October 15, 2025
  • October 15, 2025
Breaking News
May 3, 2018

உச்சநீதிமன்ற உத்தரவு – கர்நாடக முதல்வர் கைவிரிப்பு

By 0 1200 Views

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று கூறி கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.

அதைக் கேட்ட நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என்று கூறியதுடன், இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அத்துடன், தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவும் கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், போதுமான அளவு நீர் கையிருப்பு இல்லாத நிலையில், தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.