April 26, 2024
  • April 26, 2024
Breaking News
February 12, 2020

மாஸ்டர் படத்தின் மலைக்க வைக்கும் வியாபாரம்

By 0 608 Views

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் மாஸ்டர் படத்துக்கு தற்போதே வானளவு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு எதிர்பார்ப்பு நிலவினால் இப்படத்தின் வியாபாரம் மட்டும் அசத்தாமல் இருக்குமா என்ன? தமிழோ இந்தியோ முன்னணி நடிகரின் படம் என்றாலும்கூட அந்த படத்தின் ரிலீஸ் நெருங்கும்போதுதான் வியாபாரம் சூடுபிடிக்கும்.

ஆனால் இன்னும் படப்பிடிப்பு கூட முடியாத நிலையில் மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த ஏரியாவும் வியாபாரமாகி சாதனை படைதது விட்டது என்கிறார்கள்.

இதன் தமிழக உரிமம் 68 கோடிக்கும் கேரள வெளியீட்டு உரிமம் ஆறு கோடியே 25 லட்சத்துக்கும் கர்நாடக வெளியீட்டு உரிமம் எட்டு கோடியே 65 லட்சத்துக்கும் தெலுங்கு டப்பிங் உரிமம் ஒன்பது கோடிக்கும் விற்கப்பட்டிருக்கிறதாம்.

இதுபோக இப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க உரிமம் 29 கோடியே 50 லட்சத்துக்கும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் 50 கோடிக்கும் ஆடியோ உரிமம் நான்கு கோடியே 50 லட்சத்துக்கும் வியாபாரமாகி இருக்கிறதாம். 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இந்தி டப்பிங் உரிமம் மட்டும் இன்னும் விற்பனையாகாமல் உள்ளது.

இப்போதைக்கு வட இந்தியாவில் பிகில் படத்தின் வசூல் மற்றும் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு அதுவும் 23 கோடி வரை வியாபாரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் ஒட்டுமொத்தமாக மாஸ்டர் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே 200 கோடி வரை வியாபாரமாகி இருப்பதாக திரை வட்டாரத்தில் உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில் மாஸ்டர் திரைப்படம் அனைத்து ஏரியாக்களிலும் விற்கப்பட்டு விற்பனையில் சாதனை படைத்திருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யைத் தாண்டி மாஸ்டர் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாக இன்னொரு காரணம் விஜய் சேதுபதி. விஜய்யும் விஜய் சேதுபதியும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க போகிறார்கள் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும் மாஸ்டர் படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது.

தமிழில் மல்டி ஸ்டாரர் படம் என்பது அரிதிலும் அரிதாக நடக்கும் விஷயம். அதுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இரண்டு பேரும் இணைந்திருப்பதால் இப்படத்தின் கதை மீதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. விஜய் படத்துக்காக தன்னுடைய கால்ஷீட்டை ஒதுக்கி கொடுத்ததே இன்று பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

தற்போது நெய்வேலி நில சுரங்கத்தில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய், விஜய் சேதுபதி பங்கேற்கும் காட்சிகளைதான் படக்குழு படமாக்கி வருகின்றனர். அதனால்தான் சோதனை முடிந்த கையோடு உடனடியாக படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் விஜய்.

இவர்களுடைய காம்பினேஷ் காட்சிகளுடன் இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. இதனால் திட்டமிட்டப்படி இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வருவது உறுதி என்கின்றனர் படக்குழுவினர்.

ஐ.டி.ரெய்டுக்கு பிறகு வெளி வரும் விஜய் படம், விஜய் – விஜய் சேதுபதி முதல்முறையாக இணையும் திரைப் படம் என்பதால் மாஸ்டர் படம் வசூலில் புதிய சரித்திரத்தை உருவாக்கும் என தற்போதே பாக்ஸ் ஆபீஸ் பட்சி சொல்கிறது.