September 12, 2026
  • September 12, 2026
Breaking News
September 16, 2020

சூரரைப் போற்று பாடலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

By 0 888 Views

 தொடர்ந்து சமூக விஷயங்கள் பற்றி பேசினாலே அவர்களுக்கு அடுக்கடுக்காக சோதனைகள் வருவது தெரிந்த விஷயம். அந்த வகையில் அவ்வப்போது சமூகம் பற்றி கருத்து தெரிவித்து வரும் சூர்யா நிறைய பிரச்சினைகளின் இலக்காகி வருகிறார்.

அவர் நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது…

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

இப்போது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதற்கான காத்திருப்பு தொடர்கிறது.

70 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கும் அந்த பாடல் வரிகளில் வீடியோ கீழே…