May 3, 2024
  • May 3, 2024
Breaking News
August 20, 2022

தமிழ் ராக்கர்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

By 0 454 Views

சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது ஏவிஎம் தயாரித்திருக்கும் ‘ தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடர்.

தமிழ் சினிமாவில் யார் பெயரை யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயர் எல்லோரும் அறிந்ததுதான். திரை மறைவில் செயல்படும் அவர்களைப் பற்றிய சில உண்மைகளுடன் கற்பனை கலந்து இயக்குனர் அறிவழகன் இயக்கி இருக்கும் தொடர் இது.
 
கதை இதுதான்…
 
விஜய்யை நினைவுபடுத்தும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரின் 300 கோடி ரூபாயில் உருவான திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு நாங்கள் வெளியிடுவோம், என்று தமிழ் ராக்கர்ஸ் சவால் விட, அவர்களின் சவாலை முறியடிக்க படத்தின் தயாரிப்பாளர் போலீஸ் உதவியை நாடுகிறார். 
 
இந்தக் கேஸ் போலீஸ் அதிகாரியாக வரும் நாயகன் அருண் விஜயிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் அதில் பெரிதாக நாட்டம் இல்லாமல் இருக்கிறார் அருண் விஜய். அதற்குக் காரணம் அவர் மனைவியை யாரோ கடத்தி விட்டார்கள் என்பதுதான்.
ஆனால், அருண் விஜயின் மனைவியை கடத்தியவர்களுக்கும், தமிழ் ராக்கர்ஸை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவர, அதற்காகவே அந்த வழக்கை எடுத்துக் கொள்கிறார் அருண் விஜய்.
 
அந்த முயற்சியில் அருண் விஜய் வெற்றி பெற்றாரா? அருண் விஜயின் மனைவி கடத்தல் சம்பவத்திற்கும் தமிழ் ராக்கர்ஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது உண்மையா? என்பது மீதிக் கதை.
 
இப்போதுதான் யானையில் மதம் கொண்ட யானையாக அவரைப் பார்த்தோம். இதில் காக்கி சட்டை எல்லாம் போட்டுக் கொள்ளாத ஸ்டைலிஷ் ஆன போலீஸ் அதிகாரியாக அருண் விஜய்யைப் பார்க்கிறோம்.
 
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவர் இதில் சினிமா பார்க்கும் வழக்கம் இல்லாதவராக வருவதுதான். தொடர் முழுவதும் கம்பீரமாக மிடுக்குடன் வருகிறார் அவர்.
நிஜ போலீசுக்கு இப்படியெல்லாம் அழகான பெண் உதவியாளர்கள் கிடைப்பார்களா தெரியவில்லை.
சைபர் க்ரைம் போலீஸ் துறையில் பணியாற்றும் வாணி போஜன் அருண் விஜய்யுடன் அப்படி ஒரு பணியை ஏற்கிறார்.
 
ஆனால், அருண் விஜய்க்கு ஜோடியாக வருவது ஐஸ்வர்யா மேனன் தான். அதுவும் மனைவியாகவே வரும் ஐஸ்வர்யா மேனன், எதற்காக கடத்தப்பட்டார் என்கிற விவரம் தெளிவாக சொல்லப்படவில்லை.
 
வேறு எந்த தொழிலிலும் முதலாளிகள் இவ்வளவு சிக்கலுக்கு உள்ளாகி சின்னாபின்னமாக மாட்டார்கள். தயாரிப்பாளர்களின் அந்த அவல நிலையை அற்புதமாக தனது நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார் அழகம்பெருமாள்.
 
வில்லனாக நடித்திருக்கும் தருண் குமார் மட்டுமல்லாமல், பிற பாத்திரங்களில் வரும் வினோதினி, மாரிமுத்து, வினோத் சாகர், சரத் ரவி, ஜானி, காக்கா முட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அஜித் ஜோஷி நிறைவாக செய்திருக்கிறார்கள்.
 
நல்ல நடிகருக்கு தன் திறமையை நிரூபிக்க ஒரு காட்சி போதும் என்று நிரூபித்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.
 
பி.ராஜசேகரின் ஒளிப்பதிவு இந்த தொடருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
 
விகாஷின் பின்னணி இசை அடக்கமான அசத்தல். பழைய பர்மா பஜார் செட் ரசிக்க வைக்கிறது.
 
மனோஜ் குமார் கலைவாணன், ராஜேஷ் மஞ்சுநாத்துடன் இணைந்து அமைத்திருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்த காரணத்தாலேயே இந்த தொடரை ஏவிஎம் தயாரிக்க முன் வந்திருக்கிறது. கூடுதல் திரைக்கதையை இயக்குனர் அறிவழகனே எழுதி இருக்கிறார்.
 
இந்த சீரியஸின் 8 பாகங்களில் கடைசி இரண்டு பாகங்கள் அசத்தல். அதுவே மன நிறைவை தருகிறது.
 
‘தமிழ் ராக்கர்ஸ்’ – ராக்கிங்..!