நல்லவேளை… இது அடல்ட் காமெடி படம் என்று தெரிந்து கொண்டேதான் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்…
தன் ஹாஸ்டல் நண்பர்களிடம் தன் காதல் லீலைகளை சொல்ல ஆரம்பிக்கிறார் நாயகன் த்ரிகுண்.
அதன்படி தன் கல்லூரி ஜூனியர் நாயகி ஶ்ரீ ஜித்தா கோஷுக்கு கல்வியில் சந்தேகம் தீர்த்து அது கலவியில் முடிகிறது. முடிந்ததும் ஓவென்று அழுகிறார் த்ரிகுண்.
அதற்குக் காரணம் கேட்கும் ஶ்ரீ ஜித்தாவிடம், தான் படித்த டியூஷன் ஆசிரியை இனியாவுடன் ஏற்கனவே படுக்கையைப் பகிர்ந்து கொண்டதைச் சொல்ல அவர்களுக்குள் பிரேக் அப் ஆகிறது.
அவர் செய்த தவறை மன்னித்து மறந்து மீண்டும் கலவி கொள்கின்றனர். இப்போதும் அழும் த்ரிகுண், அதற்குக் காரணமாக இன்னொரு ஆண்ட்டி (சுந்தரா ட்ராவல்ஸ்) ராதாவுடன் படுத்ததைச் சொல்கிறார். மீண்டும் பிரேக் அப்.
பின்னர் தோழி ஒருத்தியின் அறிவுரைப்படி த்ரிகுணைத் பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் ஶ்ரீ ஜித்தா., அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்.
அங்கே போனால்தான் தெரிகிறது, ஏற்கனவே அவர் உறவு கொண்ட இனியா, ஶ்ரீ ஜித்தாவின் அக்கா மற்றும் அந்த ஆன்ட்டி ராதா அவரது அம்மா என்று. ஆக அவர் தொட்ட லட்டுகள் எல்லாம் ஒரே வீட்டில் இருக்க மீண்டும் லட்டுகள் தின்ன ஆசைப்படுகிறாரா என்பது இரண்டாவது பாதி.
முதல் பாதியிலேயே இவ்வளவு ‘மேட்டர்’களை உள்ளே வைத்து விட்டதால் இரண்டாவது பாதியில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு படம் பார்க்கும் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது.
அதுவும் ஸ்ரீ ஜித்தா, இனியா, ராதா என்று ஆளாளுக்கு தாராளம் காட்டி இருக்கும் காட்சிகள் ரசிகர்களை மெய் மறக்க வைத்த நிசப்தம் ஆக்குகின்றன.
த்ரிகுண் சரியான மச்சக்காரன்தான். ஆனால் இப்படி எல்லாம் இசகு பிசகாக நடிப்பதற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. அவருக்கு சம்பளமும் அதுதானோ என்னவோ?
ஸ்ரீ ஜித்தா, இனியா, ராதா மூவரும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியில் கலக்கி இருக்கிறார்கள்.
இதெல்லாம் போதாது என்று ரவி மரியா, தம்பி ராமையா, சத்யன், ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, தெலுங்கு நடிகர் ஆவி, ரகு பாபு உள்ளிட்டவர்களும் களம் இறங்கி இருப்பதில் ஒரு பக்கம் காமெடி, இன்னொரு பக்கம் காம நெடி என்று இரண்டும் காக்கா கடி கடித்து கொண்டிருக்கின்றன.
சி.விஜயஸ்ரீயின் ஒளிப்பதிவும், அருணகிரியின் இசையும், கே குமாரின் எடிட்டிங் கலந்துகட்டி கலர்ஃபுல்லாக ஒரு படத்தை தந்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஜி ராஜசேகர் ஒரு முடிவோடு தான் களமாடி இருக்கிறார். வசனங்களிலும் டபுள் மீனிங் மட்டுமில்லை, சிங்கிள் மீனிங்கில் கூட பலான அர்த்தம்தான் ஒலிக்கிறது. இத்தோடு இந்த கதையை விடுவதில்லை என்று அதற்கு ஒரு முடிவில்லாத முடிவும் கொடுத்திருக்கிறார்.
இன்னும் என்ன செய்ய நினைக்கிறாரோ?
ஸ்வீட்டி நாட்டி கிரேசி – காம லூட்டி..!
– வேணுஜி