நடிகர்கள் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போனது ஒரு காலம். ஆனால் இப்போதோ ‘ கோவிட் 19 ‘ கோர தாண்டவத்து க்கு பிறகு சினிமா தொழில் நசிந்து விடும் நிலையில் எல்லோரும் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில் முதல் முதலாக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவிகிதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண், உதயா, இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று தடாலடியாக 2020 டிசம்பர் வரை தான் நடிக்கும் எல்லா படங்களுக்கும் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார் ஒளிப்பதிவாளரும் நடிகருமான அருள்தாஸ்.
இவர் இந்த வருடம் வரை முற்றிலும் சம்பளம் வேண்டாம் என்று சொல்லி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும் சிலர் ” அவர் ஒரு சிறிய நடிகர் தானே… என்ன சம்பளம் வாங்கி விடப் போகிறார்..? ” என்று அலட்சியமாக நினைக்க கூடும்.
ஆனால் இது போன்று சிறிய சம்பளம் வாங்குபவர்கள் தான் சம்பளத்தை விட்டுக் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும். ஏனென்றால் இந்த சிறிய சம்பளத்தை வைத்து தான் அவர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருக்கும்.
நியாயப்படி பார்த்தால் பல கோடிகளில் சம்பளம் வாங்குபவர்கள் தான் பெரிய அளவு விட்டுக் கொடுக்க முடியும்.
ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்தவர்கள் இங்கே இருக்க அவர்கள் அனைவரும் மௌனமாகவும் இருக்க இப்படி சின்ன கலைஞர்கள் தங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுக்க முன் வந்திருப்பது மிகவும் வரவேற்க தக்க செயல்.
மட்டுமல்லாமல் அவர்களை மனதார பாராட்டவும வேண்டி இருக்கிறது.
பல கோடிகளில் சம்பளம் வாங்கும் உச்ச நடிகர்கள் இதுவரை வாயே திறக்கவில்லை. என்ன செய்கிறார்கள் என்று நாமும் பார்ப்போம்..!