June 14, 2026
  • June 14, 2026
Breaking News
  • Home
  • பல்சுவை
  • உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ரேலா மருத்துவர் பென்ஹர் ஜோயல் ஷத்ராக் செய்தி
May 31, 2023

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ரேலா மருத்துவர் பென்ஹர் ஜோயல் ஷத்ராக் செய்தி

By 0 1192 Views

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: புகைப்பிடித்தலுக்கு எதிரான சிகிச்சை கிளினிக்குகளின் அவசியத்தை வலியுறுத்தும் மருத்துவர்கள்

புகையிலை பயன்பாடும் மற்றும் புகைப்பிடித்தலும் அதிக தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை உருவாக்குகின்றன என்பது பரவலாக அறியப்பட்ட உண்மையே. எனினும், புகையிலையின் மோசமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் குறைவாகவே இருக்கிறது. எனவே தான் இதன் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியன்று ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இதன் அனுசரிப்பிற்கான கருப்பொருளாக “எங்களுக்கு தேவை உணவு, புகையிலை அல்ல”. என்பது தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் மிக பிரபலமான ரேலா மருத்துவமனையில் பணியாற்றும் நுரையீரலியல் தீவிர சிகிச்சை மற்றும் உறக்க மருத்துவ நிபுணர் & நுரையீரல் இடையீட்டு சிகிச்சை மருத்துவர் டாக்டர். பென்ஹர் ஜோயல் ஷத்ராக் இந்நிகழ்வின் போது கூறியதாவது:

“தற்போது நுரையீரல் நோய்களுக்கான ஒரு முக்கிய இடர்காரணிகளுள் ஒன்றாக மட்டும் புகைப்பிடித்தல் இருப்பதில்லை; இதயநாள நோய்களுக்கும் மற்றும் நுரையீரல்கள் குரல்வளை, கணையம், மார்பகம் மற்றும் கர்பப்பை ஆகியவை உட்பட உடலின் பல்வேறு உறுப்புகளில் உருவாகும் புற்றுநோய்க்கும் ஒரு காரணியாக இருப்பது அறியப்பட்டிருக்கிறது.

இந்த நோயாளிகளில் 80% நபர்களுக்கு புகை பிடிக்கும் வரலாறு இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். அத்துடன், 90% நபர்களுக்கு நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பாதிப்பும் ஏற்படுகிறது.

ஒரு ஆண்டில் எங்களிடம் சிகிச்சைக்காக வரும் நபர்களுள் ஏறக்குறைய 700 நபர்கள் நாட்பட்ட நுரையீரல் அடைப்புநோய் பாதிப்புடன் வருகின்றனர். இவர்களுள் 70%-க்கு புகையிலை பயன்படுத்தும் அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த COPD நோயாளிகளுள் 30% நபர்கள் அவர்களுக்கு இருக்கும் இக்கடுமையான நோயையும் பொருட்படுத்தாது, தொடர்ந்து புகை பிடிக்கின்றனர்.

ஆகவே, இத்தகைய நோயாளிகளை கண்காணிக்கவும், சிகிச்சையையும், உரிய ஆலோசனையையும் வழங்குவதற்கு புகைப்பிடித்தலுக்கு எதிரான சிறப்பு கிளினிக்குகள் உருவாக்கப்படுவதற்கான அவசியம் இருக்கிறது. இவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்கான மனநல மருத்துவர்கள் மற்றும் ஆலோசனை வழங்கும் நிபுணர்களும் தேவைப்படுகின்றனர்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுள் 15% நபர்களுக்கு இந்த COPD நோய் உருவாகிறது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறிப்பாக புகைப்பிடிப்பவர்களிடம் அதிகரிக்கப்படுவது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகும்.” என்று டாக்டர். பென்ஹர் ஜோயல் ஷத்ராக் வலியுறுத்தினார்.