இப்படி எல்லாம் கூட உலகில் நடக்கிறதா என்று வியக்க வைக்கும் கதை. நடக்கிறதா என்பதை இயக்குனர் சைலேஷ் கொலானு விடம்தான் கேட்க வேண்டும்.
அடர்ந்த கானகத்துக்குள் ஒருவனை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு ஹைப்போதெலமஸ், பிட்யூட்டரி, அட்ரினலின் என்று மூன்று சுரப்பிகளை உடலில் இருந்து எடுத்து அவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்கிறார் நாயகன் நானி – உறைந்து போகிறோம் நாம்.
கேட்கவே பதறுகிறதா… இன்னும் கேளுங்கள். அடுத்த காட்சியிலேயே அவரே போய் சூப்பரிண்டன்ட் ஆஃப் போலீசாக பதவி ஏற்கிறார். அப்போது காட்டுக்குள் ஒருவன் தலைகீழாக கட்டி கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான் என்ற தகவல் வர, (இவர் கொன்ற அதே நபர்தான்…) அதை புலனாய்வு செய்ய இவரே நேரில் போகிறார்.
தொடர்ந்து இன்னொரு கொலையை அவ்வாறே செய்யும் சமயம் அவர் அணியில் இருக்கும் இன்னொரு பெண் போலீஸ் அதிகாரி அவர்தான் கொலையாளி என்று கண்டுபிடித்து விடுகிறார். இருந்தாலும் அந்தப் பெண் போலீசைக் கட்டிப்போட்டுவிட்டு அவர் கண் முன்னேயே அவனையும் கொலை செய்துவிட்டு கொலைகளுக்கான நியாயத்தை அந்தப் பெண்ணிடம் விளக்குகிறார் நானி.
அதெல்லாம் பயங்கரம்… இப்படி எல்லாம் கொலை செய்யும் ஒரு சைக்கோ கூட்டம் இதைத்தான் தங்களுக்கான விடுதலை என்று முழங்கிக் கொண்டு யாராலும் கண்டுபிடிக்க முடியாத நெட்வொர்க்கில் இயங்கி வருகிறது. அவர்கள் யார் என்று கண்டுபிடித்து அழிக்கவே தானும் அந்தக் கூட்டத்தில் ஐக்கியமாக இப்படிக் கொலைகளை செய்வதாக சொல்கிறார் நானி.
அந்த இயக்கத்துக்குள்நானி தன்னை இணைத்துக் கொள்ள முடிந்ததா, அவர்களை எல்லாம் அழித்தாரா என்பதுதான் மீதிக் கதை.
எந்த ஹீரோவும் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் கொடூரமான வேடம் இது. இருந்தாலும் மென்மையான நானி அதை ஏற்று நடித்திருப்பது ஆகப்பெரிய ஆச்சரியம்.
இப்படி ஒரு சூழலுக்குள் இருப்பவர் எப்படி இருப்பார்..? எப்போதும் அதிக ரத்தக் கொதிப்புடன் எந்த நேரத்தில் கோபப்படுவார் என்று கணிக்க முடியாத அந்த பாத்திரமாகவே நானி வாழ்ந்திருக்கிறார்.
பல கோபக்கார காவல் அதிகாரிகளை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் நானியின் கோபம் மிகவும் புதிதாக இருக்கிறது. தனக்கு ஏன் இன்னும் மணமாகவில்லை என்பதை சமுதாயக் கோபத்துடன் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியிடம் நானி சொல்வதை ரசிக்கலாம்.
அவருக்கு நேர் எதிர் துருவமாக அமைதியுடன் அறிமுகமாகி நானியை அமைதிப்படுத்தும் பாத்திரத்தில் வருகிறார் ஸ்ரீநிதி. சஸ்பென்ஸ் மிகுந்த அந்த பாத்திரத்தை அழகாகச் செய்திருக்கிறார் ஸ்ரீநிதியும்.
நானியின் குணாதிசயத்தில் இருந்தே அவர் தாயில்லாப் பிள்ளை என்பதை ஸ்ரீநிதி கண்டுபிடித்து விடுவதும் அந்தத் தாய்ப் பாசத்தை வைத்தே அவரைக் காதலுக்குள் வீழ்த்துவதும் ஹைகூ அழகு.
நானிக்கும் ஸ்ரீநிதிக்குமான காதல் உரையாடல்களும் கிளாஸ் ஆனவை. இப்படி ஒரு முரட்டுக் கதைக்குள் திரட்டிப் பாலாக இனிக்கிறது அந்தக் காதல்.
சமுத்திரக்கனிக்கும் நானிக்குமான தந்தை மகன் உரையாடல்களும் முரட்டுப் பாச ரகம்.
இரண்டாம் பாதியில் வரும் அந்த முரட்டு சைக்கோ கூட்டத்தை பார்த்தாலே மனம் பதறுகிறது. அங்கே நடைபெறும் கொலைகளும் அந்த ரகம்தான்.
கிட்டத்தட்ட 150 சைக்கோக்களை நானி வெட்டி வீழ்த்தி விடும் காட்சி கொஞ்சம் குருரமான கற்பனைதான். படம் முழுவதுமே ரத்தம் தெறிக்கிறது.
அந்த வகையில் இவ்வளவு வன்முறை தேவையா என்று நாம் நினைத்தாலும் வன்முறைக்கு இலக்காகும் எல்லோருமே பலரைக் கொன்ற சைக்கோ கொலையாளிகள்தான் என்ற லாஜிக்கில் நியாயப்படுத்தி விடுகிறார் இயக்குனர்.
மனிதர்களின் சுரப்பிகளை அவை அதிகபட்சமாக உடலில் சுரக்கும் நேரத்தில் வெட்டி எடுத்து அதை வைத்து என்ன செய்கிறார்கள் என்று நானி சொல்லும் போது நம் சுரப்பிகள் ஒரு கணம் நின்று போகின்றன.
இப்படி எல்லாம் உண்மையில் நடக்காது என்று நாம் நம்பத்தான் வேண்டும்.
ஷானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவும், மிக்கி ஜே மேஜர் இசையும் படத்தின் இரண்டு தோள்களாகி கம்பீரத்தைக் கொடுக்கின்றன.
கிளைமாக்ஸ் முடிந்ததும் அடுத்த நான்காவது பாகத்துக்கான முன்னோட்டத்தை தெறிக்க விடுகிறார் இயக்குனர். அதில் ஹீரோ யார் என்பதைப் படத்தில் பார்த்து பரவசம் அடையுங்கள்.
ஹிட் 3 – சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ‘ஹிட்’ தான்..!
– வேணுஜி