April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நிஜ நோயாளி ஹீரோவான படத்தை தேனாண்டாள் வெளியிடுகிறது
December 9, 2018

நிஜ நோயாளி ஹீரோவான படத்தை தேனாண்டாள் வெளியிடுகிறது

By 0 810 Views

இந்தப்படத்தின் கதையைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் கொண்ட குடும்பம்.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த அவரக்ளது வாழ்க்கையில் ஒரு நாள் புயலடித்தது. கோடீஸ்வரரின் 3வது பையனுக்கு இதயத்தில் ஒரு நோய். Chronic Constrictive Pericarditis என்பது நோயின் பெயராம். அது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோய் என்றிருக்க அதைக் குணப்படுத்தும் அறுவை சிகிச்சைக்கு நீண்ட நேரம் பிடிப்பதோடு இச்சிகிச்சையில் பிழைக்கும் வாய்ப்பும் குறைவுதான் என்று தெரிய வந்திருக்கிறது.

இருந்தாலும் குடும்பத்தினர் குருவாயூர் கிருஷ்ணனைப் பிரார்த்தனை செய்து சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டனராம்.

கேரளாவின் பிரபல டாக்டர் சுனில் தலைமையில் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 டாக்டர்கள் துணையுடன் அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானபோது கொடுமையாக டாக்டர் சுனிலுக்கு திடீரென்று மயக்கம் வந்திருக்கிறது. ஆனால் நல்ல வேளையாக சுனில் அரை மணி நேரத்தில் தெளிந்து எழுந்து வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை முடித்திருக்கிறார். குடும்பத்தினர் கிருஷ்ணனைப் பிரார்த்தனை செய்தது வீண் போகவில்லை என்று நினைத்தார்கள்.

Akshay Krishnan

Akshay Krishnan

அப்போது நடந்தது ஒரு ஆச்சரியம். அறுவை சிகிச்சை நடந்து முடிந்த போது குருவாயூரிலிருந்து ஓர் இளைஞன் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தானாம். அதே போல வீட்டுக்கும் வந்து நலம் விசாரித்தானாம். பிறகு குருவாயூர் போய் விசாரித்த போது அப்படி யாரும் அங்கிருந்து அனுப்பப்படவில்லை என்றார்களாம். அதேபோல் மருத்துவமனையில் இருக்கும்போது குருவாயூரிலிருந்து போன் வந்திருக்கிறது. பிறகு குருவாயூர் போய் விசாரித்த போது அப்படி யாரும் பேசவில்லை என்றார்களாம். சாட்சாத் கிருஷ்ணன்தான் அந்த போன் பேசியதும், அந்த இளைஞனாக வந்து நேரில் விசாரித்ததும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அந்த அற்புதத்தை உணர்ந்த குடும்பம் அந்த அனுபவத்தை உலகுக்குக் காட்ட எண்ணி இக்கதையைத் திரைப்படமாக்க விரும்பியிருக்கிறது. வேலைகள் தொடங்கி மளமளவென படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள். தமிழ், மலையாள மொழிகளில் படம் தயாராகியுள்ளது.

நோயாளியாக இருந்து அறுவை சிகிச்சையில் பிழைத்த அதே மகன் அக்ஷய் கிருஷ்ணனை நாயகனாக நடிக்க வைத்துள்ளனர். நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். மற்றும் சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய் பாபு, வினீத், ராஜீவ் பணிக்கர், ஜெயகுமார், அஞ்சலி உபாசனா ஆகியோரும் நடிக்க படம் உருவாகியிருக்கிறது.

கதையைத் தயாரிப்பாளர் பி.என்.பலராம் எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருப்பவர் தினேஷ் பாபு , இசை – ஹரிபிரசாத் , கலை இயக்கம் – போபன், படத்தொகுப்பு – அபிலாஷ் பாலசந்திரன் .

‘கிருஷ்ணம் ‘ படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்குப் படம் பிடித்து விட்டது. படத்தை தன் தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வெளியிடுகிறார். தெலுங்கு ரிலீஸை கல்யாணம் ஏற்க, மலையாளம் ரிலீஸை பி.என்.பலராமே ஏற்றிருக்கிறார்.

மூன்று மொழிகளில் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது படம்.