ஏற்கனவே சினிமாவை ஆவிகள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க, அதில் ஒரு வித்தியாசமாக இதில் ஆவிகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டுவிக்கிறார் ஒரு மந்திரவாதி.
அதுவும் இரண்டு மாணவ, மாணவியின் ஆவியை வைத்துக்கொண்டு அவர்கள் படித்த பள்ளியின் மேலேயே ஏவி விடுகிறார். அது எதற்காக… அந்த ஆபத்திலிருந்து பள்ளி மீண்டதா என்பதெல்லாம் மீதிக் கதை.
பாக்ஸ் பகவதி பெருமாள் முதல்வராக இருக்கும் தனியார் பள்ளி, தகுதி அடிப்படையில் மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் பெறுகிறது. அதை முதலிடத்திற்கு கொண்டு வரச் சொல்லி பள்ளியின் உரிமையாளர் கேபிள் சங்கர் கேட்டுக்கொள்ள அதைத்தொடர்ந்து அந்தப் பள்ளியில் விசித்திரமான விஷயங்கள் அரங்கேறுகின்றன.
ஆவிகளின் நடமாட்டத்தின் காரணமாக மாணவர், ஊழியர் என்று அடுத்தடுத்து கொலையுண்டு போக அதை துப்பறிய வருகிறார் காவல் அதிகாரி கே எஸ் ரவிக்குமார். ஒரு கட்டத்தில் அவருடைய மகனே ஆவிக்கு இரையாக வேறு வழி இல்லாமல் ஆவியை விரட்டும் வித்யாதரனை அழைக்கிறார்கள்.
இதற்கிடையே பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட பூமிகா சாவ்லாவையும் யோகி பாபுவையும் மீண்டும் பள்ளி நிர்வாகம் வேலைக்கு எடுத்துக்கொள்ள… மேற்படி பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்தனவா என்பது பின் பாதிக்கதை.
யோகி பாபு, பூமிகா சாவ்லாவை வைத்துதான் இந்தப் படத்தின் மதிப்பு கூடுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் இடைவேளைக்குப் பிறகு தான் வருகிறார்கள்.
அங்கிருந்து யோகி பாபு வந்தாலும் நமக்கு அவரைப் பார்த்தால் சிரிப்புதான் வருவதில்லை. வடிவேலு, சந்தானம் போல் தனக்கென்று ஒரு நகைச்சுவை டீமை வைத்துக் கொண்டால் ஒழிய யோகி பாபுவால் இனிமேல் காலம் தள்ள முடியாது.
படம் நெடுக பகவதி பெருமாளும், கே எஸ் ரவி குமாரும் வருகிறார்கள். அவர்களை பிறபடங்களில் எப்படி பார்த்திருக்கிறோமா அப்படித்தான் இந்த படத்திலும் அனுபவ நடிப்பைத் தருகிறார்கள்.
படத்தை இயக்கியிருக்கும் ஆர்.கே. வித்யா தரனே படத்தில் ஆவிகளை ஓட்ட வரும் மந்திரவாதியாகவும் வருகிறார். ஆனால் அவரது பாதுகாப்பு வளையங்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கும் பலே மந்திரவாதியாக நிழல்கள் ரவி கவனம் கவர்கிறார்.
மூடநம்பிக்கைகளை ஒழித்து நல்ல நம்பிக்கைகளை வளர்ப்பதுதான் ஒரு கல்விக்கூடத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு பள்ளியிலேயே இது போன்று ஆவிகள் உதவுவதாக நம்ப வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
ஆனால் ஆவிகளை விடக் கொடுமையான விஷயமான சாதிப் பேயையும் உள்ளே கொண்டு வந்து சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தை விதைத்திருப்பதால் இயக்குனர் வித்யாதரனை பாராட்டலாம்.
இசைஞானி இளையராஜாதான் இசை என்று டைட்டிலில் போடுவதாலும், அவருடைய முந்தைய பாடல்களையே தவாவில் போட்டு ஒரு திருப்பித் திருப்பி இசைத்திருப்பதாலும் அதை நாம் நம்ப வேண்டியிருக்கிறது.
ஆதித்யா கோவிந்தராஜன் ஒளிப்பதிவு படத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறது.
ஸ்கூல் – சாதிப் பேய்க்கு முன்னால் சாதா பேய்களே மேல்..!
– வேணுஜி