சென்னையில் வைத்து ஒரு இளம்பெண் வினோதமான முறையில் கொலை செய்யப்படுகிறார். வினோதம் என்றால்..? உடலெல்லாம் கருத்துப் போய் இறந்து போய் இருக்கிறார் அந்தப் பெண்.
இது இந்தியாவெங்கும் வைரலாக…, மும்பையிலும் எதிரொலிக்கிறது. அங்கே தன் மகளும் அதே விதத்தில் இறந்த சோகத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி அது ஒரு சீரியல் கில்லரின் வேலைதான் என்று பொறி தட்டி சென்னை புறப்படுகிறார்.
சென்னையில் ஏடிஜிபி யாக இருக்கும் சமுத்திரக்கனி அந்தக் கேசை அவரிடம் ஒப்படைக்க… அவர் சந்தேகப்படும் அஜய் தீஷனை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகிறார். அதற்குப் பின்னும் இரு பெண்கள் கொல்லப்படுகிறார்கள்.
கொலையாளி யார்… அந்தக் கொலைகளின் காரணம் என்ன என்று விஜய் ஆண்டனி கண்டு பிடிப்பதுதான் கதை.
இதுவரை நடித்த படங்களிலேயே விஜய் ஆண்டனி அதிக பட்சமாக எக்ஸ்பிரஷன்கள் கொடுத்திருக்கிறார். துருவ் என்ற அந்தப் பாத்திரத்தில் அஜய் தீஷனை துருவித் துருவி விசாரிக்கும் கட்டங்கள் பரபரப்பாக இருக்கின்றன.
உடலில் ஒரு பக்கம் கருப்பு மேக்கப் போட்டு நடித்திருக்கும் அர்ப்பணிப்பைப் பாராட்டலாம்.
அத்துடன் தானே ஒரு ஹீரோவாக இருக்க, இன்னொரு ஹீரோவான அஜய் தீஷனுக்கு திரையில் அதிகபட்ச இடத்தைக் கொடுத்திருப்பது பெருந்தன்மை.
அதை வீணாக்காமல் தன் அறிமுகப் படத்திலேயே நடிப்பிலும், உடல் மொழியிலும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறார் அஜய் தீஷன்.இவர்தான் கொலையாளி என்ற சந்தேகத்தைத் தான் நடிப்பில் கொடு வந்திருக்கும் அவர், தான் பிளாஷ் பேக்கில் நம்மைக் கலங்க அடிக்கிறார்.
உண்மையிலேயே அவர் நீச்சல் வீரரா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவுக்கு நீரில் மிதந்து, மூழ்கி, மூச்சடக்கி தன் பாத்திரத்தை நியாயப் படுத்தி இருக்கிறார் அஜய். அவரது சகோதரப் பாசமும் ரசிக்க வைக்கிறது.
இயல்பாகவே நல்ல நடிக்க நடிகையான பிரிகிடா, இதுவரை ஏற்காத போலீஸ் வேடத்தில் மிடுக்காக நடித்திருக்கிறார்.
அஜய்யை துரத்திக் காதலித்துக் கைவிடும் தீப்ஷிகாவும் ரசிக்கவும், வெறுக்கவும் வைக்கிறார்.
சற்றே மாநிறமான தீபிகா படுகோனே சாயலில் வெண்ணிலா என்ற பாத்திரத்தில் வரும் கனிமொழியின் விழிகளே கதை பேசுகின்றன. சற்றும் எதிர்பாராத பத்திரம் அவருடையது.
இவர்களுடன் வினோத் சாகர், நடராஜ், அருண் ராகவ், கதிர், ராஜாராம், அபிஷேக், நிஹாரிகா தத்தம் பாத்திரங்களில் பொருந்தியிருக்கிறார்கள்.
எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை மேம்படுத்திக் காட்டியிருக்கிறது.
விஜய் ஆண்டனியின் இசையும் அந்தத் தரத்தை நிரந்தரமாக்கி இருக்கிறது ..!
விஷ்ணு, கே.பழனியுடன் இணைந்து குழுவாக இந்தப்படத்தின் கதையை உருவாக்கி, விஷ்ணுவுடன் திரைக்கதையை எழுதி இயக்கி இருக்கும் லியோ ஜான் பால் நிறைய நம்பிக்கையை இந்தப் படத்தில் ஏற்படுத்தி இருக்கிறார்.
ஒரு பக்கம் இயற்கையின் பேராற்றலையும், இன்னொரு பக்கம் அறிவியலையும் இணைத்திருக்கும் ட்ரீட்மென்ட் அற்புதம்..!
அவரே படத்தின் எடிட்டராக இருப்பதால் தன் கற்பனையை அப்படியே திரையில் ஒவ்வொரு அங்குலத்திலும் கொண்டு வந்திருக்கிறார்.
வழக்கமான சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் தரமான சஸ்பென்ஸ் த்ரில்லராக அமைந்திருக்கிறது இந்தப்படம்.
மார்கன் – மாஸ்டர் மைண்ட் மிஸ்டரி..!
– வேணுஜி