June 13, 2025
  • June 13, 2025
Breaking News
May 3, 2018

பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்

By 0 1130 Views

தமிழகத்தில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுவது இதுவரை நடைமுறையில் இருந்தது. இந்த வருடம் முதலாக ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று (மே 3) முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களான பெயர், மொபைல்போன் எண், இமெயில் முகவரி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-2 ஹால்டிக்கெட் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த பள்ளியின் விவரங்கள், சாதி சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஆகியவற்றையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்க தேவையில்லை. தேர்வு முடிவு வந்தபிறகு அரசு தேர்வுத்துறையில் இருந்து சி.டி., அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு அந்த சி.டி.யில் உள்ள மதிப்பெண்கள் மாணவர்களின் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்படும். ஆனால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டும் தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும். 

இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுதும் அமைக்கப்பட்டு உள்ள 42 உதவி மையங்களுக்குச் சென்று இலவசமாக பதிவு செய்யலாம். கடந்த ஆண்டு எந்த பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும் அந்த மாணவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியும். இதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30 ஆகும்.