சிறிய லைனை வைத்துக்கொண்டு அதை வலிய திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யப் படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் தர்மா.
நம்மைப் படைத்த இந்தப் பிரபஞ்சம் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறது – நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்தான் நம் வாழ்க்கைக்கான விளைவுகளை ஏற்படுத்துக்கிறது என்பதுதான் அந்த லைன்.
மருந்துக் கடையில் வேலை பார்க்கும் ஆதிரன் சுரேஷ், வின்சென்ட், ராகுல் மூவருக்கும் சொந்தமாக ஒரு மெடிக்கல் ஷாப் வைக்க வேண்டும் என்கிற கனவு வர, அதற்காக சேர்த்த பணம் களவு போகிறது.
கடன் வாங்கிய அந்தப் பணத்துக்கு ஈடு கட்ட, ஆதவன் சுரேஷ் சென்னைக்கு அருகில் இருக்கும் சொந்த ஊரில் வசிக்கும் தந்தையைப் பார்க்க வின்சென்ட்டுடன் பைக்கில் போகிறார். வழியில் அவர்களது பைக் பஞ்சர் ஆக, அதை பஞ்சர் போடப்போன இடத்தில் உருவாகிறது பிரச்சினை.
இவர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் முன் மைக்கேல், சதீஷ் ராமதாஸ், தஷ்ணாவையும் நமக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் இவர்கள் மூவரும் சதி வேலைகள் செய்து பணம் பறிப்பவர்கள் என்று சொல்லி விடுகிறார்.
இந்த மூவரிடம் அந்த மூவர் மாட்டிக் கொண்டு என்ன பாடுபடுகிறார்கள் என்பதுதான் கதை.
சினிமாவுக்கான எந்த அலங்காரங்களும் இல்லாமல் படு இயல்பான முகங்களுடன் இயல்பாகவே காட்சிகளை கடத்துகிறார் இயக்குனர்.
இவர்தான் ஹீரோ என்று யாரையும் சொல்லிவிட முடியாத அளவில் வாழ்வில் வரும் பாத்திரங்களாகவே ஒவ்வொருவரும் நடித்திருக்கிறார்கள்.
அடுத்த நிமிடம் தாங்கள் கொலையாகி விடும் சாத்தியம் இருந்தும் பிரபஞ்ச சக்தியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ஆதவன் சுரேஷ், துணிச்சலுடன் பேசுவது நம்மை அசர அடிக்கிறது.
அடுத்த கணமே இவர்கள் மூவரையும் ரவுடிகள் கொல்ல முயலும் சமயம் பிரபஞ்சன் என்பவரிடமிருந்து போன் வருவது சிலிர்க்க வைக்கிறது.
அந்த சம்பந்தமில்லாத பிரபஞ்சன் எப்படி இவர்கள் வழியில் வருகிறார் என்கிற தொடர்பும் ஆச்சரியமான பிளே.
ஒளிப்பதிவாளர் லியோ V ராஜா படு இயல்பாக காட்சிகளை கடத்தி இருக்கிறார்.
சாந்தன் அன்பழகனின் இசையும்
சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ் படத்தொகுப்பம் அதற்கு உறுதுணை புரிந்திருக்கிறது.
மருந்துக் கடை சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் மருந்துக்குக் கூட ஒரு பெண் பாத்திரத்தை பயன்படுத்தாதது மிகப்பெரிய ஆச்சரியம்.
அப்படிப் பயன்படுத்தி முன்பாதியில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் இன்னும் கூட படத்தை ரசித்திருக்கலாம்.
அதேபோல் யாருக்கும் புரியாமல் இப்படி தலைப்புகளை வைப்பதில் என்ன நன்மை என்பது புரியவில்லை. இன்னும் எளிதாக மக்களிடம் சென்று செல்லக்கூடிய தலைப்பை வைத்திருந்தால் அதுவும் பட வெற்றிக்கு உறுதுணை புரிந்திருக்கும்.
ஆனாலும் புதிய முயற்சிக்குப் பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும்..!
– வேணுஜி