April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஹிப் ஹாப் ஆதி தலையில் கர்சீப் கட்டினால்… ரகசியம் உடைத்த ஹீரோயின்
September 25, 2021

ஹிப் ஹாப் ஆதி தலையில் கர்சீப் கட்டினால்… ரகசியம் உடைத்த ஹீரோயின்

By 0 309 Views

ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’.

Inde rebels நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

காதல், நட்பு, காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் …

நடிகர் இளங்கோ குமணன் பேசியதிலிருந்து… 

“சினிமா மேடை எனக்கு. புதிது 20 வயதில் ஆசைப்பட்டதை 60 வயதில் நிறைவேற்றியுள்ளார் ஆதி.

அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து இந்த கதாப்பாத்திரம் குறித்து சொன்ன போது, இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமா என யோசித்து கொள்ளுங்கள், என்று சொன்னேன். என்னை மனதில் வைத்தே இந்த பாத்திரத்தை எழுதியதாக சொன்னார். அதனால் இதன் புகழ் அனைத்தும் அவரையே சாரும்..!”

தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் –

“கோவிட் நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது. பட்டாசு திரைப்படத்திற்கு பிறகு, இப்போது மீண்டும் உங்கள் அனைவரையும் பார்ப்பது மகிழ்ச்சி. ஆதி படங்களை தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ‘நட்பே துணை’ படத்தை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது.

இந்த படத்தின் கதையை எனது மகன்தான் முழுதாக கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் முழுதாக முடிந்த பிறகு பார்த்தேன். இரண்டாம் பகுதி என்னை மிகவும் பாதித்தது. ஆதியை மனமார பாராட்டினேன். மூன்றாம் பிறை படத்திற்கு பிறகு இந்தப்படம் தான் என்னை அதிகம் பாதித்தது.

இந்த படத்தில் தாத்தாவாக வரும் குமணன் அட்டகாசமாக செய்துள்ளார். நெகட்டிவாக வரும் விஜய் கார்த்திக் மிக அழகாக செய்துள்ளார். கதிர் உடைய ஹீயுமர் நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவை, கொடுத்த பட்ஜெட்டில் அற்புதமாக செய்துள்ளார்.

ஆதி படத்தில் வரும் நாயகிகள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள் அது போல் மாதுரி ஜெயின் பெரிய அளவில் வெற்றி பெறுவார். நல்ல படங்கள் தியேட்டரில் பார்த்தால் தான், நாம் அதை ரசிக்க முடியும். அதனால் தான் காத்திருந்து இப்படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோம்..!”

நடிகர் ஆதித்யா கதிர் –

“இப்படத்தில் அனைவரும் ஒரு குடும்பம் போலவே இருந்தோம். ஆதி என்னுடைய ரசிகர் என்று சொல்லி போன படத்தில் வாய்ப்பு தந்தார். இந்த படத்தில் பெரிய கேரக்டர் கொடுத்துள்ளார். மேலும் ஒரு பெரிய பொறுப்பு ஒன்றை கொடுத்தார். படப்பிடிப்பில் அனைவரையும் ஒருங்கிணைத்து அனைவரையும் அரவனைத்து செல்லும் பொறுப்பை தந்தார்..!”

நடிகர் பிராங்க்ஸ்டர் ராகுல் –

“என்னுடய பிராங்க் பார்த்து ஆதி என்னை அழைத்து பேசினார். என்னை யாரோ பிராங்க் செய்கிறார்கள் என்றே நினைத்தேன். அப்புறம் அவர் அழைத்து இந்த கதாபாத்திரம் குறித்து சொன்னார். 12 வருட கனவு நனவாகியுள்ளது..!”

நடிகர் விஜய் கார்த்திக் –

“இந்த மேடையில் இன்று நான் இருக்க காரணம் ஆதி தான். 30 வருட முயற்சி ஆதியால் தான் நிறைவேறியது. அவரின் தீவிர ரசிகன். ஒரு நாளில் கூப்பிட்டு நடிக்க சொல்லி, அன்றே நான் இந்தப்படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார்கள். அதற்கு ஆதிக்கு நன்றி..!”

நாயகி மாதுரி ஜெயின் –

“இது முதல் படம். அழகான கதை எழுதியதற்கும், எனக்கு வாய்ப்பு தந்ததற்கும் ஆதிக்கு நன்றி. சத்ய ஜோதி தயாரிப்பில் அறிமுகமானது எனக்கு பெருமை. என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஆதி கழுத்தில் ஒரு கர்ச்சிஃப் கட்டியிருப்பார் அப்படி கட்டியிருந்தால் அவர் இயக்குநராக இருப்பார், மற்ற நேரத்தில் நடிகராக இருப்பார். இந்த படமே ஒரு குடும்பத்துடன் பழகியது போல இருந்தது..!”

நடிகர், இயக்குநர் ஆதி –

“நிறைய பேருக்கு இது முதல் மேடை, அவர்கள் உணர்ச்சிகரமாக பேசியது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். அவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சத்யஜோதி மிகப்பிரமாண்டமாக “அன்பறிவு” படத்தை எடுத்தார்கள். பொதுமுடக்கத்தால் அது கொஞ்சம் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் போயிருந்தேன், அங்கு கிடைத்த அனுபவத்தால் தான் இந்தக்கதையை எழுதினேன்.

இந்தப்படம் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. இந்தப்படத்திற்கு புதுமுகங்கள் தான் சரியாக இருப்பார்கள் என்று தோன்றியது. இந்தப்படம் வெற்றியடையும்போது இந்த நடிகர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.

தமிழ் தெரிந்த ஹீரோயின், அவர் பாண்டிச்சேரி தமிழ்ப்பெண். ஒரு மாதம் எங்களுடன் இணைந்து ரிகர்சல் செய்தார். திரையில் இப்போது அதை பார்க்க நன்றாக இருக்கிறது.

நான் கேட்டுக்கொண்டதை மதித்து, திரையரங்கில் படத்தை கொண்டுவந்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணம் தான் இப்படம். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும்..!”

படம் செப்டம்பர் 30 முதல் உலகமெங்கும் திரையரங்குகள் வெளியாகிறது.