April 19, 2025
  • April 19, 2025
Breaking News
August 16, 2019

மாதவனை மதச் சீற்றம் அடைய வைத்த ரசிகர்…

By 0 796 Views
நடிகர் மாதவன் நேற்று சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது சுதந்திர தினவிழா, ரக்சா பந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களை கூறி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் மத ரீதியிலாக கேள்வியை எழுப்பியுள்ளார்.
 
அவருடைய பூஜை அறையில் சிலுவை வைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு அந்தக் கேள்வி இடம் பெற்றது.  புகைப்படத்தை உன்னிப்பாக பார்த்து கண்டுபிடித்து, “பின்னணியில் சிலுவை இருப்பது ஏன்? அது என்ன கோவிலா? நீங்கள் என்னுடைய மதிப்பை இழந்து விட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம்தான்…” எனப் பதிவிட்டு இருந்தார்.
 
இதற்கு காட்டமாக பதிலடியை கொடுத்துள்ள மாதவன்,  ”உங்களுக்கு பிடித்துள்ள நோயிலிருந்து விரைவில் குணம் அடைவீர்களாக” எனக் குறிபிட்டுள்ளார்.
 
இதுதொடர்பான நீண்ட பதிலில், உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என்று நான் நினைப்பது கிடையாது. விரைவில் நீங்கள் உங்களுக்கு பிடித்துள்ள நோயிலிருந்து குணம் அடைவீர்கள். உங்களது நோய்க்கு இடையே நீங்கள் அங்கிருந்த பொற்கோயில் படத்தைப் பார்க்கவில்லை, இல்லையெனில் சீக்கிய மதத்துக்கு மாறினேனா? என கேள்வியை கேட்பீர்கள். எனக்கு தர்காவிலிருந்தும் ஆசிர்வாதம் உள்ளது. 
 
உலகில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களில் இருந்தும் எனக்கு ஆசிர்வாதம் உள்ளது. அங்கிருந்து சில படங்கள், அடையாளங்கள் பரிசுப் பொருட்களாக வந்துள்ளது; சிலவற்றை நானே வாங்கி உள்ளேன். என்னுடைய வீட்டில்  எல்லா மத நம்பிக்கையை சேர்ந்தவர்களும் பணி செய்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்கிறோம். அனைத்து படைவீரர்களும் இதைத்தான் சொல்கின்றனர். எனது  சிறு வயதியிலிருந்தே இது எனக்கு கற்பிக்கப்பட்டது. ஆம், எனது அடையாளத்தை பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில், எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்று கொடுக்கப்பட்டுள்ளது. 
 
எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனை பின்பற்றுவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்கு செல்வேன், குருத்வாராவுக்கு செல்வேன். தேவாலயத்துக்கு செல்வேன். அருகில் கோவில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் இந்து என்று தெரிந்தும்கூட அங்கெல்லாம் எனக்குப் பூரண மரியாதை கிடைத்தது.
 
அதை நான் எப்படி திருப்பிச் செலுத்தாமல் இருக்க இயலும். எனது பரந்துப்பட்ட பயண அனுபவங்கள் அன்பு, மரியாதை செய்யவே கற்று கொடுக்கிறது. அதுவே உண்மையான மார்க்கம் என்றும் சொல்லி கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிட்டட்டும்..!’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.