பொதுவாக காட் ஃபாதர் என்றால் ஆங்கிலத்தில் இருக்கும் பொருளே வேறு. ஆனால், கொச்சையாக இரு குழந்தைகளுக்குக் காவல் தெய்வங்களாக அவர்களது தந்தைகளே நிற்க அதுதான் காட்ஃபாதர் என்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர்.
எடுத்துக்கொண்ட பிரச்சினை இந்த ஆக்ஷன் த்ரில்லர் கதைக்கு வலு சேர்க்கிறது. கொடூர வில்லனான ‘லால்’, தனக்கு எதிராக செயல்படுபவர்களை ஈவு இரக்கமில்லாமல் போட்டுத்தள்ளிவிடும் போக்குடையவர். காலம் கடந்து பிறந்த அவரது மகனுக்கு இதயத்தில் பிரச்சினை ஒன்று வர, மாற்று இதயம் பொருத்துவதுதான் வழி என்று மருத்துவம் சொல்ல, அதே வயது மற்றும் ரத்த வகையைச் சேர்ந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்தால்தான் அது சாத்தியம் என்றாக ஏற்கனவே கொலைகாரரான லால் அதற்குப் பொருத்தமான நட்டியின் மகனைக் கொன்று தன் குழந்தையைக் காப்பாற்ற நினைக்கிறார்.
ஆக, லால் அராஜகத்தில் தன் குழந்தயைக் காப்பாற்ருகிறாரா, அல்லது அவரிடமிருந்து தன் மகனை நட்டி காப்பாற்றுகிறாரா என்பதில் எந்த ஃபாதர் உண்மையான காட்..? என்பதுதான் கதை. சரிதானே இயக்குநரே..?
நட்டிக்கு இயல்பான கேரக்டர் என்பதால் இயல்பாகவே நடித்திருக்கிறார். அவர் தைரியசாலியா, பயந்தாங்குள்ளியா என்பது சரிவர சொல்லப்படவில்லை. ஒரு இடத்தில் சாதாரண முரட்டு வாலிபர்களிடம் பிரச்சினை எதற்கு என்று ஒதுங்கிப் போகிறார். இன்னொரு இடத்தில் வில்லன் ஒரு மனிதனை சம்மட்டியால் அடித்துக் கொல்லும்போது அப்படியே அங்கே நின்று வேடிக்கை பார்க்கிறார்.
அவரது மனைவியாக நெடுநாள் கழித்து அனன்யா. நடிக்கத் தெரிந்த நடிகையான அவரை வெறும் அழுகாச்சி காட்டி வீணடித்திருக்கிறார்கள். நட்டிக்கும், அவருக்குமான கணவன் மனைவி உறவுப்பிணைப்பு சரியாக வெளிப்படவில்லை.
படத்தின் மையம் அவர்களின் மகனாக வரும் அஷ்வத் தான். அவன் காப்பாற்றப்பட்டு விடுவான் என்று தெரிந்தாலும் அவனைக் காட்டும்போதெல்லாம் ஒரு பதைபதைப்பு வருகிறது. அதுவும் அப்பா அம்மவைப் பிரிந்து அவன் தனிமைப்படும்போது இன்னும் அந்தப் பதைபதைப்பு கூடுகிறது. அஷ்வத் அசத்தலாக நடித்திருக்கிறான்.
லால் என்ற ஆரோக்கியமான மலையாள நடிகர் தமிழைப் பொறுத்தவரை கொடூர வில்லன் மட்டுமே. இதிலும் அப்படியே. எந்த ஈவு இரக்கமும் இல்லாமல் அவர் மற்றவர்களைக் கொலை செய்துவிட்டு தன் மகனுக்கு ஒன்று எனும்போது கலங்குவது எடுபடவேயில்லை. அவர் தேவை நிறைவேறத் தேவையில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.