February 15, 2025
  • February 15, 2025
Breaking News
January 22, 2025

நான் வேற மாதிரி திரைப்பட விமர்சனம்

By 0 141 Views

மலைவாசஸ்தலம் ஒன்றில் ஊசியிலை மரக் காடுகளுக்குள் நாயகி ஜோதிஷாவை ஒரு மர்ம நபர் கொலை வெறியுடன் துரத்த அவர் கொலையுண்டாரா இல்லையா என்பதிலிருந்து பிளாஷ் பேக் தொடங்குகிறது.

அதே மலையும் மலை சார்ந்த நகரில் ஜோதிஷா, இரு அண்ணன்கள், அண்ணி, பாட்டி என்று ஒரு பாசமுள்ள குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். நாயகன் ஷாவுக்கும் நாயகி ஜோதிஷாவுக்கும் காதல் பிறக்க, ஷாவும் அவர்கள் குடும்ப உறவினர் என்று தெரிகிறது.

அவர்கள் காதலுக்கு குடும்பம் பச்சைக்கொடி காட்ட நிச்சயதார்த்தம் வரை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை. ஒட்டுமொத்த குடும்பத்தின் தேவைகளையும் அன்பான அண்ணியே  தாங்குகிறார்.

ஒரே ஒரு குறை என்றால் அண்ணனுக்கும், அண்ணிக்குமான இல்லற உறவு திருப்தி இல்லாமல் அவர்களுக்கு வாரிசு இல்லாமல் இருக்கிறது. ஆனால் அதுவும் ஒரு கட்டத்தில் சீராகி அண்ணனும், அண்ணியுடன் அன்னியோன்யமாகி விடுகிறார். 

கோடீஸ்வரர்களாக வாழ்ந்து வரும் அண்ணன் களுக்கு  இடையில் பணப் பகிர்தலில் அடிக்கடி பிரச்சினை எழுந்து வருகிறது. பெரிய அண்ணனே தொழில்களை கவனிக்க, சின்ன அண்ணன் ஊதாரித்தனமாக மது, மாது என்று பணத்தைக் கணக்கில்லாமல் செலவு செய்ய, இது தொடர்பாக இருவரும் ஒருவரை ஒருவர் பகைமை பாராட்டுகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் வாழ்ந்து வரும் வீட்டுக்குள் ஏதோ ஒரு அமானுஷ்யம் நடப்பதாக அண்ணி உணர்கிறார். அதைத்தொடர்ந்து பாட்டி மர்மமான முறையில் படுக்கையில் இறந்து போகிறார்.

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அண்ணன்களும் இறக்க, துப்பு துலக்க வரும் போலீசும் கையைப் பிசைய, தவிக்கும் இளம் ஜோடியின் முடிவு என்ன என்பதைப் பரிதவிப்புடன் சொல்லி முடிக்கிறார் இயக்குனர் எஸ்.ஜவஹர்லால்.

இளம் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் ஷாவுக்கு அறிமுகப் பதட்டம் இருக்கிறது. அது போகப்போக சரியாகிவிடும். மற்றபடி நடனத்தில் நல்ல முயற்சி தெரிகிறது. ஆனால், கிளைமாக்சில் நன்றாக நடித்திருக்கிறார்.

ஜோதிஷா இதற்குமுன் நடித்திருக்கும் அனுபவம் அவருக்குக் கை கொடுக்கிறது.

பிற பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும், (குறிப்பாக அண்ணி பாத்திரத்தில் நடித்திருப்பவர்) தேவையை நிறைவு செய்திருக்கிறார்கள்.

அசிஸ்டன்ட் கமிஷனராக வரும் ஜி.நசீர் பாஷா அந்த வேடத்தில் மிடுக்காக இருக்கிறார். அவரை அப்படிக் காட்டுவதில் பின்னணி இசை பேருதவி புரிந்திருக்கிறது.

பின்னணி இசையில் மட்டுமல்லாமல் பாடல்களிலும் ரசிக்கும்படி இசைத்திருக்கிரார் மா.சிவசங்கர். பாடல்களையும் எழுதியிருப்பதில் “இந்த பூனையும் பால் குடிக்குமா..?” ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜி.ஜெயபாலன் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பணி புரிந்திருக்கிறார்.

திரைக்கதையில் நிறைய கேள்விகள் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் இது போன்ற சிறிய படங்கள் தான் திரையுலகை காப்பாற்றுகின்றன என்ற அளவில் இந்தப் படத்தை வரவேற்கலாம்.

நான் வேற மாதிரி – ஃபேமிலி கில்லர்..!

– வேணுஜி