பாவா எல்லாமாக இருக்கார். அவரோட நட்சத்திரம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த அம்சமுள்ள ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணனும்னு தான் முடிவு பண்ணிருக்கேன்…!”

இந்தப்படம் வெளியானதுக்கு அப்புறம் எஸ்ஜே.சூர்யாவை பிடிக்கவே முடியாது..!”

என்றவர் திடீரென கண் கலங்கினார்.

“என்னை சுற்றி பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காங்க.. ஆனா அந்த பிரச்சனையெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. என்னை மட்டும் நீங்க பாத்துக்குங்க..!” என தன்னை தனது ரசிகர்களிடம் ஒப்படைப்பது போல நெகிழ்வாக பேசிய சிம்பு, அதற்கு மேல் பேச முடியாமல் தனது பேச்சை நிறைவு செய்தார்.