March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • திருமணம் புரியாமல் ஒன்றாக வாழ்ந்த சின்னத்திரை நடிகர் நடிகை தற்கொலை
June 6, 2020

திருமணம் புரியாமல் ஒன்றாக வாழ்ந்த சின்னத்திரை நடிகர் நடிகை தற்கொலை

By 0 938 Views

சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 5-வது பிளாக் 115-வது தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

அப்போது அந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், வீட்டுக்குள் ஆண், பெண் என 2 சடலங்களை அழுகிய நிலையில் மீட்டனர்.

இதுகுறித்துகொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், “தகவல் கிடைத்ததும் அந்த வீட்டுக்குச் சென்றோம். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தபோது படுக்கையறையில் ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர்.

விசாரணையில் இறந்தது சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர், நடிகை ஜெயகல்யாணி எனத் தெரியவந்தது. இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்றோம். அப்போது ஸ்ரீதரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. ஜெயகல்யாணி சமீபத்தில்தான் இறந்துள்ளார்.

அதனால் ஸ்ரீதர் இறந்த பிறகுதான் ஜெயகல்யாணி இறந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.இரண்டு பேரின் சடலங்களின் அருகில் கிடந்த இரண்டு செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளோம். அதன்மூலம் விசாரணை நடந்துவருகிறது.

ஸ்ரீதர், ஜெய கல்யாணி ஆகிய இருவருக்கும் திருமணமாகவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. ஸ்ரீதரும் ஜெயகல்யாணியும் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களிடம்கூட சரியாகப் பேசாமல் இருந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சொந்த வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். ஸ்ரீதரும் ஜெயகல்யாணியும் சின்னத்திரை மற்றும் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்திவருகிறோம்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர்களின் வீடு பூட்டியே இருந்ததாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கூறினர். சினிமா வாய்ப்புகள் இல்லாமல் வருமானமின்றி இவர்கள் சிரமப்பட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

ஸ்ரீதர், ஜெயகல்யாணி குறித்து மேலும் தகவலறிய சின்னத்திரை நடிகர் சங்கத்தில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இவர்கள் இருவரும் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற காரணம் தெரியவில்லை.

மேலும், இவர்கள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்களா என்பது பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவரும்” என்றனர்.