April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • யார் மீதும் எனக்கு பயமோ, பொறாமையோ கிடையாது – சிவகார்த்திகேயன்
September 2, 2018

யார் மீதும் எனக்கு பயமோ, பொறாமையோ கிடையாது – சிவகார்த்திகேயன்

By 0 899 Views

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக சிவகார்த்திகேயனும், இயக்குநர் பொன்ராமும் மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

’24 ஏஎம் ஸ்டூடியோஸ்’ பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா ஏற்கனவே அறிவித்தபடியே விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து…

நாயகி சமந்தா அக்கினேனி –

“இந்தப் படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது. கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்..!”

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் –

“படத்தை ஆரம்பிக்கும்போதே இது வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. இப்போதைய எஸ்.பி. முத்துராமன் என்றால் அது பொன்ராம்தான். அனைத்து தரப்பையும் கவரும் விஷயங்கள் பொன்ராம் படத்தில் இருக்கும்..!”

இசையமைப்பாளர் டி.இமான் –

“இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தம்பி சிவகார்த்திகேயன்தான். முந்தைய படங்களை விட இந்த படத்தில் சிவா, சூரி காமெடி களைகட்டும். வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன..!”

சூரி –

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என்னை எந்த அளவுக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோ அதைத் தாண்டி இந்த சீமராஜா என்னைக் கொண்டு சேர்க்கும்.

சிவா அதிர்ஷ்டத்துல மேல வந்துட்டார்னு சிலர் பேசுறாங்க. அதிர்ஷ்டம் வரும் போகும், ஆனா திறமை இல்லாம அந்த இடத்தை தக்க வைக்கவே முடியாது. இந்த நிலைக்கு வர சிவா எவ்வளவு கஷ்டப்பட்டார்னு எனக்கு தான் தெரியும். எங்கு போனாலும் சிவாவை பற்றி எல்லோரும் பாசமாக கேட்கிறார்கள். அது தான் அவர் இந்த சினிமாவில் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன்..!”

இயக்குனர் பொன்ராம் –

“மண்ணுக்காக போராடுவது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் இந்தப் படத்தில் காதல், காமெடி இருக்கு.

ஒரு நாயகியை பாடலுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க என்ற குறை இருக்கு. ஆனால், இதில் சமந்தாவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்றுக் கொண்டார். பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும்போதும் ராஜா சார் பண்ணுங்க என நம்பிக்கையோடு சொன்னார். குடும்பம், குழந்தைகள் என எல்லோரும் வந்து பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும்..!”

நாயகன் சிவகார்த்திகேயன் –

“இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை.

இந்தப் படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிட திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது. அதையும் தாண்டி படத்தை குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள்.

படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம்.

இந்த படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன்..!”